அதென்ன அண்ணாமலைக்கு மட்டும்.. குஷ்புவுக்கு ஏன் இன்னும் தரலை.. பாஜகவில் என்ன நடக்கிறது?
குஷ்புவுக்கு ஏன் இன்னமும் பதவி தரப்படாமல் உள்ளது என்ற சந்தேகம் எழுந்துள்ளது
சென்னை: அதென்ன அண்ணாமலைக்கு மட்டும் பாஜகவில் சேர்ந்ததுமே பதவி தந்தார்கள்.. குஷ்புவுக்கு இதுவரை எதுவும் வந்து கிடைக்கவில்லையே என்ற முணுமுணுப்புகள் எழ தொடங்கி உள்ளது!
தேர்தல் நெருங்கும் நேரம், மாற்று கட்சிக்காரர்ரகளை டார்கெட் செய்து பாஜகவினர் தங்கள் கட்சிக்குள் இழுத்து வர ஆரம்பித்துவிட்டனர்.. அந்த வகையில் அண்ணாமலையையும் பாஜக விட்டுவைக்கவில்லை.
இது மட்டுமா பல்வேறு குற்றப் பின்னணி கொண்ட முன்னாள் இந்நாள் குற்றவாளிகளும் கூட பாஜகவுக்கு வந்து சேர்ந்துள்ளனர். சமீபத்தில் கூட, எல் முருகன் முன்னிலையில் பாஜகவில் சேர்ந்த ஒருவர் நில மோசடி வழக்கில் கைதாகி கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
சட்டுன்னு இப்படி பேசிட்டாரே.. சங்கடத்தில் திமுக.. ஆனால் திருமா தெளிவா இருக்காரே!
அண்ணாமலை
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை மீது இளைஞர்கள் மத்தியில் ஒரு விதமான கிரேஸ் இருந்தது. ஆனால் அவர் பாஜகவில் சேர்ந்ததுமே அந்த கிரேஸ் மாறி அவர் கடும் விமர்சனத்துக்குள்ளானார். தனியாக வலம் வருவார் அல்லது ரஜினியுடன் சேருவார் என கருதப்பட்ட நிலையில் திடீரென போய் பாஜகவில் சேர்ந்து விட்டார். அவர் கட்சியில் சேர்ந்த ஓரிரு நாளிலேயே மாநில அளவிலான பெரிய பதவி அவருக்கு கிடைத்தது இன்னும் ஆச்சரியமாக இருந்தது.
துணை தலைவர்
பாஜக மாநில துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது சலசலப்புகளையும் ஏற்படுத்தியது.. பொதுவாக, பாஜகவின் விதியின் படி 10 துணை தலைவர்கள் இருக்க வேண்டும்... அதன்படியே 10 நிர்வாகிகளும் செயல்பட்டு கொண்டிருக்கும்போது, விதியை கட்சி தலைமையே மீறி, 11-வதாக ஒருவரை துணை தலைவராக நியமித்தது ஏன் என்ற கேள்வியை எழுப்பியது.
அண்ணாமலை
இதற்குதான் வானதி சீனிவாசன் போன்றோர் விரைந்து வந்து முட்டு கொடுத்து பேசினர். "அண்ணாமலைக்கு துணை தலைவர் பதவி கொடுக்கப்பட்டதில், கட்சி அமைப்பு விதிமுறைகள் மீறப்படவில்லை... இதற்கு முன்பாக சுரேஷ்பிரபு, ஜெய்சங்கர் போன்றவர்கள் கட்சியில் சேர்ந்தவுடன் பதவிகள் வழங்கப்பட்டன..அந்த வகையில் அண்ணாமலை வரவு பாஜகவுக்கு கூடுதல் பலம்" என்றார்.
