திருநாவுக்கரசரை சந்தித்தேன்... ஆனா அரசியல் எதுவும் பேசவில்லை... நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்
சென்னை: திருமாவளவன், திருநாவுக்கரசரை சந்தித்ததில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் சென்னை அண்ணாநகரில் உள்ள தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரின் இல்லத்துக்கு சென்றார். தமது இளைய மகள் சவுந்தர்யாவின் திருமணத்துக்கான அழைப்பிதழ் கொடுக்க ரஜினி அங்கு சென்றதாக தகவல் வெளியானது.
திருநாவுக்கரசரின் இல்லத்தில்,விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனும் இருந்துள்ளார். மூவரும் சேர்ந்து நிற்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் குறித்து தமிழக அரசியலில் பலவாறாக பேசப்பட்டது.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் இல்லத்தில், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தது, ஏதேச்சையாக நடைபெற்ற நிகழ்வு என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்திருந்தார். இந் நிலையில், தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவரை ஏன் சந்தித்தேன் என்று
நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:திருநாவுக்கரசர் மூலம் தமது மகள் சவுந்தர்யாவுக்கு திருமணம் அமைந்தது. அதனால் அவருக்கு முதலில் அழைப்பு விடுத்தேன். திருநாவுக்கரசருடனான சந்திப்பில் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.