விஜயபாஸ்கருக்கு வராத "சப்போர்ட்".. கண்டுகொள்ளாத தொண்டர்கள்.. கழற்றிவிட்ட அதிமுக தலைமை? என்னாச்சு?
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்து வரும் நிலையில் அவருக்கு ஆதரவாக அதிமுக தரப்பு இதுவரை ஆர்ப்பாட்டம் எதையும் முன்னெடுக்கவில்லை. அதிமுக தலைவர்கள் பெரிதாக எந்த கண்டனங்களையும் வெளியிடவில்லை.
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்து வருகிறது. சென்னை வீடு உள்பட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடந்து கொண்டு இருக்கிறது. கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2021 ஏப்ரல் மாதம் வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக வழக்கு பதியப்பட்டு உள்ளது. சி.விஜயபாஸ்கர் மனைவி மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால் இந்த ரெய்டு ஏனோ அதிமுக தரப்பில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தவில்லை.
விஜயபாஸ்கர் ரெய்டு.. லஞ்ச ஒழிப்புத்துறை எப்ஐஆர்.. என்னென்ன பிரிவுகளில் வழக்கு? முழு விபரம்
போராட்டம்
கடந்த முறை இதேபோல் எம். ஆர் விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி வீடுகளில் ரெய்டு நடத்த போது அதை அதிமுக தலைமை கடுமையாக எதிர்த்தது. அதிமுக தொண்டர்கள் முன்னாள் அமைச்சர்கள் வீடுகள் முன் கூடினார்கள். அதிலும் வேலுமணி வீட்டில் ரெய்டு நடந்த போது அவரின் வீட்டிற்கு முன் பெரிய போராட்டமே நடந்தது. ரோஸ் மில்க், பிரியாணி கொடுக்கும் அளவிற்கு மக்கள் கூட்டம் அள்ளியது.
கேசி வீரமணி சோர்வு
சட்டசபை வளாகத்திற்கு முன்பாகவும் பெரிய அளவில் அன்று போராட்டம் நடந்தது. ஆனால் அதன்பின் கேசி வீரமணி வீட்டில் ரெய்டுகள் நடந்த போது அதை பெரிதாக அதிமுக நிர்வாகிகள் கண்டுகொள்ளவில்லை. பெரிதாக இதை தொண்டர்கள் பிரச்சனையாக்கி போராட்டம் செய்யவில்லை. கேசி வீரமணி வீட்டிற்கு முன்பு மட்டும் அதிமுக தொண்டர்கள் சிலர் கூடினார்கள். அங்கு மட்டும் லேசான கூட்டம் இருந்தது.
மீண்டும் சோர்வு
ஆனால் இப்போது விஜயபாஸ்கர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடக்கிறது. இவர் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். ஆனாலும் கூட இவர் வீட்டில் நடக்கும் ரெய்டுக்கு அதிமுக நிர்வாகிகள் யாரும் பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. புதுக்கோட்டை தொடங்கி சென்னை வரை ஒரு இடத்தில் கூட நிர்வாகிகள் போராட்டம் செய்யவில்லை. 43 இடங்களில் ரெய்டு நடக்கிறது. ஆனால் எந்த இடத்திலும் விஜயபாஸ்கருக்கு ஆதரவாக சின்ன போராட்டம் கூட நடக்கவில்லை.
அறிக்கை கூட இல்லை
ஏன் இதற்கு முன் நடந்த ரெய்டுகளில் கூட அதிமுக தரப்பில் இருந்து கண்டன அறிக்கை வைத்தது. அதிமுக ஒருங்கிணைப்பார்கள், இணை ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் கண்டன அறிக்கை வெளியானது. ஆனால் விஜயபாஸ்கர் ரெய்டுக்கு இதுவரை கண்டன அறிக்கை கூட அதிமுக தரப்பில் இருந்து வெளியாகவில்லை. அதிமுக தலைமையும் கண்டுகொள்ளவில்லை, தொண்டர்களும் கண்டுகொள்ளவில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
என்ன ஆச்சு?
தொண்டர்கள் எல்லாம் சலித்து போய்விட்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி, தலைமைக்கு இடையே அதிகார மோதல், நிர்வாகிகள் இடையே ஒற்றுமை இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொண்டர்கள் சலித்து போய் சோர்வடைந்து விட்டார்களோ என்ற கேள்வியை இது எழுப்பி உள்ளது. அதிமுகவிற்கு இருந்த அந்த அதிரி புதிரி தொண்டர்கள் இப்போது களத்திலேயே காணோம். அதிமுகவிற்கும் அதிமுகவினருக்கும் ஒரு விஷயம் என்றால் களமிறங்கி போராடும் பெண்களை இந்த முறை களத்திலேயே காணோம்.
நேற்றுதான் அதிமுக பொன்விழா
அதிமுகவின் பலமே பெண்கள் வாக்குகள்தான். ஜெயலலிதா மறைவிற்கு பின் அது கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து தற்போது மோசமான நிலையை அடைந்துள்ளது. நேற்று நடந்த அதிமுக பொன்விழா கொண்டாட்டத்தில் கூட அதிமுக நிர்வாகிகள் மட்டுமே இருந்தனர். பெரிய அளவில் தொண்டர்கள் கூடவில்லை. பெரிய கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தும் கூட யாரும் பெரிதாக கூடவில்லை.
சசிகலா வாய்ப்பு
அந்த அளவிற்கு அதிமுக தொண்டர்கள் சோர்வு அடைந்து விட்டார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது. சசிகலாவிற்கு இது ஒருவகையில் நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ரெய்டை எதிர்த்து, நெஞ்சை நிமிர்த்தி களத்திற்கு வந்தால் சுணங்கி போய் இருக்கும் அதிமுக தொண்டர்கள் இடையே அது எழுச்சியை உண்டாக்கும். உற்சாகத்தை ஏற்படுத்தும். விஜயபாஸ்கருக்கு ஆதரவாக சசிகலா இப்போது குரல் கொடுத்தால் அது மிக முக்கியமானதாக பார்க்கப்படும். அதிமுகவிற்கு இப்போதைய தேவை புதிய எழுச்சியும், உற்சாகமும்தான்!