இதுதான் முதல் முறை.. ஸ்டாலினே நேரடியாக விஜயகாந்த் வீட்டுக்கு சென்றது ஏன்?
Recommended Video
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரடியாகச் சென்று உடல் நலம் விசாரித்ததுதான் இன்றைய அரசியலில் மிகவும் பரபரப்பான செய்தியாக உள்ளது.
அரசியலுக்கு விஜயகாந்த் வந்த பிறகு, அவர் இல்லத்திற்கு ஸ்டாலின் செல்வது இதுதான் முதல்முறை என்பது இதில் மற்றொரு சிறப்பம்சம்.
ஸ்டாலின் மற்றும் விஜயகாந்த் நடுவே நீண்ட காலமாகவே பனிப்போர் நிலவி வருவதாக தகவல் வெளியாகி கொண்டிருந்த நிலையில் இந்த சந்திப்பு என்பது ஒரு நல்ல தொடக்கமாக பார்க்கப்படுகிறது.
தொகுதி பங்கீட்டில் இழுபறி
அதிமுகவுடன் தொகுதி பங்கீட்டில் தேமுதிகவுக்கு இழுபறி நிலை நீடித்து வருவதால், திமுக பக்கம் அந்த கட்சியை கொண்டு வந்துவிட வேண்டும் என்று ஸ்டாலின் நினைக்கிறார். நேற்று திடீரென காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர், விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியது ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில்தான் என்று தகவல்கள் கூறுகின்றன. திருநாவுக்கரசர், விஜயகாந்தின் மிக நீண்டகால நண்பர். சினிமா காலகட்டத்திலிருந்தே இருவரும் நெருக்கமானவர்கள். எனவே, தனது மனதில் இருந்த ஆதங்கத்தை விஜயகாந்த் அப்பொழுது கொட்டி தீர்த்துள்ளார்.
ஆதங்கம்
"நான் கலைஞர் மறைவின்போது அமெரிக்காவிலிருந்தேன். எனவே அவரது இறுதி அஞ்சலிக்கு செல்லமுடியவில்லை. இருப்பினும் அஞ்சலி செலுத்தி ஒரு வீடியோவை வெளியிட்டேன். சென்னை வந்ததுமே கலைஞரின் நினைவிடம் சென்று மரியாதை செலுத்திவிட்டு மறு வேலையை தொடங்கினேன். எனது திருமண மண்டபத்தை கருணாநிதி ஆட்சிக்காலத்தில் இடிப்பதாக கூறிய போதிலிருந்து எங்களுக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. இதுவரை திமுகவுடன் கூட்டணி அமைப்பதை, தேமுதிக தவிர்த்து வந்துள்ளது. இருப்பினும் கருணாநிதி மீது கொண்ட அளப்பரிய மரியாதை காரணமாக அவருக்கு அஞ்சலி செலுத்தினேன்" என்றுள்ளார் விஜயகாந்த்.
விஜயகாந்த் சொன்னது
மேலும் அவர் கூறுகையில், "உடல்நலம் சரியில்லாமல், அமெரிக்காவிலிருந்து, சிகிச்சை பெற்று திரும்பி வந்துள்ள என்னை, திமுக தலைவர்கள் யாருமே நேரில் நலம் விசாரிக்கவில்லை. நான் திமுக கூட்டணியில் சேருவதற்கு ஸ்டாலினுக்கே விருப்பமில்லை என்று தெரிகிறது. 2016 சட்டசபை தேர்தலின் போதும் திமுகவுடன் நெருங்கவிடாமல் ஸ்டாலின்தான் முட்டுக்கட்டை போட்டார். அப்படி இருக்கும்போது நான் எப்படி உங்கள் கோரிக்கையை ஏற்க முடியும்", என்று மனதில் இருந்த ஆதங்கம் அத்தனையும் போட்டு உடைத்துவிட்டார் கேப்டன்.
