பாலியல் வன்கொடுமை செய்த காவலருக்கு இது தான் தண்டனையா? காவல்துறை மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி
சென்னை: கடுமையான குற்றம் புரிந்த காவலருக்கு குறைவான தண்டனை வழங்கியதற்காக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கடும் அதிருப்தி தெரிவித்தது.
திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் திண்டுக்கல் ஆயுதப்படையில் முதல்நிலை காவல் ஆய்வாளராக 11 ஆண்டுகள் பணியாற்றியவர். இவர் மீது ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2012ல் பாலியல் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. அதன் காரணமாக 2012 டிசம்பர் 4ல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டது.
அதில்,"அடைக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி ஆயுதப்படை காவலர் குடியிருப்புக்கு அழைத்துச் சென்று அவரை பாலியல் ரீதியாக பயன்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில் அவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார்" என கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக விசாரணை அதிகாரி அறிக்கை தாக்கல் செய்தார்.
தனி நீதிபதி உத்தரவு
அதனடிப்படையில் கருப்பசாமிக்கு 3 ஆண்டுக்கு ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து தண்டனை வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து கருப்பசாமி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடர்ந்த விசாரித்த தனி நீதிபதி தண்டனை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தமிழக காவல்துறை தலைவர், திண்டுக்கல் சரக டிஐஜி, திண்டுக்கல் மாவட்ட எஸ்பி ஆகியோர் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
குற்றச்சாட்டு நிரூபணம்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரவிச்சந்திரபாபு செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, "ஒழுக்கம் நிறைந்த காவல்துறை பிரிவில் பணியாற்றிய காவலர் கருப்பசாமிக்கு வழங்கப்பட்ட குற்றச்சாட்டு குறிப்பாணையில் சிறுமியை கடத்தி மூன்று நாட்கள் சட்டவிரோதக் காவலில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு விசாரணையில் நிரூபிக்கப்பட்டும் உள்ளது. இருப்பினும் அவருக்கு மூன்று ஆண்டு ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து சிறிய அளவிலான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடுமையான குற்றச்சாட்டு
ஒழுங்கு நடவடிக்கை அதிகாரிகள் இதுபோன்ற கடுமையான குற்றச்சாட்டை தீவிரமாக அணுகாமல் இயந்திரத்தனமாக செயல்பட்டு சிறிய தண்டனையை வழங்கி இருப்பது நீதித்துறைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மனுதாரருக்கு ஏன் சிறிய அளவிலான தண்டனை வழங்கப்பட்டது என்பதற்கு அந்த உத்தரவில் எவ்விதமான காரணங்களும் குறிப்பிடப்படவில்லை. அதற்கான காரணங்களை ஆராயாமல் இந்த மிகச் சிறிய தண்டனையையே மேல்முறையீட்டு அலுவலரும், மறுசீராய்வு அலுவலரும் உறுதி செய்திருப்பது துரதிஷ்டவசமானது.
தனிநீதிபதியின் உத்தரவு ரத்து
இது போன்ற கடுமையான குற்றத்திற்கு குறைவான தண்டனை வழங்கியதற்கு நீதிமன்றம் கடும் அதிருப்தியை பதிவு செய்கிறது. தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிலும் தொடக்க நிலையிலேயே முடிவெடுக்கப்பட்டதை ஏற்க இயலாது. இந்த வழக்கில் இரு தரப்பிலும் போதிய கால அவகாசம் வழங்கப்பட்டு பதில் மனுக்கள் பெறப்பட்டு தகுதி அடிப்படையில் முடிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தனி நீதிமன்றம் அவ்வாறு செய்யாமல், மனுதாரரின் கோரிக்கையை ஏற்றது துரதிஷ்டவசமானது. இதற்காக தனி நீதிபதி கூறும் காரணங்களும் ஏற்கத்தக்கதல்ல. எனவே தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
டிஜிபிக்கு உத்தரவு
இந்த வழக்கில் மனுதாரருக்கு வழங்கப்பட்ட குறைந்த அளவிலான தண்டனையை மறுபரிசீலனை செய்து வழக்கை மீண்டும் சட்டப்படி விசாரித்து, குற்றத்துக்கு ஏற்ற உரிய தண்டனையை வழங்குவதற்காக டிஜிபிக்கு இந்த வழக்கு திருப்பி அனுப்பப்படுகிறது. புதிய உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கு வசதியாக டிஜிபி ஏற்கனவே 2016 டிசம்பர்21ல் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்கள்.