திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுவது ஏன்?... அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி
சென்னை: திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறி உள்ளார்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கூட்டுறவு சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்க்கை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
கூட்டுறவுத்துறை சார்பில் இதுவரை 28 பெட்ரோல் பங்க்குகள் திறக்கப்பட்டுள்ளன, மேலும் 13 பெட்ரோல் பங்க்குகள் திறக்கப்படும். மக்களுக்கு தேவையான மேலும் பல பொருட்களை கூட்டுறவு துறை சார்பில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. சரியான விலையில் தரமான பெட்ரோல் கிடைப்பது உறுதி செய்யப்படும்
ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பது குறித்து முடிவு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் பரிந்துரை அரசுக்கு கிடைத்ததும் சம்பள உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும். மக்களுக்கு தேவையான மேலும் பல பொருட்களை கூட்டுறவு துறை சார்பில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளன.
ரேஷன் கடைகளில் கூடுதல் பொருட்களை வாங்கும்படி வற்புறுத்தக்கூடாது. எடை குறையாமல் பொருட்களை வழங்க வேண்டும். முறையாக பொருட்கள் வழங்காத ரேஷன் கடைகள் மீது புகார் தெரிவிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ சுறினார்.
மேலும், இருமொழி கொள்கை தான் தமிழக அரசின் கொள்கை என்பதை முதலமைச்சர் விளக்கமாக கூறி இருக்கிறார். மும்மொழி கொள்கையை நாங்கள் எதிர்க்கிறோம். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தியை எதிர்ப்பதாக கூறுகிறார். ஆனால் அவருடைய உறவினர்கள் நடத்தும் பள்ளியில் இந்தி கற்பிக்கப்படுகிறது. தமிழ் பேசினால் அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்கு என்ன சொல்கிறார் என்று கேள்வி எழுப்பினார்.
இதே விழாவில் பேசிய மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், கூட்டுறவுத்துறை என்பது பணக்காரத்துறை என்றும், பணக்கார அமைச்சரான செல்லூர் ராஜூ, இப்பகுதியில் கூட்டுறவு துறைக்கு சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் கட்டி தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். அமைச்சர் ஜெயக்குமாரின் கோரிக்கை கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என அதே மேடையில் அமைச்சர் செல்லூர் ராஜூ உறுதியளித்தார்.