இன்னொரு அமைச்சர் மீதும் பாலியல் குற்றச்சாட்டு இருக்கு.. பீதி கிளப்பும் தினகரன் குரூப்!
சென்னை: இன்னொரு அமைச்சர் மீதும் பாலியல் புகாரை சுமத்த தயாராகி உள்ளார் டிடிவி தினகரன் தரப்பின் வெற்றிவேல்.
அமைச்சர் ஜெயக்குமார் பற்றி ஒரு பாலியல் புகார் அளித்திருந்தார். இது கடந்த வாரம் முழுதும் தீயாக பரவி பற்றி எரிந்தது. பொதுவாகவே, யாராக இருந்தாலும் சரி... ஒருவரின் தனிப்பட்ட விஷயத்திற்குள் மூக்கு நுழைப்பது அநாகரீகமானது. அது பிரதமராக இருந்தாலும் சரி, முதல்வராக இருந்தாலும் சரி, ஆளுநராக இருந்தாலும் சரி, அல்லது சாமான்யமாக இருந்தாலும் சரி!!
ஏன் புகார் அளிக்கவில்லை
இந்த விஷயத்தை பொறுத்தவரை அமைச்சர் ஜெயக்குமார் மீதான குற்றச்சாட்டு குறித்து இதுவரை எந்த புகாரும் எழவில்லை. இரண்டாவது, பாதிக்கப்பட்ட பெண் இதுவரை வெளி உலகுக்கு வந்து தன் முகத்தை காட்டவில்லை. எந்த பெண்ணுமே தன் பெண்மைக்கும், கற்புக்கும் உண்மையிலேயே களங்கம் வந்துவிட்டதாக நினைத்தால் எதை பற்றியும் கவலைப்படாமல் நடுரோட்டில் வந்து நின்று போராடலாம். இப்படி நிறைய பெண்கள் தனி நபராக தங்கள் வீட்டு வாசப்படிகளில் உண்ணாவிரதம் கூட இருந்துள்ளனர். அல்லது உயிருக்கு பாதுகாப்பு என்று நினைத்தால் இதே பழி சுமத்திய வெற்றிவேலை அழைத்து கொண்டு கமிஷனர் அலுவலகமே சென்று இருக்கலாம்.
நீதி வேண்டுமா?
அல்லது கோர்ட்டுகே கூட போய் இருந்திருக்கலாம். ஆனால் இதுவரை சம்பந்தப்பட்ட பெண் தரப்பிலிருந்து பேச்சு மூச்சைகூட காணோம். ஒருவகையில் இதுவும் மீ டூபோலதான். சேற்றை வாரி பூசும் செயலாகவே உள்ளது. மீ டூவிலாவது பெண்கள் தங்களாகவே துணிந்து பேசுகிறார். மத்திய அமைச்சரையே துணிந்து பாலியல் புகார் சொல்லவில்லையா என்ன? எனவே அமைச்சர் ஜெயக்குமார் உண்மையிலேயே அந்த பெண்ணின் வாழ்வை பாழாக்கினாரா இல்லையா என்பதும், அந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எடுபட வேண்டுமானால் சம்பந்தப்பட்டவர்தான் முன்வர வேண்டும்.
வருத்தம் சொன்னாரா?
நாட்டில் எத்தனையோ பாதிக்கப்பட்ட பெண்கள் இருக்கும்போது, குறிப்பிட்ட பெண்களின் மீது மட்டும் வெற்றிவேலுக்கு என்ன அக்கறை இருக்கும் என்று தெரியவில்லை. போரூர் சிறுமி ஹாசினியை சீரழித்து கொன்று எரித்தபோதும், அயனாவரம் சிறுமியை ஒரு கும்பலே நாசமாக்கி போதும் இதே வெற்றிவேல் செய்தியாளர்களை சந்தித்தாரா? அல்லது குறைந்தபட்சம் தனது கண்டனம், வருத்தத்தையாவது சொன்னாரா?
அடுத்த பகீர்
பாதிக்கப்பட்ட எல்லோருக்குமே இவர் குரல் கொடுத்திருந்தால், இந்த விஷயத்தையும் கவனத்தில் கொள்ளலாம். ஆனால் இது கிட்டத்தட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியாகவே தெரிகிறது. ஒருவேளை ஜெயக்குமார் தவறே செய்திருந்தாலும், அதை தனது அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தி கொள்வது நல்லது அல்ல. இந்நிலையில், இன்னொரு அமைச்சர் மீதும் அடுத்த பகீர் கிளப்ப தயாராகி விட்டார் வெற்றிவேல்.
அமைச்சர் யார்?
இதற்கே ஒரு தீர்வு வராத நிலையில், ‘மணி'யான அமைச்சர் ஒருவரின் அந்தரங்கம் குறித்து வெற்றிவேல் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் குறிப்பிடும் அந்த அமைச்சரின் வசூல் வேட்டையும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை பற்றி வெற்றிவேல் கூறும்போது, ‘அந்த மணியான அமைச்சர் யார் என்பதை கூடிய சீக்கிரம் தெரிவிப்பேன். இருப்பதைதான் நான் சொல்கிறேன். எத்தனை அமைச்சர்கள் மீது இதுபோன்ற புகார்கள் உள்ளது என்பதை கண்டிப்பாக சொல்வேன்' என்கிறார்.
என்ன காரணம்?
வெற்றிவேலின் இந்த ட்வீட்-டால் திரும்பவும் தமிழக அரசியல் பரபரப்பு கிளம்பி உள்ளது. இப்படி அமைச்சர்களின் பாலியல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை பேசுவதான் முதலில் வெற்றிவேலின் வேலையா? அப்படியே பேசினாலும் இவருக்கு மட்டும் இந்த ஆதாரங்கள் எங்கிருந்து கிடைக்கின்றன? இப்போது அவர் கையில் ஆதாரங்கள் இருக்கிறதென்றால் பாதிக்கப்பட்ட பெண்கள் இதுவரை ஏன் வெளியே வரவில்லை? பாதிக்கப்பட்டவர்கள் எல்லோரும் எப்படி வெற்றிவேலிடமே அமைச்சர்களை பற்றி புகார் அளிக்க என்ன காரணம்? நீண்ட கால அரசியல் முதிர்ச்சியா இதெல்லாம்?
மூத்த அரசியல்வாதிகள்
நாட்டில் இருக்கும் பிரச்சனைகளை பற்றி பேச ஆளை காணோம். அங்கே 18 தொகுதி மக்களும் தேர்ந்தெடுத்த தங்கள் பிரதிநிதியை காணோம் என்று ஒரு வருடமாக அல்லாடி கொண்டிருக்கிறார்கள். 18 பேரும் இவ்வளவு காலம் தொகுதிக்கும், தொகுதி மக்களுக்கும் என்ன செய்தார்கள் என்பதை பற்றி ஏதாவது அக்கறை இருக்கிறதா? அல்லது குடிநீர் பிரச்சனை, ஸ்டெர்லைட், 8 வழி, மீத்தேன் இப்படி மக்களை பாதிக்கிற பிரச்சனைகளை தீர்த்து விட்டார்களா? இதையெல்லாம் செய்யாமல் மூத்த அரசியல்வாதிகளே பாலியல் விவகாரங்களை வைத்து அரசியல் செய்து கொண்டிருந்தால் தமிழக மக்கள் எங்கே போய் முட்டிக் கொள்வது?