பந்தல் கூட ஓகே.. அது ஏன் மைக் செட்.. சென்னை டாஸ்மாக்களில் ஏன் இந்த திடீர் ஏற்பாடு.. இதுதான் காரணம்!
சென்னை: சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இன்று முதல் இந்த கடைகள் திறக்கப்பட உள்ளது.
கடந்த மே 7ம் தேதி சென்னையை தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் திறக்கப்பட்டது. தற்போது சென்னையிலும் டாஸ்மாக் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முறையான ஆலோசனை மற்றும் திட்டமிடலுக்கு பின் அரசு இந்த முடிவை எடுத்து உள்ளது.
சென்னையில் காலை 10 முதல் இரவு 7 மணி வரை கடை இருக்கும். சென்னையில் டோக்கன் அடிப்படையில் மது வழங்கப்படும். ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும். கட்டுப்பாட்டு பகுதிகளில் கடை இருக்காது.
சென்னையில் இன்று முதல் ஜெகஜோராய் மதுபான கடைகள் திறப்பு- குடிமகன்களை ஒழுங்குபடுத்த தடபுடல் ஏற்பாடு
சென்னை டாஸ்மாக்
சென்னை டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக நீண்ட வரிசை அமைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பெரிய அளவில் கம்புகளை வைத்து தடுப்புகளை உருவாக்கி வரிசை அமைத்து உள்ளனர். டாஸ்மாக் கவுண்டருக்குள் ஒருவர் செல்ல வேண்டும் என்றால், நான்கு வரிசைகளை கடந்துதான் செல்ல வேண்டும். சமுக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் இதை செய்துள்ளனர்.
ஒரு போலீசார்
அதேபோல் ஒரு டாஸ்மாக்கிற்கு மொத்தம் 5 போலீசார் வீதம் இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மக்கள் அதிக அளவில் கூடாத வகையில் கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும். இதனால் இந்த 500 ஆட்களுக்கு மேல் யாராவது வரிசையில் நின்றால் அவர்களை உடனே வெளியே அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது.
திருவிழா ஏற்பாடு
சென்னையில் நடக்கும் இந்த டாஸ்மாக் ஏற்பாடுகள் திருவிழா போல இருக்கும் என்றும் கூறுகிறார்கள். ஆம் இதற்காக எல்லா டாஸ்மாக்கிலும் சென்னையில் மைக் செட் வைத்துள்ளனர். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள், திருவிழாக்களில் இப்படி மைக் செட் வைப்பது வழக்கம். அதேபோல்தான் சென்னையில் டாஸ்மாக் வாசலில் இதேபோல் மைக் செட் வைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
ஏன் இப்படி
இப்படி மைக் செட் வைப்பதற்கு என்ன காரணம் என்றும் விளக்கப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் கூட்டம் அதிக அளவில் வர வாய்ப்புள்ளது . ஒவ்வொரு டோக்கன் தீர்ந்த பின்பும் அதை மைக்கில் அறிவிப்பார்கள். அதேபோல் என்ன மது வகைகள் எல்லாம் காலியாகிவிட்டது. எது எல்லாம் கிடைக்காது என்று மைக்கில் அறிவிப்பார்கள். இதன் மூலம் வரிசையில் நிற்பவர்கள் என்ன வாங்கலாம் என்று எளிதாக முடிவு செய்து கொள்ள முடியும்.
வரிசையில் வந்தனர்
பலர் வந்து வரிசையில் நிற்பதை தடுக்கும் வகையில் இந்த ஏற்பாட்டை செய்துள்ளனர். அதேபோல் வரிசையில் நிற்பவர்களை கட்டுப்படுத்தும் வகையிலும் போலீஸ் மைக் மூலம் அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார்கள். இதற்காக பெரிய அளவில் சாமியான பந்தல் போடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இது இல்லாமல் முகக்கவசம் அணிதல், 3 அடி இடைவெளி விடுதல், ஒருவருக்கு ஒரு டோக்கன் என்று நிறைய விதிகளுக்குட்பட்டு இன்று முதல் மீண்டும் மதுக்கடைகள் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.