அவர் மட்டும் ஏன் 'இனமான' பேராசிரியர்.. அன்பழகன் அடைமொழியின் அசர வைக்கும் பின்னணி!
சென்னை: எத்தனையோ பேராசிரியர்கள் இந்த மண்ணுலகில் வாழ்ந்து மறைந்துள்ளனர்.. எத்தனையோ இனப் போராளிகளை உலகம் கண்டுள்ளது. ஆனால் யாருக்குமே கிடைக்காத தனிச் சிறப்பு, உயர் அடை மொழி ஒன்று, மறைந்த திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனுக்கு மட்டுமே உண்டு.
Recommended Video
"இனமான பேராசிரியர்" என்பதுதான் அந்த பெயர். முதல்வர் இருக்கையை அலங்கரித்த, சிறந்த பேச்சாளர்களான அறிஞர் அண்ணா, கருணாநிதி போன்றோருக்கு வழங்கப்படாத இந்த அடை மொழி அன்பழகனுக்கு மட்டும் எப்படி பொருந்திப்போனது?
இந்த காலகட்டத்தில் இளைஞர்களாக உள்ளோர் பலருக்கும் கேள்வி எழாமல் இருக்க முடியாது. இதற்கு காரணம் இருக்கிறது.
பெருமிதம்
அன்பழகன் ஜாதி, மதப் பற்றுக்களை எதிர்த்தார். ஆனால் இனப் பற்றை உயிரென போற்றினார். தமிழன் என்ற மொழிப் பெருமிதம், திராவிட இனப் பெருமிதம் அவரிடம் அளப்பறிய இருந்தது. தமிழன் என்றோர் இனம் உண்டு.. தனியே அவருக்கு ஒரு குணமுண்டு என்பார்களே, அந்த குணம் வாய்க்கப்பட்டவர் அன்பழகன். அந்த குணம்தான், இன மானம். இன மானம் காக்க என்ன செய்தார் என்பதுதான் உங்கள் அடுத்த கேள்வியாக இருக்கும்.
இனமானம்
அன்பழகன் 40க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். 'தமிழர் திருமணமும், இனமானமும்' என்ற பெயரிலான புத்தகம் அதில் முக்கியமானது.
அவர் எழுதிய அந்த புத்தகத்திலிருந்துதான், சுயமரியாதை திருமணங்களின் நடைமுறைகள் அப்போதைய இளம் தலைமுறையினரால் அறிந்து கொள்ளப்பட்டன.
தமிழர் திருமணம்
சங்க இலக்கியங்களில் தமிழர்கள் திருமணம் எப்படி நடைபெற்றது, பிற்காலத்தில் வைதீக கலப்பு எப்படி கொண்டு வரப்பட்டது, தமிழர் இனத்தின் தனித்துவத்தை மீட்க பழைய திருமண முறையை எப்படியெல்லாம் கைகொள்வது என்பது பற்றி அந்த புத்தகத்தில் விரிவாக எழுதியிருந்தார், அன்பழகன். "தொண்டா, துவேஷமா" என்ற புத்தகம் பிராமணர்கள் மற்றும் ஜாதி ஏற்பாடுகள் குறித்து நிறைய பேசக்கூடிய ஒன்று. பிராமணர்களை நாங்கள் எதிர்க்கவில்லை, திருத்துகிறோம் என்று அன்பழகன் இதுதொடர்பான ஒரு கேள்விக்கு பதில் கூறியிருப்பார்.
புது வாழ்வு பத்திரிக்கை
'புது வாழ்வு' என்ற பெயரில் அன்பழகன், பத்திரிக்கை துவங்கினார். வைதீக அரசியலால் தமிழன் தாழ்ந்துவிட்டான், அவனுக்கு புது வாழ்க்கை தேவை என்று பொருள்படும் வகையில், 'புது வாழ்வு' என்று பத்திரிக்கைக்கு பெயர் சூட்டினார். எங்கெல்லாம் தமிழர் பாதிக்கப்பட்டனரோ, அப்போது, முதல் ஆளாக துடிக்கும் இதயம் அன்பழகனுடையது. அதனால்தான், அவர் இதய துடிப்பு நிற்கும் வகையில், இனமான பேராசிரியர் என்று அழைக்கப்பட்டார்.