குஷ்பு
இப்படி ஒட்டுமொத்த பாஜகவும் அண்ணாமலைக்காக திரண்டு வந்ததை பார்க்கும்போது, தற்போது குஷ்புக்கு ஏன் அவர்கள் ஒன்றுசேரவில்லை? அதாவது குஷ்புக்கு இத்தனை நாள் ஆகியும் ஏன் எந்த பதவியும், பொறுப்பும் வழங்கப்படவில்லை என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
திராவிட அரசியல்
குஷ்புவை பொறுத்தவரை, அரசியலில் அண்ணாமலையை விட சீனியர்.. அண்ணாமலையைவிட வயதில் பெரியவர்.. அண்ணாமலையைவிட துணிச்சலும், தைரியமும் நிறைந்தவர்.. அண்ணாமலையை விட அறிவு, ஞானம் மிக்கவர்.. அண்ணாமலையை விட திராவிட அரசியலை நுணுக்கமாக கவனித்து உடனிருந்து பயணித்தவர். அப்படி இருக்கும்போது, குஷ்புக்கு இப்போதுவரை பதவி தராதது ஆச்சரியமாக உள்ளது... அப்படி என்றால், எதற்காக குஷ்புவை காங்கிரசில் இழுத்து கொண்ட வர, பாஜக இத்தனை மாதம் பாடுபட வேண்டும்? எதற்காக 6 மாதகாலமாக குஷ்புவுக்காக காத்திருந்தனர்? என்ற யதார்த்தமும் எழுகிறது.
திமுக
தமிழக காங்கிரசுக்கு வலுவாக இருக்கும், அதுவும் பிரபலமான ஒருவரை, பிரித்து கொண்டு வருவதில் மட்டும் ஒரு கட்சியின் பலம் இருப்பதாக தெரியவில்லை. இந்த விஷயத்தில் திமுக பரவாயில்லை.. மாற்று கட்சியில் இருந்து யார் வந்தாலும் உடனே முக்கிய பொறுப்பை தந்து அழகு பார்த்துவிடுகிறது.. இந்த அணுகுமுறை பாஜகவில் குறைவாக தென்படுகிறது.
சறுக்கல்
குஷ்பு போன்ற பிரபலங்களை வெறுமனே பிரச்சாரத்துக்கு மட்டுமே பயன்படுத்தி கொள்ளுமோ என்ற ஐயமும் தோன்றுகிறது... அப்படி மட்டும் பயன்படுத்தி கொண்டால், அது பாஜகவுக்குதான் மேலும் சறுக்கலாக போய்விடும்.. குஷ்புவின் திறமையை, பாஜகவின் வெற்றிக்கான அடித்தளமாக மாற்றவும் முயல வேண்டும்.
தேர்தல்
இப்படி அங்கீகாரம் இல்லாததால்தான், திமுக, காங்கிரஸ் மீது அவர் அதிருப்தியில் இருந்தார்.. அதே தவறை இந்த கட்சியும் செய்துவிட கூடாது என்பதையும் சொல்ல வேண்டி உள்ளது.. ஒருவேளை, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா என தெரியவில்லை.. அப்படியே சீட் வழங்கினாலும், முக ஸ்டாலின் அல்லது உதயநிதிக்கு எதிராக அதே தொகுதியில் போட்டியிட வைத்தாலும், கட்சி பொறுப்பு என்பதுதான் மிக முக்கியமான பொறுப்பு.. அதுதான் அதிகாரத்தின்கீழ் செயல்படக்கூடிய பொறுப்பு
தாமரை மலரும்
அந்த வகையில் மாநில பொறுப்பை குஷ்புவுக்கு வழங்கியாக வேண்டும்.. அப்படியே வழங்கினாலும் சாதாரண பதவி தர முடியாது.. அதுமட்டுமல்ல, அண்ணாமலையை விட குறைந்த பதவியும் தர முடியாது... கட்சியில் சேர்ந்த முதல்நாளே ஒவ்வொரு தெருவிலும் தாமரை மலரும் என்று பேசிய குஷ்புவின் தைரியத்துக்கு நிச்சயம், அண்ணாமலையைவிட உயர்ந்த பதவியை தருவதே சாலச்சிறந்ததாக இருக்கும்!