திருநாவுக்கரசர் ஆலோசனை
இந்த தகவல் உடனடியாக திருநாவுக்கரசர் மூலமாக ஸ்டாலினிடம் பகிரப்பட்டது. பழைய கதையை விடுங்கள்.. மனஸ்தாபத்தை மறந்து மனிதாபிமான உணர்வோடு அனைவரும் ஒன்றிணைய, ஆவன செய்யுங்கள் என்று திருநாவுக்கரசர் ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன. சில விஷயங்களில் விஜயகாந்து மிகவும் பிடிவாதக்காரர். தன்மான உணர்வு கொண்டவர். எனவே அவரை நேரில் சென்று நலம் விசாரித்தால் மகிழ்ச்சி அடைவார், கோபம் குறையும். அதன் பிறகு திமுக மற்றும் தேமுதிக நடுவே எந்த கசப்பும் இருக்காது, என்று திருநாவுக்கரசர் தனது யோசனையை முன் வைத்ததாக கூறப்படுகிறது.
தேமுதிக முக்கியம்
திமுகவைப் பொறுத்த அளவில் பாமக தங்கள் பக்கம் வராமல், அதிமுக பக்கம் போய் விட்டதால் அதிர்ச்சியில் உள்ளது. காங்கிரஸை தவிர, திமுக கூட்டணியில், தமிழகம் முழுக்க பரவலாக செல்வாக்குள்ள கூட்டணி கட்சி தற்போதைக்கு எதுவும் இல்லை. ஆனால் தேமுதிகவிற்கு சுமார் 3 சதவீதம் வாக்கு வங்கி உள்ளது. அதுவும், வட மாவட்டம் என்று மட்டும் இல்லாமல், தமிழகம் முழுக்க பரவலாக உள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான், தேமுதிகவை எப்படியாவது திமுக பக்கம் கொண்டு வரவேண்டும் என்பதற்காக ஸ்டாலின் இன்று நேரடியாக விஜயகாந்தை சந்தித்து நலம் விசாரித்துள்ளார், என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
வேண்டாம் என்ற ஸ்டாலின்
2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது எப்படியாவது தேமுதிகவை, திமுக கூட்டணிக்கு கொண்டுவந்துவிட வேண்டும் என்று கருணாநிதி மிகவும் முயற்சி செய்தார். ஆனால், காங்கிரஸ் கூட்டணியை கொண்டே நாம் எளிதாக வெற்றி பெற்று விடலாம். நமக்கு நாமே பிரச்சார பயணம் அதற்கு உதவும் என்று ஸ்டாலின்தான், கருணாநிதிக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்பட்டது. அரசியல் சாணக்கியர் என்று அழைக்கப்படும், கருணாநிதியோ, தேமுதிகவின் வாக்குகள் திமுகவுக்கு, மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்திருந்தார். கடைசிவரை பழம் நழுவி பாலில் விழும் என்று காத்திருக்கிறேன் என்றுதான் கருணாநிதி கூறினார்.
கசப்புகளை மறப்போம்
ஆனால் மக்கள் நல கூட்டணியில் விஜயகாந்த் கட்சி சேர்ந்தது. இதற்கு காரணம் ஸ்டாலின் தரப்பு விஜயகாந்த் கட்சியிடம் காட்டிய முறைப்புதான் என கூறப்படுகிறது. இதனால் வாக்குகள் சிதறி, திமுக சிறு இடைவெளியில் வெற்றிவாய்ப்பை அதிமுகவிடம் பறிகொடுத்தது. ஒருவேளை அன்று ஸ்டாலின் ஒத்துழைத்திருந்தால் இப்போது திமுக கூட்டணியில் தான் தேமுதிக இருந்திருக்கும். இந்த கசப்புகளை மறக்கடிப்பதற்காகத்தான் இப்பொழுது ஸ்டாலினே சற்று இறங்கி வந்து, விஜயகாந்திடம் நலம் விசாரித்துள்ளார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.