Rajinikanth: ரஜினியின் "ராம" பார்வை.. கருத்தே சொல்லாமல் கம்முன்னு இருக்காரே நம்ம "ராஜ பார்வை"..ஏனோ!?
ரஜினியின் பேச்சுக்கு கமல்ஹாசன் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை
Recommended Video
சென்னை: இதுவரை கமல் சத்தமே இல்லாமல் இருக்கிறார்.. நண்பர் ரஜினியின் பேச்சுக்கும், ஸாரி கேட்க முடியாது என்ற அவரது பிடிவாதத்துக்கும் மக்கள் நீதி மய்ய தலைவரின் கருத்து என்ன? இதுகுறித்த அவரது "ராஜபார்வை"தான் என்ன என்று தெரியவில்லை!
வடிவேலு ஒரு படத்தில் சொல்லுவாரே, "ஆஹா.. இப்ப எல்லாருமே நம்ம பக்கம் பார்ப்பாங்களே"ன்னு.. அதே நிலைதான் கமல் ரஜினியைப் பொறுத்தவரை. கமலை பற்றிய விஷயம் என்றால் ரஜினி பக்கம் பார்வை போகும்.. ரஜினி என்றால் கமல் பக்கம் திரும்புவார்கள். இது இயல்பு.. காரணம் இருவருமே இணையப் போகிறார்கள் என்ற ஒரு டாக் ஓடி வருவதால்.
கமல், ரஜினி இருவருமே இந்த சினிமா உலகை 40 ஆண்டுகாலம் முன்னின்று நடத்திவரும் ஜாம்பவான்கள்.. ஒருவர் கால் நூற்றாண்டாக ஓயாமல் ஒன்றை சொல்லி வந்த நிலையில், திடீரென இன்னொருவர் கால் பதித்துவிட்டார் தமிழக அரசியலில்! வேறு வேறு பாதை.. வேறு வேறு களம்.. வேறு வேறு கொள்கை உடையவர்கள். காஷ்மீர் விவகாரத்தில், "ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி, அமித்ஷாவின் சாணக்கியத்தனம்" என்றார் ரஜினி.. "ஜனநாயக படுகொலை.. எந்த ஷாவும் ஒன்றும் செய்ய முடியாது" என்று எதிர்ப்பை பதிவு செய்தார் கமல்.
சாமி கும்பிடும் அத்தனை பேரையும் வளைச்சுட்டா.. ரஜினியை வைத்து செம கேம்.. பயங்கர பிளானா இருக்கே!
ரசிகர்கள்
தலைமைத்துவ குணம் இல்லாமலும், அரசியல் ஆசையே இல்லாமலும் இருந்தவரை "தலைவா" என்கிறார்கள் நம் மக்கள்.. கடவுள் நம்பிக்கையே இல்லாதவரை "ஆண்டவரே" என்கிறார்கள் அவரது அபிமானிகள்.. இதில் யாரை நாம் ஏற்பது என்பது வேறு விஷயம்! ஆனால், தமிழகம் இப்போது கொந்தளித்துள்ளது பெரியார் சம்பந்தப்பட்ட விஷயத்தில்.. இதற்கு பல தரப்பினர் எதிர்ப்புகள் பதிவு செய்த நிலையில் கமல் இதுவரை எதுவும் சொல்லாமல் இருக்கிறார்.
சித்தாந்தம்
தந்தை பெரியார் மீது மிகுந்த மரியாதை அபிப்பிராயம் வைத்திருப்பவர் கமல். நாத்திகர்... கொள்கை என்ற ஒன்றை வைத்துக் கொண்டு நடை போடுபவர். திராவிடம் என்ற சித்தாந்தத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பவர். கடவுள் மறுப்பாளர் என்ற வகையிலும் கூட ரஜினியின் கருத்து குறித்து கமல் எதுவும் பேசாமல் இருப்பது விந்தையாக உள்ளது.
மறுமலர்ச்சி
பெரியாரை ஒரு சமூகப் போராளியாக ஒட்டுமொத்த சமூகமும் நினைத்துக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட பெரியார் என்ற பிம்பமே தவறு என்பது போல ரஜினியின் பேச்சு மறைமுகமாக உள்ளது. அதற்கும் கமல் கருத்து தெரிவிக்கவில்லை... தமிழகம் இன்று இந்திய அளவில் பல துறைகளில் மிகப் பெரிய மறுமலர்ச்சியை, வளர்ச்சியை கண்டுள்ளது என்றால் அதற்கு முக்கியக் காரணம் பெரியார் ஊட்டிய எழுச்சிதான். அதை யாரும் மறுக்க முடியாது. அப்படிப்பட்ட வகையிலும் கூட ரஜினி கருத்துக்கு கமல் கருத்து தெரிவிக்கவில்லை.
கண்டிக்கவில்லை
பெரியாரின் விதவை மறுமணம், பெண்களுக்கு சம உரிமை, ஆலய வழிபாட்டில் அனைவருக்கும் சமத்துவம் போன்ற வரலாற்றுச் சிறப்பான போராட்டங்களையெல்லாம் வசதியாக மறந்து விட்டு.. அவரை ஒரு சாதாரண கடவுள் வெறுப்பாளர் என்பது போல சுருக்க முயலும் முயற்சிகளையும் கூட, நண்பர் என்ற உரிமையிலும் அதை தட்டிக் கேட்கவுமில்லை.. கண்டிக்கவும் இல்லை.
தெளிவுபடுத்தி இருக்கலாம்
அன்று திக மாநாட்டில் என்ன நடந்தது என்பது புதிய முகமாக தமிழகத்துக்கு வந்த ரஜினிக்கு தெரியாமல் இருந்திருக்கலாம்... ஆனால் உலக விஷயங்களை கரைத்து குடித்திருக்கும் கமலுக்கு தெரியாமல் இருந்திருக்காது.. அந்த வகையிலாவது, ரஜினிக்கு தமிழக வரலாற்று சம்பவத்தை கமல் நேரடியாக கூப்பிட்டு தெளிவுபடுத்தி இருக்கலாம். போன வருடம் பெரியார் சிலையை உடைப்போம் என்று எச்.ராஜாவின் "அட்மின்" ட்விட்டரில் ஏற்படுத்திய சர்ச்சையின்போது, இந்த கருத்து காட்டுமிராண்டித்தனமானது.. கீழ்த்தரமானது என்று கமல் சொல்லி இருந்தார்.. அப்படியானால் இப்போது இதே பெரியாருக்கு மீண்டும் ஒரு களங்கம் எழுந்துள்ள நிலையில் கமல் மவுனமாக இருப்பதன் காரணமும், அவசியமும் தெரியவில்லை.
கமல் விளக்க வேண்டும்
தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல ரஜினி உதவ வேண்டும் என்று சமீபத்தில் கூட கமல் கூறியிருந்தார். ஆனால் தமிழக மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்காமல் பழங்கதைகளை எடுத்துப் பேசிக் கொண்டிருக்கிறார் ரஜினி. இது எந்த வகையில் மக்களுக்கு உதவும் என்பதை கமல்தான் விளக்க வேண்டும்.. அப்படி விளக்காவிட்டால், அது கமலுக்கே எதிரான விமர்சனங்களையும் இனி பெருமளவு தாங்கி வரக்கூடும். "ராஜ பார்வை"யில் வருவது போல எதையுமே பாராமலும் இருக்க முடியாது.. என்பது கமலுக்கு தெரியாததா!