திமுக பேரணியில் மக்கள் நீதி மய்யம் கலந்து கொள்ள தயங்குவது ஏன்? பின்னணி இதுதான்
சென்னை: குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக வரும் 23ம் தேதி சென்னையில் திமுக ஏற்பாடு செய்துள்ள பேரணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி பங்கேற்காமல் இருக்க முடிவு செய்திருப்பதன் பின்னணி என்ன என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.
குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி நாடு முழுக்க மாணவர்கள், சிறுபான்மையினர், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் உள்ளிட்ட பலதரப்பட்டவர்களும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் திமுக சார்பில் வரும் 23-ஆம் தேதி சென்னையில் மாபெரும் கண்டன பேரணி நடத்தப்படும் என்று அந்த கட்சி தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இதில் தனது கட்சியும் பங்கேற்கும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியிருந்தார். இதனால் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மலை நேரில் சந்தித்து அழைப்பும் விடுத்தார்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிரான திமுக பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது.. திடீர் அறிவிப்பு
ஏன் மாறுபாடு
ஆனால், திமுக நடத்தும் பேரணியில் பங்கேற்க வேண்டாம் என மக்கள் நீதி மய்யம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கொள்கை ரீதியாக பல பிரச்சினைகளில் திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய இரு கட்சிகளும் ஒரே மாதிரி நிலைப்பாட்டை எடுத்த போதிலும், இதுவரை அவர்கள் இணைந்து செயல்படவில்லை. இந்த நிலையில் குடியுரிமை பிரச்சனையில் திமுகவுடன் இணைந்து செயல்பட வேண்டாம் என்று மக்கள் நீதி மய்யம் கருதுகிறது.
தனித்து
ஏனெனில் குடியுரிமை பிரச்சினையில் மக்கள் நீதி மய்யம் தனித்து செயல்பட விரும்பவதாகவே தெரிகிறது. இந்த சட்டத்திற்கு எதிராக கமல்ஹாசன் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பிறகுதான் திமுக சார்பிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை.யில் போராடிய மாணவ, மாணவிகளை கமல்ஹாசன் நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்திருந்தார்.
நிர்வாகிகள்
இப்படியான சூழலில், திமுகவுடன் இணைந்து செயல்படாமல் தங்கள் தனித்துவத்தை தொடர வேண்டும் என்பது பெருவாரியான மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தல் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முடியாது
எனவேதான், இன்று ஸ்டாலினை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் அருணாச்சலம் மற்றும் சவுரி ராஜன் ஆகியோர், கமல்ஹாசன் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றதை காரணமாக கூறி, திமுக பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது என கூறியுள்ளனராம். இவ்வாறு தகவல்கள் தெரிவிக்கின்றன.