சென்னையில் கொரோனா மீண்டும் அதிகரிப்பது ஏன்?.. மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி விரிவான விளக்கம்!
சென்னை: தமிழ்நாடு சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளால் சென்னையில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்தது. பாதிப்பில் முதலிடத்தில் இருந்த சென்னை, கோவையை முன்னுக்கு தள்ளி விட்டு பின்னால் சென்று சாதித்து காட்டியது.
Recommended Video
இப்படி கொரோனாவை கட்டுக்குள் வைத்திருந்த சென்னையில் கடந்த சில நாட்களாக பாதிப்பு அதிகரித்து வருவது அதிர்ச்சியை எற்படுத்தி இருக்கிறது. அதாவது நீண்ட நாட்களுக்கு பிறகு தொற்று 200-ஐ கடந்துள்ளது.
மக்கள் அதிகம் கூடும் பகுதிகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், போலீஸ் அதிகாரிகள் மூட உத்தரவிடலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார்.
காங். மிஷன் 2022-க்கு செட்பேக்- மாஜி மணிப்பூர் தலைவர் பாஜகவில் இணைந்தார்- 8 எம்.எல்.ஏக்கள் எஸ்கேப்?
சென்னை மாநகராட்சி நடவடிக்கை
இதனை உடனே கையில் எடுத்த சென்னை மாநகராட்சி மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான தியாயராய நகர், புரசைவாக்கம் உள்பட 9 இடங்களில் வணிக வளாகங்கள், கடைகள் அடைக்கப்பட்டன. மயிலாப்பூர், வடபழனி உள்ளிட்ட முக்கிய கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மெரினா கடற்கரை பகுதிகளில் மக்கள் கூடுவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. ஓட்டல்களில் கடும் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநகர ஆணையர் விளக்கம்
சென்னை மாநகராட்சியின் அதிரடி உத்தரவால் தி.நகர் ரங்கநாதன் தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க சென்னையில் திடீரென கொரோனா அதிகரிப்பது ஏன்? என்ற கேள்வி எழுந்துளளது. கடற்கரை, பூங்காக்களில் மக்கள் நடைபயிற்சி சென்று வருபவர்களிடம் மாஸ்க் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் பெரும்பாலானோர் மாஸ்க் அணியவில்லை என்று சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.
தடுப்பு வழிமுறைகளை பின்பற்றவில்லை
சென்னையை பொறுத்தவரையில் மார்கெட்டுகள், மக்கள் அதிகம் கூடும் கடைகளுக்கு சென்றவர்கள் முறையாக மாஸ்க் அணிவதில்லை, தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுவதில்லை. இதுவும் சென்னையில் கொரோனா அதிகரிப்பதுக்கு காரணமாகி விட்டது என்று ககன்தீப் சிங் பேடி சுட்டி காட்டியுள்ளார். மேலும், வெளிநாடு, வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களுக்கும், சுற்றுலாத் தலங்களுக்கு சென்று சென்னை வந்தவர்கள் மத்தியில் தொற்று அதிகரித்துள்ளது என்பது சென்னை மாநகராட்சி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக ககன்தீப் சிங் பேடிதெரிவித்துள்ளார்.
மக்களுக்கு அறிவுரை
சென்னை மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் ஆனால் மக்கள் முறையான பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் சென்னை மாநகர ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா பரவலை தடுக்க சென்னையில் தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ரயில் நிலையங்களில், விமான நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ககன்தீப் சிங் பேடிகூறியுள்ளார்.
பொறுப்பு வேண்டும்
சென்னை மாநகர ஆணையர் கூறியதுபோல் சென்னையில் பெரும்பாலான மக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றுவது கிடையாது. இன்று கூட காசிமேடு மீன் மார்க்கெட்டில் மாஸ்க், சமூக இடைவெளியை மறந்து ஏராளாமான மக்கள் திரண்டுள்ளனர். கொரோனாவை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றால் மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.