மு.க.ஸ்டாலின் ஏன் அப்படி ஒரு வார்த்தையை சொன்னார்.. ஜெயக்குமார் சொல்வது போல வெறும் "நாடகமா"?
அதிமுக அரசுடன் இணைந்து போராட தயார் என்று ஸ்டாலின் கூற என்ன காரணம்?
சென்னை: இட ஒதுக்கீடு விவகாரத்தில், அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயாராக இருக்கிறது என்று ஸ்டாலின் ஏன் சொன்னார்? ஏதேனும் உள்நோக்கம் இருக்கிறதா? என்ற ஹாட் டாப்பிக்தான் அரசியல் களத்தில் தகித்து வருகிறது.
நேற்று முன்தினம் திமுக தலைவர் வெளியிட்ட அறிக்கையில், "மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அனுமதியளிக்கக் கோரி ஆளுநருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். இந்த நேரத்தில் அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார்! கட்சிகளுடன் பேசி போராட்டத்தை அறிவித்திட தமிழக முதல்வர் முன்வர வேண்டும்" என்று கூறியிருந்தார்.
தமிழக அரசியலை பொறுத்தவரை அதிமுகவும், திமுகவும் எப்பவுமே எதிரும் புதிருமாக இருந்து வரும் நிலைலையில், "இணைந்து போராடலாம்" என்று ஸ்டாலின் அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தது ஆச்சரியமாக பார்க்கப்பட்டு வருகிறது.
ஸ்டாலினின் இந்த அறிவிப்பை அமைச்சர்கள் பலர் விமர்சித்து வருகிறார்கள்.. "அதிமுக அரசுடன் இணைந்து போராட தயார் என ஸ்டாலின் கூறியது அரசியல் நாடகம்" என்று அமைச்சர் ஜெயக்குமார்
கூறியிருந்தார்.. அதேபோல அமைச்சர் பாண்டியராஜன், 'இது தேவையற்ற ஒன்று. ஸ்டாலின் போராட பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. அதற்காக போராடட்டும்' என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், ஸ்டாலின் ஏன் திடீரென இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டார் என்று நடுநிலையாளர்கள் சிலரிடம் பேசினோம்.. அவர்கள் சொன்னதாவது: "எல்லாத்துக்கும் உள்நோக்கம் கற்பிக்க கூடாது.. இதில் அரசியல் எதுவுமே இல்லை.. வழக்கமாக மாநில உரிமைகளுக்காக, எந்த கட்சியாக இருந்தாலும் இணைந்து போராடுவது என்பது காலங்காலமாக நடந்து வரும் விஷயம் ஆகும்.
இப்படித்தானே காவிரி பிரச்சனை உட்பட நீட் தேர்வு வரை ஒன்று சேர்ந்து இருக்கிறோம்.. எந்த மசோதா நிறைவேற்றுவதாக இருந்தாலும் அனைத்து கட்சிகளுடன் சேர்ந்து ஒப்புதலை பெற்றுதானே நிறைவேற்றி வருகிறோம்.. ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம் என்கிறார்களே, அதற்கு அர்த்தம் இதுதான்.
ஸ்டாலின் சொல்வது போல போராட்டம் என்றால், தெருவில் இறங்கி கொடி பிடித்து போராடுவது அல்ல.. மாணவர் நலனுக்கு அதிமுக அரசு எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு திமுக ஒத்துழைக்கும் என்பதுதான் பொருள். இன்னொன்னு அமைச்சர்கள் சொல்வது போல, மாணவர்கள் விஷயத்தை வைத்து அரசயில் செய்ய வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை.. அதற்கு எத்தனையோ பிரச்சனைகள் உள்ளன..
இருந்த இடத்தில் இருந்தே பிக்பாஸ் போல் கண்காணிக்கும் ஸ்டாலின்.. மாஸ்டர் பிளான்!
மேலும் முதல்வரையும், துணை முதல்வரையும் மத்திய அரசுக்கு எதிராக போராட விட்டு, பாஜகவின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டும் என்று திமுக சுத்தமாக நினைக்கவில்லை.. அப்படி பாஜகவை எதிர்த்து போராடவும் அதிமுக அரசு தயாராக இல்லை.. இந்த விஷயத்தில் ஸ்டாலின் ஆதரவு தருவதாக சொன்னது அப்பட்டமான அரசியலோ, நாடகமோ இல்லை.. முழுக்க முழுக்க மாணவர்களின் நலன் சார்ந்தது போலதான் தெரிகிறது" என்றனர்.