ஜனாதிபதியே சொல்லிட்டாரு.. அப்புறம் என்ன.? தமிழை ஐகோர்ட்டின் அலுவல் மொழியாக்குங்க.. ராமதாஸ்
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிப்பதில் இன்னும் தாமதம் ஏன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். உயர்நீதிமன்றத் தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்த்து வழங்க ஜனாதிபதியே வலியுறுத்தியுள்ளார்.
தமிழக மக்களும், சட்டப்பேரவையும் எந்த கோரிக்கையை முன்வைத்து 13 ஆண்டுகளாக காத்துள்ளனரோ, அதில் ஒரு பகுதியை குடியரசுத் தலைவரே வலியுறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது என ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ராமதாஸ், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியிலும், கேரள உயர்நீதிமன்றத்தில் மலையாள மொழியிலும் தீர்ப்புகளின் சான்றளிக்கப்பட்ட நகல்களை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி நேற்று சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசினார்.
குடியரசுத் தலைவரின் இந்த யோசனை மிகவும் சிறப்பானது. மக்களிடம் நீதியை கொண்டு செல்வது மட்டும் முக்கியமல்ல, அதை அவர்களுக்கு புரியும் மொழியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதும் மிகவும் முக்கியம் என்று கூறியுள்ள குடியரசுத் தலைவர், அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே தீர்ப்புகளை உள்ளூர் மொழிகளில் மாற்றி வழங்கும்படி தாம் வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விஷயத்தில் குடியரசுத் தலைவரை விட கூடுதல் தொலைநோக்குடன் தமிழ்நாடு செயல்பட்டு வருகிறது. உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளூர் மொழிகளில் இருந்தால் மட்டும் போதாது. உயர்நீதிமன்ற வழக்கு விசாரணையே உள்ளூர் மொழியில் தான் இருக்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க கோரி கடந்த 2006-ல் தமிழக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
புதிய தேசிய கல்வி கொள்கையை ஆராய 9 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைத்தது திமுக!
பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் உடனடியாக ஒப்புதல் அளித்திருந்தால், புதிய குடியரசுத் தலைவரின் கனவு நனவாகி 13 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும்.
கடந்த 13 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள வரவேற்கத்தக்க மாற்றம் என்னவென்றால், உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் மாநில மொழிகளில் வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட குடியரசுத் தலைவரும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் நமக்கு கிடைத்திருக்கிறார்கள் என்பது தான். இத்தகைய வாய்ப்பு அமைவது மிகவும் அதிசயம்.
தமிழகத்தின் கோரிக்கை என்பது குடியரசுத் தலைவர் கூறுவதை விட சற்று அதிகம் தான் என்றாலும், அது அரசியல் சட்டப்படி வழங்கப்பட வேண்டிய உரிமை. இதற்கு முன் 348(2) ஆவது பிரிவின்படி மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களின் அலுவல் மொழியாக இந்தி மாற்றப்பட்டுள்ளது.
அதனால்அம்மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட அதே உரிமை சென்னை உயர்நீதிமன்றத்துக்கும் வழங்கப்பட வேண்டும்.சென்னை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் முன்வர வேண்டும். அவ்வாறு செய்ய அவர்கள் முன்வராத பட்சத்தில் தமிழக பேரவையின் நடப்புக் கூட்டத்தில் அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசின் வழியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்து சாதிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.