ஐ.பெரியசாமி ஆப்சென்ட் ஏன்..? ‘அப்செட்’.. அப்போ கூட அழுத்திச் சொன்னாரே? சலசலக்கும் திமுக வட்டாரம்!
சென்னை : திமுக மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமி, சில நிகழ்வுகளால் அதிருப்தியில் இருந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், இன்று சென்னையில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்காதது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவில் மாவட்ட செயலாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட பிறகு இன்று முதல் முறையாக மா.செக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி பங்கேற்காதது திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்டகாலமாகவே அதிருப்தியில் இருந்து வரும் ஐபி, சமீபத்தில் அமைச்சரின் பேச்சால் ஏற்பட்ட அப்செட் காரணமாகவே இன்று கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்ற பேச்சுகள் எழுந்துள்ளன.
பிரதமரின் வாக்குறுதி என்னாச்சு அண்ணாமலை? தமிழர்களை சாதி, மதமாக பிரிக்க முடியாது - அமைச்சர் பெரியசாமி
மா.செக்கள் கூட்டம்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. திமுகவில் புதிய நிர்வாகிகள் நியமனத்திற்குப் பிறகு முதல் முறையாக இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுகவின் மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் என சுமார் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலாளர் மற்றும் துணைப் பொதுச் செயலாளர்கள் மேடையில் வீற்றிருந்தனர்.
ஐ.பெரியசாமி ஆப்சென்ட்
திமுக துணைப் பொதுச் செயலாளர்களாக இருக்கும் ஐவரில் 4 பேர் மேடையில் இருந்த நிலையில், ஐ.பெரியசாமி மட்டும் இன்றைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கே வரவில்லை. மேலும், விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளரான அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனும் இன்றைய மா.செக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. சென்னையில் இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உடல் நலக்குறைவால் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவர் பங்கேற்கவில்லை. அவர் இன்று மாலை தான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
திமுகவில் சலசலப்பு
தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திமுகவின் துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி பங்கேற்காதது திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் கூட திண்டுக்கல்லில் திமுகவில் இணையும் நிகழ்வில் பங்கேற்றிருந்தார் ஐ.பெரியசாமி. ஆனால், இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் அவர் பங்கேற்காதது திமுக தொண்டர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஐபியின் மகனும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐபி செந்தில்குமார் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றார்.
சீண்டிய அமைச்சர்
நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது சக அமைச்சர்களையே விமர்சிக்கும் வகையில் பேசி வருவது அமைச்சர்கள் மத்தியில் புகைச்சலை உண்டாக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. அமைச்சரவை அமைக்கப்பட்டது முதலே, தனக்கு முக்கியத்துவம் இல்லாத இலாகா ஒதுக்கப்பட்டதாக அதிருப்தியில் இருந்த ஐ.பெரியசாமியை, முதல்முறையாக அமைச்சரான பிடிஆர் சீண்டியது கட்சியினர் மத்தியில் ஷாக் ஏற்படுத்தியது. முக்கியத்துவம் இல்லாத துறையை தனக்கு ஒதுக்கியதால் நீண்டகாலமாகவே அப்செட்டில் இருக்கும் ஐ பெரியசாமி இந்த விவகாரத்தால் மன உளைச்சல் அடைந்துள்ளாராம்.
கடுமையான அப்செட்
இதனால் கடுமையாக அதிருப்தி அடைந்த ஐ.பெரியசாமி, இந்த துறையை வைத்துக்கொண்டு, கெட்ட பெயரும் எடுக்க வேண்டுமா எனப் புலம்பியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அமைச்சர்கள் சிலர் முதல்வர் ஸ்டாலினிடமும் முறையிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் அவரை ஸ்டாலின் கடுமையாக கண்டிக்கவில்லை என ஐ.பெரியசாமி அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே இன்று நடைபெற்ற மா.செக்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லையா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.
கூட்டுறவுத்துறை சிறப்பாக
நேற்று முன் தினம் திண்டுக்கல் அகரம் பகுதியில் அதிமுகவில் 200 பேர் திமுகவில் இணையும் நிகழ்வின்போது பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, தமிழக முதல்வரின் சிறப்புமிகு திட்டங்களால் இளைஞர் மத்தியில் நல்ல எழுச்சி வந்துள்ளது. குறிப்பாக அனைத்துத் துறைகளும் சிறப்பாகச் செயல்படுவதாலும், திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை, விவசாயிகள், கால்நடை விவசாயிகள், கிராம மக்கள் நலன் காக்கும் துறையாக இருப்பதாலும் அதிக அளவில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்து வருகின்றனர் எனத் தெரிவித்தார்.
பிடிஆரை மனதில் வைத்து
நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அண்மையில் ஒரு கூட்டத்தில் கூட்டுறவுத்துறை செயல்பாடுகளில் திருப்தி இல்லை எனப் பேசிய நிலையில், அவருக்கு பதில் அளிக்கும் வகையில், முதல்வரையும், பொதுமக்களையும் திருப்தி செய்தால் போதும் எனப் பேசியிருந்தார் ஐ.பெரியசாமி. தற்போது 'அனைத்து துறைகளும் சிறப்பாகச் செயல்படுகிறது' என ஐபி அழுத்திச் சொல்லியதும் கூட பிடிஆரை மனதில் வைத்துத்தான் எனக் கிசுகிசுக்கிறார்கள் திண்டுக்கல் மாவட்ட திமுகவினர்.