அன்று வராத மழைக்காக அலறினார்கள்.. இன்று புயலடித்து சூறையாடியும் கம்மென்று இருப்பது ஏன்?
ரெட் அலர்ட் என்று அன்று பேசியவர்கள் இன்று அமைதி காப்பது ஏன்?
சென்னை: ரெட் அலர்ட் என்று பெயர் வைத்து அன்று செய்த "மழை அரசியல்" இன்று கரைந்து வெளுக்க ஆரம்பித்து விட்டது.
கடந்த அக்டோபர் மாதம் 5 மாநிலங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், நம்ம மாநிலத்தின் 2 தொகுதிகளான திருவாரூர், திருப்பரங்குன்றத்துக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மேலும் இடைத்தேர்தலை நடத்துவதற்காக முதல்வர் திருப்பரங்குன்றத்தில் கூட்டம் நடத்தினார். தேர்தலுக்கு தயாராகவே இருக்கிறோம் என்று கூட கூட்டத்தில் பேசினார் முதல்வர். ஆனால் வரப்போகும் மழையை காரணம் காட்டியது அரசு. குறிப்பாக சொல்லப் போனால், தலைமை செயலாளர்!!
தலைமை செயலாளர்
இடைத்தேர்தல் நடத்தலாமா, வேண்டாமா என்பதை வழக்கமாக தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும். ஆனால் தலைமை செயலாளர் இப்படி ஒரு அறிவிப்பு அன்று அறிவித்தார். இப்படி முடிவெடுப்பது தமிழ்நாட்டுக்கு புதுசு. மழை வரப்போகிறது என்பதால் தேர்தலை நடத்த வேண்டாம் என்று ஒரு கடிதத்தை தலைமை செயலாளர் தேர்தல் ஆணையருக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்பட்டது.
ரெட் அலர்ட்
எப்போது கடிதம் அனுப்பினார், யாரை ஆலோசனை செய்தார் என்பதெல்லாம் நாட்டு மக்களுக்கு அன்றைய தினம் தெரியாது. தமிழக முதலமைச்சரின் அனுமதி இல்லாமல் தலைமை செயலாளர் கடிதத்தை டெல்லிக்கு அனுப்பி இருக்க முடியாது. இவ்வளவு காலமாக "ரெட் அலர்ட்" என்ற கேள்விப்படாத ஒரு சொல்லை சொல்லி கிலியை ஏற்படுத்தினார்கள்.
ஒத்தி வைத்தனர்
இன்னொரு பக்கம் 5 தேசிய பேரிடர் மீட்பு குழுவை அரக்கோணத்திலிருந்து வரவழைத்து 4 மாவட்டங்களுக்கும் விரைந்து ஓட செய்தார்கள். கடைசியில் தமிழகத்தில் பருவமழையால் இடைத்தேர்தலை நடத்த முடியாத சூழல் இருப்பதாக தலைமை செயலாளர் கேட்டுக்கொண்டதால்தான், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று பேட்டியில் உரக்கவே சொன்னார் தலைமை தேர்தல் அதிகாரி.
எதற்காக அனுமதி
இது சம்பந்தமாக டிடிவி தினகரன், "மழையெல்லாம் ஒரு காரணமா? ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்கூட டிசம்பர் மாதம்தானே வந்தது?" என்று கேட்டார். ஆனால் மறுநாளே ரெட்அலார்ட் வாபஸ் பெறப்பட்டதாக அறிவித்தும் விட்டது. வராத மழைக்கே தேர்தலை தள்ளி வைத்த தமிழக அரசு, இன்று எதிர்காலமே நாசம் ஆகும் அளவுக்கு கஜா புயல் அடித்த திருவாரூரில் எதற்காக இப்போது இடைத்தேர்தலை நடத்த அனுமதித்துள்ளது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சாத்தியமில்லை?
திருவாரூர் மாவட்டத்துக்கு இன்னும் நிவாரண பணிகள் முழுமையாக தரப்படவில்லை என்று தமிழக அரசுக்கு நன்கு தெரியும்தானே? தெரிந்தும் எதற்காக தேர்தலை சந்திப்போம் என்று கூறியது? தேர்தல் ஆணையம் தேதி குறித்தபோதே, இடைத்தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என்று ஏன் சொல்லவில்லை?
சர்க்கரை பொங்கல்
தேர்தல் எங்களுக்கு சர்க்கரை பொங்கல் என்று சொல்லிவிட்டு, அன்றைய தினமே அதிமுக எதற்காக இடைத்தேர்தலை நிறுத்த கோர்ட்டுக்கு செல்ல வேண்டும்? வரப்போகும் மழைக்கே அன்று தேர்தலை நிறுத்திய தலைமைச் செயலாளர், புயல் பாதித்த திருவாரூரில் தேர்தல் வேண்டாம் என ஏன் மறு கடிதம் தரவில்லை? என்ற கேள்விகளும் கூடவே எழுகின்றன.
ஒதுங்கி உள்ளது
அதுவும் இல்லாமல் வரப்போகிற தேர்தலை சந்திக்க அதிமுக விரும்பவில்லையோ என்றும் நினைக்க தோன்றுகிறது. அதற்கேற்றவாறு பாரம்பரிய கட்சி, ஆளும் அதிமுக அரசு இன்னமும் ஒரு தொகுதிக்கு வேட்பாளரை அறிவிக்காதது சந்தேகத்தை எழுப்புகிறது. அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவோ ஆரம்பத்திலிருந்தே தெளிவாகவே இடைத்தேர்தல் விஷயத்தில் ஒதுங்கியே உள்ளது.
ஆக மொத்தத்தில் இப்போதெல்லாம் தேர்தலை நடத்துவதில் கூட அரசியல் புகுந்து விளையாடுகிறதோ என்ற சந்தேகமும், அச்சமும் மக்கள் மனதில் விழுந்து விட்டதை மறுக்க முடியாது.