டாஸ்மாக் வேண்டாம்.. கிராம சபை தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அரசு தயங்குவது ஏன்? ஹைகோர்ட் கேள்வி
சென்னை: டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என கிராம சபை கூட்டத்தில் மக்கள் தீர்மானம் நிறைவேற்றினால் அதை நடைமுறைப்படுத்துவதில் அரசு தயக்கம் காட்டுவது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
மதுபான கடைகள் இடமாற்றம் தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி சாஹி, நீதிபதி சி.வி. கார்த்திகேயன், நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது..
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், 2004 முதல் 2020-ம் ஆண்டு வரை 35 சதவிகித மதுபான கடைகளின் எண்ணிக்கை குறிக்கப்பட்டுள்ளது, 12 மணி நேரமாக இருந்த மதுபான கடையின் பணி நேரத்தை 10 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், நிர்வாக ரீதியில் மதுபான கடைகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்..
கிராம சபை கூட்டங்களில் 8 வழி சாலை, சிஏஏ, நீட் போன்ற மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதை சுட்டிகாட்டிய அவர், கிராம சபை கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை சட்ட விதிகளுக்கு உட்பட்டு பரிசீலிப்பதாக தெரிவித்தார்..
மதுபான கடைகள் அமைப்பதற்கு முன் அந்த பகுதி மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்பதை ஏன் சட்டமாக்க கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என கிராம சபை கூட்டத்தில் மக்கள் தீர்மானம் நிறைவேற்றினால் அதை நடைமுறைப்படுத்துவதில் அரசு தயக்கம் காட்டுவது ஏன் என்று சாடினர்..
தேர்தல் வாக்குறுதிகளில் மதுவிலக்கு அமல்படுத்துவதாக கூறி ஆட்சிக்கு வரும் கட்சிகள், அதன் பின் அதை கடைபிடிப்பதில்லை என்றும் மது விற்பனையை தடுக்கும் மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வு துறையை வைத்து தமிழக அரசு மது விற்பனை செய்வதாகவும் வேதனை தெரிவித்தனர்
கோயில் பகுதியில் அசைவ உணவு கடைகள் வைக்க கூடாது என அறிவித்த அரசு, மதுபான கடைகள் வைக்க கூடாது என ஏன் அறிவிக்கவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கடந்த 16 ஆண்டுகளில் மது கடைகள் குறைந்துள்ளதாக கூறும் தமிழக அரசு, மது அருந்துவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது என அரசால் உறுதியளிக்க முடியுமா என கேள்வி எழுப்பினர்..
கடந்த 2017-ம் ஆண்டு டாஸ்மாக் கடைகள் அமைப்பதற்கான நடைமுறை குறித்து டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் பிறப்பித்த சுற்றிக்கையை, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளில் திருத்தமாக கொண்டு வருவது குறித்து 6 வாரங்களுக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஏப்ரல் 17-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்..