இட ஒதுக்கீடு...ஆட்சியில் இருந்தபோது ஸ்டாலின் என்ன செய்தார்...எல். முருகன் கேள்வி!!
சென்னை: கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரத்தில் இதுவரை இன்னும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? பட்டியலின மக்களுக்கு தமிழகத்தில் இட ஒதுக்கீடு குறைந்தது 20 சதவீதம் இருக்க வேண்டும். ஆட்சியில் இருந்தபோது ஸ்டாலின் என்ன செய்து கொண்டு இருந்தார் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் தி. நகரில் இருக்கும் பாஜக அலுவலகமான கமலாலயத்திற்கு இன்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் வந்திருந்தார். அவர் அங்கு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''நாடு முழுவதும் பழங்குடியின மக்களுக்கு 7.5 சதவீதம், பட்டியலின மக்களுக்கு 15 சதவீத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதுவும் மாநிலங்களில் இருக்கும் இந்த மக்களின் சதவீதத்தைப் பொறுத்து மாறுபடும். அப்படி பார்க்கும்போது, பட்டியலின மக்களுக்கு தமிழகத்தில் இட ஒதுக்கீடு குறைந்தது 20 சதவீதம் இருக்க வேண்டும்.
ஏன் ஆட்சியில் இருந்தபோது இதை திமுக தலைவர் ஸ்டாலின் கேட்கவில்லை. அவர் மாநிலத்தின் துணை முதல்வராகவும் இருந்துள்ளார். அவரது எம்.பி.க்கள் ஏன் இதுபற்றி வலியுறுத்தவில்லை. கடுமையாக உழைத்து முன்னேறிய நீதிபதிகளை ஆர்.எஸ். பாரதி இழிவாகப் பேசினார். அப்போது, ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுத்தார்.
இதேபோல், தலைமை செயலாளரை சந்தித்த திமுக எம்.பி.க்கள், ''நாங்கள் என்ன மூன்றாம் தர மக்களா?'' என்று கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கும் இன்று வரை ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்கவில்லை.
கொரோனா சிகிச்சை அளிக்க மறுத்த 3 தனியார் மருத்துவமனைகள்.. 28 நாள் போராடி பலியான டாக்டர்!
சரத்குமார், ரஜினிகாந்த் இருவர் மட்டுமே கந்த சஷ்டி கவசம் இழிவு செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர். ஏன் பிற கட்சிகள் கண்டனம் தெரிவிக்கவில்லை. தனக்கும் கறுப்பர் கூட்டத்துக்கும் என்ன சம்பந்தம் என்று ஸ்டாலின் விளக்க வேண்டும். தமிழ் மற்றும் இந்து சமுதாயம் இதற்கு எதிர்வினையாற்றும். இதை நான் எச்சரிக்கையாக ஸ்டாலினுக்கு கூறுகிறேன்'' என்று தெரிவித்தார்.