மணிகண்டனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது ஏன்? எடப்பாடியை கோபப்படுத்திய அந்த பேச்சு!
Recommended Video
சென்னை: தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டன் நீக்கப்பட்டுள்ளதற்கான காரணங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அமைச்சரவையில் இருந்து தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் பழனிச்சாமியின் பரிந்துரையை ஏற்று அமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டனை நீக்கி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தவிட்டுள்ளார்.
எத்தனையோ பிரச்சனைகளில் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காத முதல்வர் பழனிச்சாமி, மணிகண்டன் மீது கோபப்பட்டு பதவியை பறிக்க முக்கியமான காரணம் இருக்கிறது. அண்மையில் கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு கேபிள் டிவி தலைவராகவும் பதவி வகிக்கிறார். இவர் கேபிள் டிவி கட்டணத்தை 130 ரூபாயாக குறைத்துள்ளோம். இன்னும் கூட குறைக்கலாம் என்றார்.
இந்நிலையில் தகவல்தொழில்நுட்ப துறையின் கீழ்தான் கேபிள் டிவி வருகிறது. இதையடுத்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அண்மையில் பதில் அளித்த அமைச்சர் மணிகண்டன் கேபிள் கட்டணதை குறைப்பது பற்றி தன்னிடம் முதல்வர் எதுவும் விவாதிக்கவில்லை என்றார். அப்போது கேபிள் டிவி கார்ப்பரேசன் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரான உங்கள் கட்டுப்பாட்டில் தான் வருகிறது. அப்படி இருக்கையில் உங்களுக்கு தெரியாமல் எப்படி கேபிள் டிவி கட்டணம் குறைப்பு சாத்தியமாகும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எனக்கே தெரியவில்லை முதல்வர் எதுவும் சொல்லவில்லை என்றார்.
மேலும் அரசு கேபிளில் மற்ற கேபிள் வைத்துள்ளோரை இணைக்க கூறும் உடுமலை ராதாகிருஷ்ணன் அட்சயா கேபிள் விஷன் என்கிற பெயரில் தனியாக கேபிள் நடத்தி வருவதாகவும்,. சுமார் 2 லட்சம் கனெக்சன்களையும் வைத்துள்ளதாகவும் அதை அரசு கேபிளுடன் இணைப்பாரா என்றும் மணிகண்டன் கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டன் நீக்கம்.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி
இவரது இந்த பேச்சுதான் முதல்வர் பழனிச்சாமியை கோபத்துக்கு தள்ளியுள்ளது. இதையடுத்தே இன்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டன் நீக்கப்பட்டுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் முதல்முறையாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது மணிகண்டன் மட்டுமே. வருவாய் துறை அமைச்சர் ஆர்பி உதயக்குமார் தகவல் தொழில்நுட்ப துறையை கூடுதாக கவனிப்பார் என்றும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.