ஜெ. நினைவிடம் தொறந்து 6 நாள்தான் ஆச்சு.. அதுக்குள்ள மூடலா.. மீண்டும் "அவர்" ஓங்கி அடிப்பதை தடுக்கவோ?
சென்னை: ஜனவரி 27ஆம் தேதி திறக்கப்பட்ட ஜெயலலிதா நினைவிடம் தற்போது திடீரென பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
ஜெயலலிதாவுக்கு பினீக்ஸ் பறவை வடிவில் நினைவிடம் கட்டும் பணிகளை அதிமுக அரசு தொடங்கியது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி நினைவிடம் திறப்பு விழாவை வெகு விமரிசையாக செய்தது.
இதற்காக ஒரு ரயில் முழுக்க தொண்டர்களை மதுரையிலிருந்து அழைத்து வந்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ. இது போல் பல்வேறு ஊர்களில் இருந்தும் தொண்டர்கள் வந்திருந்தனர்.
எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்கள் திடீர் மூடல்.. பொதுப் பணித் துறை அறிவிப்பால் மக்கள் ஏமாற்றம்
அருங்காட்சியகம்
இத்தனை நாட்களாக ஜெயலலிதா நினைவிடத்தையும் அருங்காட்சியகத்தையும் அறிவு திறன் பூங்காவையும் பொதுமக்கள் பார்வையிட்டு வந்தனர். இந்த நிலையில் திறந்து ஆறு நாட்கள் ஆன நிலையில் ஜெயலலிதா நினைவிடம் செல்ல நேற்று இரவு முதல் திடீரென பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
அவசர கோலம்
பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் பொதுமக்களை அனுமதி இயலவில்லை என தமிழக பொதுப் பணித் துறை அறிவிப்பு பலகை வைத்துள்ளது. ஆக 100 சதவீதம் பணிகள் முடிவடையாமல் அவசர கோலத்தில் திறந்தது, திடீர் தடை விதித்தது எல்லாம் சசிகலாவினால்தான் என சொல்லப்படுகிறது.
விடுதலை
கடந்த ஜனவரி 27-ஆம் தேதி சசிகலா சிறையிலிருந்து விடுதலையாவார் என பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம் உறுதி செய்திருந்தது. இதையடுத்து சசிகலாவின் நினைப்பே வரக் கூடாது என்பதற்காக அவர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட அதே தேதியில் ஜெயலலிதாவின் நினைவிடத்தை அதிமுகவினர் திறந்து வைத்து தொண்டர்களின் மனங்களை குளிர வைத்ததாக சொல்லப்படுகிறது.
தனிமை
அது போல் அவர் 27-ஆம் தேதி சென்னை வந்துவிட்டால் எங்கே போயஸ் தோட்டம் பக்கம் சென்றுவிட்டால் என்ன செய்வது என்பதால் வழக்கு நிலுவையில் இருந்தாலும் அந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையத்தை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்றி திறக்கப்பட்டது. இதனிடையே சசிகலாவுக்கு கொரோனா பாதிப்பு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது பெங்களூரில் ஒரு பண்ணை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
சென்னை
பெங்களூரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சசிகலாவை சந்திக்க ஏராளமான ஆதரவாளர்கள் பண்ணை வீட்டை நோக்கி செல்கிறார்கள். இதனால் இவரது வருகை நிச்சயம் அதிமுகவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். தற்போது தனிமைப்படுத்தப்பட்ட சசிகலா வரும் பிப்ரவரி 6 அல்லது 7 தேதிகளில் சென்னை வருவார் என சொல்லப்படுகிறது.
சபதமேற்ற சசிகலா
அவ்வாறு வரும் அவர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்லக் கூடும் என தெரிகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு சிறைக்கு செல்லும் முன்னர் ஜெயலலிதா சமாதியை பார்த்த சசிகலா அந்த சமாதியில் மூன்று மூறை ஓங்கி அடித்து சபதம் எடுத்தார். அது போல் இந்த முறையும் அவர் ஏதாவது சபதம் ஏற்க வந்தால் என்ன செய்வது என்பதற்காகவே ஜெயலலிதா நினைவிடங்களுக்கு பொதுமக்கள் அனுமதி திடீர் தடை செய்யப்பட்டுள்ளதாக அமமுகவினர் தெரிவிக்கிறார்கள்.
திறந்தது ஏன்
எனவே அதிமுகவினருக்கு இப்போதே சசிகலா குறித்த அச்சம் வந்துவிட்டதாகவும் அமமுகவினர் பெருமிதம் பொங்க சொல்கிறார்கள். ஆனால் இதை அதிமுக மறுக்கிறது. இதுகுறித்து அதிமுகவினர் கூறுகையில் சசிகலா வருகைக்காக ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டதாக சொல்வதே தவறானது. அன்றைய தினம் நல்ல நாள் என்பதால் அன்று திறந்து வைத்தோம்.
பொதுமக்களுக்கு தடை
அது போல் பராமரிப்புப் பணிகள் நடைபெறும் இடத்தில் மக்கள் சாரை சாரையாக நுழைந்தால் அசம்பாவிதம் ஏற்படும். பொதுவாக வீடு, நிறுவனம், வணிக கட்டடங்கள் என எதுவாக இருந்தாலும் அவை 80 சதவீதம் கட்டி முடிக்கப்பட்டு கிரகபிரவேசம் செய்யப்படும். அதுபோல்தான் ஜெயலலிதா நினைவிடமும் 80 சதவீதம் பணிகள் நிறைவுற்று தற்போது மொத்தமாக முடிக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.