ஆபீசில் உடன்படிக்கை.. முதல்வர் பங்கேற்கவில்லை.. அதிமுக கூட்டணியில் திடீர், திடீர் வித்தியாசங்கள்
Recommended Video
சென்னை: 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலையொட்டி அதிமுக இதுவரை அமைத்துக்கொண்ட கூட்டணிகளிலேயே, புதிய தமிழகம் கட்சி உடனான கூட்டணி ஒரு வித்தியாசத்தை கொண்டிருந்ததை கவனிக்க முடிந்தது.
வரும் லோக்சபா தேர்தலையொட்டி, தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளின் தலைமைகள் கூட்டணியில் உருவாகி ஒன்றுடன் ஒன்று எதிர்த்து நிற்க ஆயத்தம் ஆகி விட்டன.
திமுக கூட்டணி பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது.
அதிமுக கூட்டணியில் புதிய தமிழகத்திற்கு கிடைக்கப்போகும் அந்த ஒரு தொகுதி எது தெரியுமா?
நட்சத்திர ஹோட்டல்கள்
காங்கிரஸ் கட்சிக்கு, திமுக தொகுதியில் மொத்தம் 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பும் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் மேலிட தலைவர்கள் முன்னிலையில் கையெழுத்தானது. இதுதான் வழக்கமான நடைமுறையும் கூட. ஆனால், அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைகள் மட்டும் வித்தியாசமாக நடைபெற்று வருகின்றது. பாமக உடனான கூட்டணியாகட்டும் அல்லது பாஜகவுடன் கூட்டணியாகட்டும், கூட்டணி உடன்படிக்கைகள் தனியார் நட்சத்திர ஹோட்டல்களில் வைத்துதான் முடிவு செய்யப்பட்டன. இது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது.
அமித்ஷா உத்தரவு
எந்தக் கட்சியின் அலுவலகத்தில் வைத்து கூட்டணி பேச்சுவார்த்தை முடிவு ஆகிறதோ, அந்த கட்சியின் கீழ் தான் கூட்டணி அமைந்ததாக பொருள். இதை தவிர்ப்பதற்காகத்தான் பாஜக மற்றும் பாமக ஆகியவை நட்சத்திர ஹோட்டலில் வைத்து கூட்டணியை இறுதி செய்ததாக கூறப்படுகிறது. அதாவது, அதிமுக கூட்டணியில்தான் தாங்கள் இருக்கிறோம் என்ற தோற்றமே வரக்கூடாது என்று, பாஜக மற்றும் பாமக நினைப்பதாகத் தெரிகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரில்தான் இந்த கூட்டணி அழைக்கப்பட வேண்டும் என்று அமித் ஷா தனது விருப்பத்தை தெரிவித்து வரும் இந்த அடிப்படையில்தான்.
புதிய தமிழகம்
அதே நேரம் இன்று ஒரு முக்கியமான மாற்றமாக புதிய தமிழகம் கட்சி உடனான கூட்டணி உடன்படிக்கை, அதிமுக தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. லோக்சபா தேர்தலுக்காக, அதிமுக கூட்டணி அதன் தலைமை அலுவலகத்தில் வைத்து உறுதி செய்யப்பட்டுள்ளது என்றால் அது புதிய தமிழகம் கட்சியுடன் மட்டுமே. ஆனால் இதிலும் ஒரு வித்தியாசமான நிலைமையை கவனிக்க முடிந்தது.
எடப்பாடி பழனிச்சாமி இல்லை
அதிமுக தனியார் ஹோட்டல்களில் வைத்து தனது கூட்டணிக் கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி தொடர்பாக உடன்படிக்கையை ஏற்படுத்திய போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மட்டுமின்றி, கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி உடன் இருந்தனர். ஆனால், இன்று புதிய தமிழகம் கட்சியுடன், அதிமுக கூட்டணி உடன்படிக்கையில் கையெழுத்திட்டபோது, பன்னீர் செல்வம் மட்டுமே பங்கேற்றார். எடப்பாடி பழனிச்சாமி இதில் பங்கேற்கவில்லை.
தனிச் சின்னம்
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் தான் கிருஷ்ணசாமி போட்டியிட வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி மிகவும் விரும்பினாராம். ஆனால் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவது என்பதில் கிருஷ்ணசாமி உறுதியாக இருந்தாராம். எனவேதான் கூட்டணி இழுபறி நீடித்து வந்துள்ளது. இருப்பினும், பாஜகவின் வற்புறுத்தலால் தனிச் சின்னத்தில், அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் போட்டியிடவுள்ளது. இதற்கு அதிமுக சம்மதித்தாலும், முதல்வர் அதிருப்தியில் இருப்பதால்தான் இன்று கூட்டணி உடன்படிக்கையின் போது அவர், உடன் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.