முதல்வர் ஸ்டாலினின் ரேஞ்ச் ரோவர் காரிலிருந்த தேசிய கொடி இப்போ இல்லையே.. ஏன் தெரியுமா?
சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் காரில் இருந்த தேசிய கொடி இன்று அகற்றப்பட்டது.
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. நேற்று முதல்நாள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டன.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
100% வெற்றி முதல் கூட்டணி வரை.. திமுக ஆலோசனைக் கூட்டத்தில் ஸ்டாலின் வழங்கிய அறிவுரைகள்.. பரபர தகவல்
கூட்டணி பேச்சுவார்த்தை
தேர்தல் அறிவிப்பை முன்னிட்டு தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் குதித்து உள்ளன. இன்று காலையில் ஒரு பக்கம் பாஜக சார்பில் கூட்டம் நடத்தப்பட்டது. இன்னொரு பக்கம் அதிமுக சார்பில் தேர்தல் கூட்டம் நடத்தப்பட உள்ளது. அதேபோல் நேற்று திமுக சார்பில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து வரும் நாட்களில் தேர்தல் கூட்டணிகள், வேட்பாளர்கள் குறித்த அறிவிப்புகளை கட்சிகள் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் விதிகள்
இதையடுத்து தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால். தமிழ்நாட்டில் தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் போலீசார் சாலைகளில் தீவிர கண்காணிப்பு சோதனைகளை செய்து வருகிறார்கள். பணம் எடுத்து செல்லப்படுவதை தேர்தல் ஆணைய அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் அரசியல் கட்சிகள் முறையாக தேர்தல் விதிகளை கடைபிடிக்கின்றனவா என்றும் தேர்தல் ஆணையம் சோதனை செய்து வருகிறது.
தேசிய கொடி விதி
அதன் ஒரு கட்டமாக தற்போது தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் காரில் இருந்த தேசிய கொடி இன்று அகற்றப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகளின்படி அரசியல் கட்சியினர் தங்கள் வாகனங்கள், பிரச்சாரங்கள், கூட்டங்களில் தேசிய கொடிகளை பயன்படுத்த கூடாது. தேர்தல் விதிகள் அமலுக்கு வந்த நாளில் இருந்து விதிகள் வாபஸ் பெறப்படும் வரை தேசிய கொடிகளை அரசியல் தலைவர்கள் தங்கள் கார்களில் பயன்படுத்த கூடாது. சட்டப்படி மாநில முதல்வர் தனது காரில் கொடிகளை பயன்படுத்துவது வழக்கம்.
தேசிய கொடி நீக்கம்
ஆனால் தேர்தல் காலத்தில் இப்படி கொடிகளை பயன்படுத்த கூடாது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலினின் ரேஞ்ச் ரோவர் காரிலிருந்த தேசிய கொடி இன்று நீக்கப்பட்டது. தேசிய கொடி இன்றி அவரின் வாகனம் ப்ரோடோகலை பின்பற்றி இயக்கப்பட்டது. இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் நடக்க உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது.