லோக்சபா தேர்தலில் கமல்ஹாசன் கட்சி தனித்து போட்டி ஏன்? பின்னணியில் நடந்த சதுரங்க ஆட்டம்
Recommended Video
சென்னை: லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளதன் பின்னணி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்துள்ள கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி துவங்கி தமிழகம் முழுக்கவும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
கமல்ஹாசனுக்கு செல்லும் இடங்களில் எல்லாம், அவரது ரசிகர்களும், தொண்டர்களும் வரவேற்பு அளிப்பதை பார்க்க முடிகிறது.
தனித்துப் போட்டி- மக்கள் நீதி மய்யத்தின் அதிரடி முடிவு.. விஜயகாந்த் ஸ்டைலில் கமல்ஹாசன்
ராகுல் காந்தி கமல்ஹாசன் சந்திப்பு
இந்த நிலையில்தான், வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்தார் கமல்ஹாசன் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். கடந்த ஆண்டு ஜூன் மாதம், டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தியிருந்தார். அப்போதே இந்த செய்திகள் வேகமாக கசிந்தன. மற்றொரு பக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும், ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார்.
மெகா கூட்டணி
மக்கள் நீதி மய்யம், விடுதலை சிறுத்தைகள், தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் ஆகியவையுடன், காங்கிரஸ் கூட்டணி அமைத்துக்கொள்வது பற்றி ஆலோசிக்கப்பட்டதாம். தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் இந்த கூட்டணியை பெரிதும் விரும்பியதாகவும் தகவல் உண்டு. நிலைமையை புரிந்து கொண்டது திமுக. காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறினால் வாக்குகள் சிதறி, கடந்த லோக்சபா தேர்தலை போல அது அதிமுகவிற்கு சாதகமாக போய்விடும் என்பதை திமுக தலைவர்கள் நன்கு புரிந்து வைத்திருந்தனர்.
ஸ்டாலின் வியூகம்
எனவேதான், கருணாநிதி சிலை திறப்பு விழாவில், திடீரென ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என அறிவித்து, கூட்டணியை இறுகப்பற்றிக் கொண்டார் ஸ்டாலின். இதையடுத்து, ப.சிதம்பரம் போன்ற தலைவர்களும், திமுக கூட்டணிதான் நல்லது என ராகுல் காந்தியிடம் சொல்ல, திருநாவுக்கரசர் மட்டும், தொடர்ந்து தனது பழைய பல்லவியையே பாடி வந்தாராம். இதையடுத்துதான் திமுகவுடன் நெருக்கம் காட்ட வசதியாக, கே.எஸ்.அழகிரியை காங்கிரஸ் தலைவராக நியமித்த ராகுல் காந்தி, திருநாவுக்கரசருக்கு டிமிக்கி கொடுத்தாராம்.
பலம் அறியலாம்
இப்படியாக, கூட்டணி கனவு கலைந்துவிட்ட நிலையில், இப்போது, மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வேறு கட்சியுடன் கூட்டணி வைக்கும் வாய்ப்புகள் இல்லை. எனவே தனித்து போட்டியிட முடிவு செய்துவிட்டார் கமல்ஹாசன். இதன் மூலம், தங்கள் கட்சியின் பலத்தை அறிந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும். சட்டசபை தேர்தலுக்கு அது உதவும் என கமல்ஹாசன் நினைக்கிறாராம்.