சீறிய ஸ்டாலின்.. "என்னாது 200 தொகுதிகளில் திமுக போட்டியா?".. பாய்ச்சலுக்கு இதுதான் காரணமாம்!
முக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையின் பின்னணி என்ன?
சென்னை: "200 தொகுதிகளுக்கும் மேல் திமுக போட்டியா? ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார்கள்? திமுக கூட்டணியை அந்த சக்திகளால் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது" என்று அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் திடீரென ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.. இதற்கு பின்னணி காரணம் என்ன?
நேற்று முக ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.. அதில், "200 தொகுதிகளுக்கும் மேல் திமுக போட்டியிட போகிறது என்று ஓர் அனுமானத்தை மையமாக வைத்து விவாதிக்கிறார்கள்.
தேர்தல் அறிவிப்பு வெளியாகி, கூட்டணிக் கட்சிகள் ஒருமுறை அல்ல, 2, 3 முறை உட்கார்ந்து பேசி, போட்டியிடப் போகும் தொகுதிகள் இறுதி செய்யப்படுவதுதான் வாடிக்கை. அதற்குள் இவர்கள் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. இவையெல்லாம் விவாதத்திற்கான பொருளே அல்ல.
அறிக்கை
கூட்டணிக்குள் ஏதாவது திருகு தாளங்களை செய்து, துாய சுமூகமான உறவு நிலையைக் கெடுத்து, திசை திருப்பி விடலாம் என்ற சபலத்துடன், சில சக்திகள் இறங்கி உள்ளன. அவர்களுடைய ஆசையும், நோக்கமும், பாஜக-அதிமுக கூட்டணிக்கு, எந்த வழியிலாவது உதவிட வேண்டும் என்பது தான்.தி.மு.க., கூட்டணியை, அந்த சக்திகளால் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது" என்று உறுதிபட கூறியிருந்தார்.
முக்கிய நிர்வாகிகள்
ஸ்டாலின் ஏன் திடுதிப்பென்று இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டார்? என்ன காரணம்? யார் காரணம் என்பதை சில முக்கிய நிர்வாகிகளிடம் பேசினோம்.. அவர்கள் சொன்னதாவது: "அதிமுகவில் உள்ள கூட்டணி கட்சிகளில் பாஜகவை தவிர வேறு யாருமே இப்போதைக்கு தேர்தல் சம்பந்தமான விவாதத்தை கிளப்பவில்லை.. பாஜக மட்டுமே 60 சீட் என்று அடிபோட்டு, பல அதிரடிகளை செய்து வருகிறது.
விசிக
ஆனால், திமுகவில் அப்படி ஒருவர்கூட கூட்டணி பேச்சை பகிரங்கமாக எழுப்பவில்லை.. பேச்சுவார்த்தையும் நடத்தவே ஆரம்பிக்கவில்லை.. திருமாவளவனிடம் அன்னைக்கு செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோதுகூட, "இதுக்கெல்லாம் இன்னும் நேரமிருக்கு.. இப்போது என்ன அவசரம்?" என்றே கேட்டார்.
தனிச்சின்னம்
வைகோவிடம் இதுபோன்றே செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோதுகூட திமுகவை அவர் குறை சொல்லவே இல்லை, "மதிமுக தனிச்சின்னத்துடன் போட்டியிடும் " என்றுதான் சொன்னார்.. அது வைகோவின் நியாயமான உரிமை.. அவரது கட்சிக்கான அங்கீகாரத்தை அவர் சொல்வதில் தவறில்லை.. அதுமட்டுமல்ல, திமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்பதைதான் இவர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.
விவாதங்கள்
இதில் சிக்கல் எங்கே எழுந்துள்ளதென்றால், ஒருசில டிவி விவாதங்களில் திமுகவுக்கு எதிரான சில கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது.. விவாதங்களில் பங்கேற்போர், அரசியல் நோக்கர்கள் என்ற பெயரில் எதையாவது தங்கள் சொந்த கருத்தையும் சேர்த்து சொல்லி விடுகிறார்கள்.. அப்படித்தான் 200 தொகுதிகளில் திமுக தனித்து போட்டி என்றார்கள்.. பாமகவுடன் ரகசிய பேச்சுவார்த்தை என்றார்கள்.
கடிவாளம்
இவ்வளவு நாட்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஸ்டாலின் இந்த விவாதங்களை பார்த்திருக்க வாய்ப்பிருந்திருக்காது.. இப்போது வீட்டில் இருப்பதால், விவாதங்களை பார்க்கிறார் போலும்.. அதனால் நேரடியாகவே சில விஷயங்களை அவர் கவனித்திருக்கிறார்.. அதனால்தான் உடனடியாக வந்து இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.. ஆனாலும், விவாதங்கள் தொடரதான் செய்யும்" என்றனர்.