வெறுத்தே போய்ட்டாங்க.. குறை மட்டுமே சொல்லி.. இப்படியே இழுழுழுழுத்து கொண்டிருந்தால் எப்படி..?
ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது பற்றி ஏன் ஒரு முடிவு அறிவிக்காமல் இருக்கிறார்
சென்னை: ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா... அதை நேரடியாகவும், போட்டு உடைப்பது போலவும் அறிவிப்பதில் என்ன தயக்கம்? என்ற கேள்வி அவரது ரசிகர்களுக்கு மட்டுமில்லை, தமிழக மக்களுக்கு மட்டுமில்லை.. இந்திய மக்களுக்கே ஏற்பட்டு விட்டது.. காரணம் அந்த அளவுக்கு எல்லாரும் டயர்ட் ஆகிவிட்டார்கள்!
நடுவில் ஒரு மாதமாக அமுங்கி கிடந்த ரஜினியின் அரசியல் வருகை குறித்த பேச்சு நேற்று முதல் மறுபடியும் சூடுபிடித்தது.. வழக்கம்போல் மீடியா முழுவதும் ரஜினியின் பெயரே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது.
ஒருவேளை அரசியலுக்கு வருகிறாரோ? எதை அறிவிக்க போகிறார்? என்னவென்று அறிவிக்க போகிறார்? என்ற யூகங்களும், சந்தேகங்களும் விடிய விடிய வலுவாகி கொண்டே இருந்தது.
என் முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிப்பேன்: ரஜினிகாந்த்
சந்திப்பு
சொன்னதுபோலவே, நிர்வாகிகளையும் சந்தித்து பேசினார்.. அவர்கள் என்ன பேசினார்கள் என்பது நமக்கு முழுமையாக தெரியாது.. இன்னென்ன விஷயங்கள்தான் ரசிகர்களுடன் ரஜினி பேச வேண்டும் என்பதையும் நாம் நிர்ணயிக்க முடியாது.. அது அவர் விருப்பம்.. ஆனால், ஒருசில தகவல்கள் மட்டும் வெளியானதை பார்த்தால், கட்சியை இப்போதைக்கு ரஜினி ஆரம்பிப்பதுபோல இல்லை என்று மட்டும் தெளிவாகி உள்ளது.
அறிவிப்பு
இன்று சாயங்காலம் கட்சி ஆரம்பிப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என்று ரசிகர் மன்ற தரப்பில் சொல்லப்பட்டாலும், ரஜினியே வந்து நேரடியாக சொல்லும்வரை எதையுமே மக்கள் நம்ப தயாராக இல்லை என்பது வேறு விஷயம். ஆனால், கட்சி ஆரம்பிப்பேன், ஆரம்பிக்க முடியாது, இதில் இரண்டில் ஒன்றை சொல்ல ஏன் ரஜினி இவ்வளவு தயங்குகிறார் என்றுதான் யாருக்கும் புரியவே இல்லை.
பொறுமை
ரஜினியை பொறுத்தவரை மிக நல்ல மனிதர்.. மென்மையானவர்.. பொறுமையானவர்.. நாலும் தெரிந்தவர்.. அனைத்தையும் கூர்மையாக கவனித்து வருபவர்.. இருந்தாலும், அனைத்தையும் மீறி ரஜினியிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது அவரது அரசியல் வருகையைதான்.. அதற்காகத்தான் கால் நூற்றாண்டாக தவித்து காத்து கிடக்கிறார்கள்.. இந்த அளவுக்கு தன் மீது நம்பிக்கை வைத்து வரும் அவர்களுக்கு ரஜினி இதுவரை என்ன செய்திருக்கிறார் என்று தெரியவில்லை.. ஆனால், அவர்களை கடிந்து கொள்வது மட்டும் அடிக்கடி நடக்கிறது.
