"இந்த" விஷயத்தில் ராமதாஸ் வாயே திறக்கவில்லையே.. ஏன்.. என்னாச்சு..!
பொள்ளாச்சி விஷயத்தில் டாக்டர் ராமதாஸ் மவுனம் காப்பது ஏன்?
சென்னை: பொள்ளாச்சி பாலியல் விஷயத்தில் டாக்டர் ராமதாஸ் ஏன் மவுனம் காக்கிறார்? எந்தவித எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லையே? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை நடந்து கிட்டத்தட்ட 2 வருடமாகிறது.. அன்று இந்த சம்பவத்தை பற்றி கேள்விப்பட்டதுமே தமிழகத்தின் அனைத்து கட்சிகளும், கொந்தளித்தன.. அதிமுக தவிர பிற கட்சிகள் ஆவேசமாகி கருத்துக்களையும், போராட்டங்களையும் முன்னெடுத்தன.
அந்த வகையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் 2 ட்வீட் போட்டிருந்தார்.. ''பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், சம்பந்தப்பட்ட அரக்கர்களை தப்பவிடக் கூடாது. இக்கொடூரத்தில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து கடுமையாக தண்டிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் சொல்லும் உண்மை என்னவெனில் நம்மைச் சுற்றி மனிதர்கள் என்ற போர்வையில் மிருகங்கள் உலவிக் கொண்டிருக்கின்றன என்பது தான். காதல் என்று நாடகமாடும் எவரையும் இளம்பெண்கள் நம்பக்கூடாது. காதல் வலை வீசி வீழ்த்தும் மனித மிருகங்களிடம் எச்சரிக்கை தேவை!'' என்றார்.
எங்கு பாலியல் வன்கொடுமை நடந்தாலும், அதை உடனடியாக தட்டி கேட்பவர் டாக்டர் ராமதாஸ்.. அநியாயங்கள், அட்டூழியங்கள் இருக்கக்கூடாது என்ற அதீத அக்கறையால் பல்வேறு கண்டனங்களை, கருத்துக்களை பதிவிட்டு வருபவரும்கூட.. 2 நாளைக்கு முன்புகூட, நாகையில்கோயிலுக்கு சென்ற ஒரு விதவை பெண்ணை 2 பேர் நாசம் செய்ததற்கும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
அதேபோல, புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளி சாமுவேலுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட் தீர்ப்பளித்திருந்ததற்கும் வரவேற்பு தெரிவித்திருந்தார்.. இப்படி ஏதோ ஒரு மாவட்டத்தில் நிகழும் கொடிய பலாத்காரங்களுக்கு எல்லாம் கண்டனத்தை சொன்ன டாக்டர் ஐயா, ஏன் பொள்ளாச்சி விஷயத்தில் மட்டும் அமைதி காத்து வருகிறார் என்று தெரியவில்லை.
திமுக இந்த விஷயத்தை கையில் எடுத்து கொண்டு விட்டது.. இனி தேர்தல் வரை இந்த விவகாரத்தை விடாது.. சிபிஐ-யே தலையிட்டு 3 பேரை கைது செய்திருந்தும், பாமக தரப்பு அமைதி காப்பது ஏனோ? கூட்டணியில் உள்ள கட்சி என்றாலும்கூட, கொரோனா விஷயத்தில் எத்தனையோ அட்வைஸ்களை பாமக தந்திருந்தது.
அதேபோல, இந்தி எதிர்ப்பு விவகாரம் உட்பட தமிழர்களை பாதிக்கும் எந்த பிரச்சனை என்றாலும், பாஜகவை கேள்வி கேட்டதையும் மறுக்க முடியாது.. அப்படியெல்லாம் துணிந்த காரியங்களை செய்த பாமக, இன்று பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் மவுனம் காப்பது ஏனோ? அல்லது இனியாகிலும் கண்டனம் பதிவு செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.