ரஜினி குறித்த கட்டுரை... திடீரென பின்வாங்கிய முரசொலி.. பரபரப்பு பின்னணி
சென்னை: ரஜினி குறித்து கட்டுரை வெளியிட்ட முரசொலி நிர்வாகம் திடீரென தங்கள் ஆசிரியர் குழுவுக்கு புதிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளதன் பின்னணி என்ன?
ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருகிறேன் என அறிவித்த நாள் முதல் இன்று வரை தனது ரசிகர்களுக்கு கூறும் அறிவுரை தாய், தந்தை, குடும்பத்தை பார்த்துக் கொள்ளுங்கள். அதற்கு பிறகே ரசிகர் மன்ற பணி, மக்கள் மன்ற பணி என்று அறிவுறித்தி வருகிறார்.
இப்போது மட்டுமில்லை. இத்தனை ஆண்டுகளாக முதலில் குடும்பத்தை பாருங்கள் என்பதையே முன் வைத்தும் வருகிறார். இந்நிலையில் இத்தனை நாட்கள் ரஜினிக்கு விசுவாசமாக இருந்த ரசிகர்கள் இன்று அரசியல் என்றவுடன் சிலருக்கு பணம் சம்பாதிக்கும் ஆசை துளிர்விட்டதாக கூறப்படுகிறது.
[ ரஜினி குறித்த கட்டுரை.. இனி கவனத்துடன் செயல்படுவோம்- முரசொலி]
கவனத்துக்கு சென்றது
இதை அறிந்த ரஜினி தற்போதே வேரோடு அவர்களை கிள்ளி எறிந்தார். மேலும் 30 - 40 ஆண்டுகளாக ரசிகர்களாக உள்ள சிலருக்கு மக்கள் மன்றத்தில் பொறுப்புகள் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர்கள் அதிருப்தி அடைந்தது ரஜினியின் கவனத்துக்கு சென்றது.
கட்டுரை
இதையடுத்து ரசிகர்களுக்கு காட்டமான ஒரு அறிக்கையை வெளியிட்டார். பணம், பதவி என பேராசை இருந்தால் இப்போதே விலகிவிடுங்கள் என்று கடந்த டிசம்பரில் தான் கூறிய நிலையிலும் ரசிகர்கள் பதவிக்காக சண்டையிட்டுக் கொள்கிறார்களே என்ற மனவேதனை அந்த அறிக்கையில் தெரிந்தது. இதை கிண்டல் செய்து கடந்த 26-ஆம் தேதி முரசொலி நாளிதழில் கட்டுரை வெளியானது.
முரசொலியை வசைப்பாடிய ரசிகர்கள்
இதைத் தொடர்ந்து தம்மையும் ரசிகர்களையும் யாராலும் பிரிக்க முடியாது என மீண்டும் ஒரு அறிக்கையை ரஜினி வெளியிட்டார். எனினும் முரசொலி கட்டுரை ரஜினி தரப்பையும் ரசிகர்களையும் கோபத்துக்குள்ளாகியது. இதை உணர்ந்த ஸ்டாலின் தரப்பு சமாதான பேச்சுவார்த்தை நடத்த அவரை நாடியது. எனினும் ரஜினியின் கோபம் உச்சத்திற்கு சென்றது. அவர்களின் விளக்கத்தை ஏற்கவும் இல்லையாம். மேலும் ரசிகர்களும் முரசொலியை கடுமையாக வசைப்பாடினர்.
ஆசிரியர் குழு
இதையடுத்து ஸ்டாலின் தரப்புக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இதனால் ரஜினியை திருப்திப்படுத்த முரசொலி இன்று ஒரு விளக்கம் அளித்துள்ளது. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து முரசொலியில் வெளி வந்த கட்டுரை சில நல்ல மனதை புண்படுத்துவதாக உள்ளதென்று கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இனி அத்தகைய செய்திகளை வெளியிடுவதில் கவனத்துடன் செயல்படுமாறு ஆசிரியர் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.