ஆதாரம்
யார் கைவிட்டாலும், ரஜினியை கைவிடாதவர்கள் ரசிகர் மன்ற நிர்வாகிகள்தான்.. ஆனால் இவர்களை தொடர்ந்து சமீப காலமாக தொடர்ந்து குறை சொல்லி வருகிறார் ரஜினி. உங்களில் சிலர் சரியில்லை.. என் பெயரைக் கெடுக்கிறீர்கள்.. என்னிடம் ஆதாரம் இருக்கிறது என்று தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் அவர்களை தொடர்ந்தும் தன்னுடன் வைத்திருக்கவும் செய்கிறார். இதுதான் புரியவில்லை.
கேள்வி
பெயரைக் கெடுப்பவர்களை ஏன் தொடர்ந்து அவர் வைத்திருக்கிறார் என்பது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது. தவறு செய்கிறார்கள் என்றால் முதல் வேலையாக தூக்கி எறியலாமே.. அதைச் செய்யக் கூடியவர்தான் ரஜினியும். அவருக்கு இது மாதிரி ஆட்களைப் பிடிக்காது என்பதால், அதை அவர் செய்திருக்கலாமே என்ற கேள்வியும் எழுகிறது.
துணிச்சல்
தொடர்ந்து நிர்வாகிகள் சிலரை குறை சொல்லிட்டே இருப்பது சரியில்லை.. முதலில் ரஜினி பெயரில் தவறு செய்ய எந்த நிர்வாகிகளுக்கும் துணிச்சல் வராது.. அப்படியே ஓரிருவர் தவறு செய்திருந்தாலும், தப்பானவர்களாக இருந்தாலும், அவர்களை நீக்கிவிட்டு புது நிர்வாகியை ரஜினி நியமிக்கலாமே? அதை ஒத்த அறிக்கையில் வெளியிட்டு சொல்லலாமே? இதற்கு எதற்கு ஆலோசனை? இதற்கு எதற்கு இவ்வளவு பீடிகை?
கெட்ட பெயர்
அதுமட்டுமல்ல, இவரது நிர்வாகிகளை இவரே குறை சொன்னால், மக்கள் என்ன நினைப்பார்கள்? இவ்வளவு காலம் உண்மையாக இருந்த மற்ற நிர்வாகிகளின் மீதும் நம்பகத்தன்மை போகாதா? காரணம் எந்த நிர்வாகி பெயரை கெடுக்கிறார் என்று இதுவரை யாருமே சொல்லவில்லை. எனவே ஒட்டுமொத்தமாக அத்தனை பேர் மீதும்தான் சந்தேகப் பார்வை விழும். அது இயல்புதானே. ஒருவேளை எல்லாருமே தவறானவர்களாக ரஜினி நினைத்தால், மன்றத்தையே கலைத்துவிட்டு, வேறு புது நிர்வாகிகளை நியமனம் செய்யலாமே? ரஜினிக்கு இல்லாத உரிமையா? இது சம்பந்தமாக யார் அவரை கேட்க போகிறார்கள்?
இடிதாங்கி ரசிகர்கள்
புதியவர்களையும் நியமித்து விட்டு உடனடியாக அரசியலுக்கும் வரலாமே.. அதைச் செய்யாமல் திரும்பத் திரும்ப இந்த நிர்வாகிகளை கூப்பிட்டு கூப்பிட்டு அவர்களை திட்டி மட்டுமே அனுப்பி கொண்டிருந்தால், ரசிகர்கள் நொந்து போக மாட்டார்களா? ஒருவேளை திடீரென கட்சியே ஆரம்பித்தாலும், அவர்கள் எப்படி வந்து ஆர்வத்துடன் வேலை பார்ப்பார்கள்? தன்னை இத்தனை காலம் தூக்கி வைத்து கொண்டிருப்பதும், இனிமேல் தூக்க வைத்து கொண்டாட போவதும் அந்த "இடிதாங்கி" ரசிகர்கள்தான்.. அவர்களையும் ரஜினி இழந்துவிடக்கூடாது என்றுதான் நமக்கு சொல்ல தோன்றுகிறது.