ராகுல் பெயரை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது ஏன்?.. ஸ்டாலின் எழுதிய கடிதம்!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது ஏன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது ஏன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
திமுக முன்னாள் தலைவர் மறைந்த கருணாநிதியின் சிலை திறப்பு விழா பொதுக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிகிறேன் என்று கூறினார். மேலும் நாட்டை ராகுல்காந்தி காப்பாற்ற வேண்டும். மேடையில் உள்ள மற்ற தலைவர்களும் ராகுலை வேட்பாளராக்க ஆதரிக்க வேண்டும். ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். ராகுல் காந்தியே வருக, நாட்டிற்கு நல்லாட்சி தருக, என்று கூறினார்.
இந்த பேச்சு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஸ்டாலின் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பாஜக ஆட்சி
அதில், மத்தியிலே நடைபெறும் "சேடிஸ்ட் மோடி" தலைமையிலான பாசிச-நாசிச ஆட்சியை வீழ்த்த ராகுல்காந்தியை முன்னிறுத்தி, அவரது கரங்களை நாம் வலுப்படுத்த வேண்டும். இந்தியாவின் பொருளாதாரத்தை நாசமடைய செய்து, மத நல்லிணக்கத்தைச் சிதைத்து, இந்தியாவின் இத்தனை வருட பன்முகத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் அழிக்கும் மோடி அரசை நாம் வீழ்த்த வேண்டும்.
ஏன் சொன்னார்
தமிழ்நாட்டை ஒட்டு மொத்தமாக வஞ்சிக்கும் மோடி அரசை வீழ்த்திட வேண்டுமென்றால் அதற்கு வலிமையான நபர் தேவை. இவ்வளவு நாட்கள் பா.ஜ.க.வின் கோட்டையாக இருந்த மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமையக் காரணமாக அமைந்தவரான ராகுல் காந்தியை முன்னிறுத்துவது தான் கூட்டணிக்கு பலமாக இருக்கும். மதசார்பற்ற சக்திகளின் ஒருங்கிணைப்புக்கு ஏற்றதாக அவரின் முன்னெடுப்பு இருக்கும் என்ற அடிப்படையிலே அவரின் பெயரை உரக்கச் சொன்னேன்.
இந்திரா காந்தி
கருணாநிதி காட்டிய வழி, நேரு குடும்பத்தில் இந்திராவால் தொடங்கி இன்றுவரை நல்ல நட்பினைக் நாம் கொண்டுள்ளோம். நாங்கள் கொடுத்து வந்த அந்த ஆதரவும் எதிர்ப்பும் நாட்டின் நலன் கருதியே எடுக்கப்பட்டவை. இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வங்கிகள் நாட்டுடைமை செய்யப்பட்டன, மன்னர் மானியம் ஒழிப்பு போன்ற முற்போக்கான திட்டங்கள் பல செய்யப்பட்டது. அதனால் 1980-ல் "நேருவின் மகளே வருக... நிலையான ஆட்சி தருக..." என முழங்கி அவரின் வெற்றிக்கு துணை நின்றவர் தலைவர் கருணாநிதி.
2004ல் திமுக
2004-ம் ஆண்டு மதசார்பற்ற ஜனநாயக ஆட்சி அமைந்திட திமுகதான் பெரிய காரணமாக இருந்தது. காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் தலைமையை ஏற்பது குறித்து அரசியல் அரங்கில் விவாதங்கள் நடந்தபோது, "இந்திராவின் மருமகளே வருக... இந்தியாவின் திருமகளே வெல்க.." என முதன் முதலாக அவர் பக்கம் நின்று முழங்கியவர் தலைவர் கருணாநிதி. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
ராகுல் கரம்
அதேபோல் இந்த முறை தயக்கத்தை உடைத்து, மயக்கத்தைத் தெளிவித்து, மதவெறியின் பிடியிலிருந்து நாடு விடுபட்டு ஜனநாயகம் நிலை நிறுத்தப்பட வேண்டுமென்றால் இன்றைய நிலையில் இந்திய தேசிய காங்கிரசின் இளந்தலைவர் ராகுல்காந்தியின் கரத்தை வலுப்படுத்த வேண்டி உள்ளது. பாசிசத்தை எதிர்த்து நிற்கும் ஜனநாயகப் படையினை ஒருங்கிணைத்து நெறிப்படுத்த வலுவான தலைமை என்ற அடிப்படையில்தான் ராகுல்காந்தியை முன்மொழிந்து இருக்கிறேன் என்று விளக்கம் அளித்து இருக்கிறார்.