வலியக்க வந்து வாங்க வாங்கன்னு கூப்பிடும் பாஜக.. குஷ்பு ஏன் அமைதி காக்கிறார்?
சென்னை: காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்புவை பாஜக விழுந்து விழுந்து வரவேற்றுக் கொண்டிருக்கிறது. ஆனாலும் இது தொடர்பாக குஷ்பு எந்த ஒரு விளக்கமும் தராமல் மவுனமாகவே இருந்து வருகிறார்.
திமுகவில் குஷ்பு இணைந்து பணியாற்றிய காலங்களில் பரபரப்பு செய்திகளில் இடம்பிடித்தார். சில பல கசப்பான நிகழ்வுகளால் காங்கிரஸில் இணைந்தார் குஷ்பு.
குஷ்பு பாஜகவில் இணைய போகிறாரா.. வரவேற்கும் பாஜக.. உண்மை என்ன?
கோஷ்டி பூசலில் குஷ்பு
காங்கிரஸ் கட்சியில் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவியும் குஷ்புவுக்கு கிடைத்தது. ஆனால் காங்கிரஸின் கலாசாரமாகவே இருக்கும் கோஷ்டி பூசலில் குஷ்புவும் தப்பவில்லை. ஒருகட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளில் இருந்து தன்னை ஒதுக்கிக் கொண்டார் குஷ்பு. ஆனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து தாம் விலகவில்லை என்பதை அவ்வப்போது வெளிப்படுத்தியும் வருகிறார்.
ட்விட்டரில் சீறிய குஷ்பு
அண்மையில் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் படத் திறப்பு நிகழ்ச்சியை முன்வைத்து ட்விட்டரில் குஷ்பு பொங்கலே வைத்துவிட்டார். ஒரு கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரான தமக்கு டிவியில் பார்த்துதான் இந்த நிகழ்ச்சியே தெரியுது.. என சீறியிருந்தார் குஷ்பு.
பாஜகவின் குஷ்பு புகழ்
அத்துடன் நிற்காமல், ஈகோ விவகாரத்தால்தான் காங்கிரஸ் கட்சி பலவீனமாக இருக்கிறது எனவும் ஆவேசப்பட்டார் குஷ்பு. ஆனாலும் குஷ்புவை எப்படியாவது வளைக்க ஏனோ தெரியவில்லை.. பாஜக படாதபாடு படுகிறது. குஷ்புவுக்கு ஒவ்வொருநாளும் பாஜக தலைவர்கள் புகழ்பாடியே வருகின்றனர்.
ஹை லெவல் தூது
குஷ்பு பாஜகவுக்கு வந்தால் பிரதமர் மோடியின் செயல்பாடுகளை அவர் மக்களிடையே கொண்டு சேர்ப்பார்; அவரது தைரியமான செயல்பாடுகள் பாஜகவுக்கு தேவை என கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கின்றனர். இன்று கூட குஷ்புவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதாக கூறி, பாஜகவின் ஆசீர்வாதம் ஆச்சாரி திருக்குறள் மூலம் வலைவிரித்து பார்க்கிறார்.
குஷ்புவின் மவுனம் கலையுமா?
இத்தனை முயற்சிகள் தம்மை சுற்றி நடக்கிறதே.. ஒன்றுக்கும் கூட இதுவரை குஷ்பு எதிர்வினை ஆற்றவில்லை. வாயை திறந்து நான் காங்கிரஸில் இருக்கிறேன்.. இல்லை.. என்னை ஏன் பாஜகவுக்கு கூப்பிடுறீங்க? என மறுப்பும் சொல்லாமல் இருக்கிறார் குஷ்பு. குஷ்புவின் மவுனம் கலையாதவரை பாஜகவின் இத்தகைய கூப்பாடுகள் தொடரும் என்பது மட்டும் நிதர்சனமாக தெரிகிறது.