கமலின் 'ஒன்லி சிட்டி' கான்செப்ட்.. தேர்தலில் எடுபடுமா? மனதுக்குள் புழுங்கும் நிர்வாகிகள்
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, கிராமப்புறங்களில் இன்னும் வலிமையான ஆதரவு கிடைக்கவில்லை என்று கட்சியினர் முணுமுணுப்பதை நாம் கேட்க முடிகிறது.
ஏப்ரல் 6 அன்று தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ள அரசியல் கட்சிகள், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின் கிளைமேக்ஸுக்கு வந்துவிட்டன. குறிப்பாக, சட்டமன்ற தேர்தலில் முதன் முறையாக போட்டியிடும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, சில பல இழுபறிக்கு பிறகு கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடை இறுதி செய்துள்ளது.
ஹாப்பி நியூஸ், இனி மாஸ்க் அணிய தேவையில்லை.. ஆனால் இதை பண்ணி இருக்கனும்.. அமெரிக்கா முக்கிய அறிவிப்பு
மக்கள் நீதி மய்யம் 154 இடங்களிலும், சமக மற்றும் ஐஜேகே ஆகியவை தலா 40 இடங்களில் போட்டியிட உள்ளன. இதற்கான ஒப்பந்தம் நேற்று (மார்ச்.8) கையெழுத்தாகி உள்ளது. இந்நிலையில், முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்றோ அல்லது நாளை காலையோ வெளியாக வாய்ப்புள்ளது.
கிராமங்களில் சிக்கல்
எல்லாம் சரி!. 234 இடங்களில் மநீம தனது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து களம் காண்கிறது. வரவேற்கக் கூடிய விஷயம் தான். ஆனால், கிராமப்புறங்களில் இன்னமும் 'மக்கள் நீதி மய்யம்' கட்சிக்கு 'சச்சின் ரிட்டையர்டு ஆகிட்டாரா?' மோடில் தான் வரவேற்பு இருப்பதாக கட்சியினர் புலம்புகின்றார்கள்.
மெத்தனப்போக்கு
இதுகுறித்து நம்மிடம் பேசிய பெயர் வெளியிட விரும்பாத சில நிர்வாகிகள், 'மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இன்னமும் கிராமப்புறங்களில் வலிமையான வாக்கு வங்கி இல்லை என்பது உண்மை தான். வலிமையான என்ன.. வாக்கு வங்கியே பெரிதாக இல்லை என்பதை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். கட்சியில் இருக்கும் மெத்தனப்போக்கே இதற்கு காரணம் என்று கூறி நம்மையே அதிர வைத்தனர்.
மக்களவை தேர்தல்
குறிப்பாக, 2019 மக்களவை தேர்தலில் 12 இடங்களில் ம.நீ.ம மூன்றாவது இடத்தைப் பிடித்தது. வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை ஆகிய மூன்று தொகுதிகளிலும் மூன்றாம் இடத்தை பிடித்த மக்கள் நீதி மய்யம், இம்மூன்று தொகுதியிலும் 10 சதவீதத்துக்கு மேலான வாக்குகளையும் பெற்றது. சென்னையை தவிர கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, பொள்ளாச்சி, சேலம்,ஸ்ரீபெரும்பத்தூர், திருவள்ளூர், திருப்பூர் ஆகிய தொகுதிகளில் மூன்றாம் இடத்தை பிடித்தது.
சோதித்த லாக் டவுன் காலம்
இந்த வாக்கு சதவீதத்தில் 98 விழுக்காடு நகர்ப்புறங்களில் இருந்து கிடைத்தவை தான். அப்போதே கட்சி சுதாரித்திருக்க வேண்டும். இந்த இரண்டு ஆண்டு இடைவெளியில் கிராமங்கள் மத்தியில் சென்று சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், சாதாரண கூட்டங்கள் கூட கிராமங்களில் நடக்கவில்லை. எனினும், கொரோனா லாக் டவுன் காலமும் கட்சிக்கு சற்று பின்னடைவாக அமைந்துவிட்டது.
10 சதவிகித வாக்குகள்
கட்சியில் இருக்கும் பெரும்பாலான நிர்வாகிகள் மேல்மட்ட சித்தனை கொண்டவர்கள் தான். கமல்ஹாசனும் அவர்களைப் போன்றவர்களை தான் அருகில் வைத்துக் கொள்கிறார். எனினும், இந்த முறை கட்சிக்கு 8-லிருந்து 10 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என நம்புகிறோம். கிராமங்களில் எங்கள் பலத்தை கூட்டியிருந்தால், இன்னும் அதிக வாக்குகளைப் பெற்று ஒரு தீர்மானிக்கும் சக்தியாக இருந்திருக்கக் கூட வாய்ப்புள்ளது" என்றனர்.