திடீரென தமிழகத்தில் கூட்டணி அமைப்பது பற்றி பேசும் மோடி.. பின்னணி காரணம் இதுதான்
Recommended Video
சென்னை: வாஜ்பாய் காலத்தில் பாஜக அமைத்துக்கொண்ட கூட்டணி குறித்தெல்லாம் திடீரென பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
வரும் லோக்சபா தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியைப் பிடிப்பது இயலாத காரியம் என்பதற்கான பிரதமரின் ஒப்புதல் வாக்குமூலமாக இது பார்க்கப்படுகிறது.
அடுத்தடுத்து 19 மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்த பாஜகவிற்கு, குஜராத்தில் விழுந்தது முதல் அடி. என்னதான் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டாலும், காங்கிரஸ் கட்சி அங்கு மரண பயத்தை உண்டாக்கிவிட்டது. சிறு இடைவெளியில்தான், மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது பாஜக.
கூட்டணி தேவை
அந்த தேர்தலுக்கு பிறகு தான் முதல்முறையாக கூட்டணியின் முக்கியத்துவத்தை உணர்ந்து பேச ஆரம்பித்தனர் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா. போதாத குறைக்கு மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜக சமீபத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பறிகொடுத்தது.
திடீர் மாற்றம்
இந்த தேர்தலுக்கு பிறகு மோடியும், அமித் ஷாவும் முற்றாக மாறிப்போய்விட்டனர். இதுவரை வெற்றிபெறும் போதெல்லாம், அதற்கு மோடியும், அமித் ஷாவும்தான் காரணம் என்று பாஜக தலைவர்கள் மேடையில் புகழ்ந்த போது அமைதி காத்து அதற்கு ஊக்கம் கொடுத்து வந்த இருவருமே, இப்போது வெற்றிக்கும் தோல்விக்கும் காரணம் ஒருவர், இருவர் என்று கூறுவது பாஜக கட்சியின் கட்டமைப்பைப் சரியாக புரிந்துகொள்ளாதவர்கள் செயல் என்று கூறத் தொடங்கியுள்ளனர். இதன் மூலமாக அனைவருக்கும் தோல்வியிலும், வெற்றியிலும், பங்கு உள்ளது என்று முதல் முறையாக கூறத் தொடங்கியுள்ளனர். தங்கள் மீது வரும் விமர்சனங்களிலிருந்து தள்ளி நிற்க இவ்வாறு கூறியிருந்தாலும்கூட, உட்கட்சி ஜனநாயகத்தை மீண்டும் பாஜக உணரத் தொடங்கியுள்ளது என்ற அளவில் அதன் நிர்வாகிகளுக்கு, மோடி, அமித்ஷாவின் பேச்சு மகிழ்ச்சி அளிக்கிறது.
வித்தியாசம்
இந்த நிலையில்தான் மோடியின் பேச்சில் இப்போது மற்றொரு வித்தியாசம் தெரிய ஆரம்பித்துள்ளது. நேற்று தமிழக பாஜக நிர்வாகிகளிடம் வீடியோவில் பேசிய மோடி, 20 ஆண்டுகளுக்கு முன்பாக வாஜ்பாய் காலத்திலேயே கூட்டணி ஆட்சி நடத்திய பெருமை பாஜகவுக்கு உண்டு என்று கூறியுள்ளார். தமிழகத்தில் நமது பழைய நண்பர்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ள பாஜக தயாராக இருக்கிறது. கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன, என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து கணிப்பு
சமீபத்தில் வெளியான பல்வேறு கருத்து கணிப்புகளும், வரும் லோக்சபா தேர்தலில் பாஜக கடந்த தேர்தலில் போல அறுதிப்பெரும்பான்மை பிடிக்க முடியாது என்று கூறுகின்றன. வட இந்தியாவில் கணிசமாக வெற்றி பெறுவதன் மூலமாக, தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுக்கும் என்றும், ஆனால் ஆட்சி அமைப்பதற்கு பிற கட்சிகளின் கூட்டணி அவசியம் என்றும் அந்த கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
கை விரிப்பு
இந்த நிலையில்தான் கூட்டணி குறித்து பிரதமர் மோடி, பேச ஆரம்பித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் அதிமுகவில் உள்ள சில தலைவர்கள், பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது. எனவே அதிமுகவிடமிருந்து பாசிட்டிவ் சிக்னலில் இதுவரை கிடைக்கவில்லை. ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் அவருடன் கூட்டணி அமைக்கலாம் என்று பாஜக நினைத்திருந்தது. ஆனால், அவரும் கட்சி தொடங்க வில்லை.
பழைய நண்பர்கள்
இந்த நிலையில்தான், பழைய நண்பர்கள் என்று பழைய பல்லவியை பாடி உள்ளாராம் பிரதமர் மோடி. பாமகவிற்கு சுமார் 5 முதல் 6 சதவீத வாக்கு வங்கி உள்ளது. தேமுதிகவுக்கு 2 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள். அதையும் விட்டுவிட வேண்டாம், என்பதால்தான் தமிழகத்தில் கூட்டணி அமைக்க தயார் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இதுவரை கூட்டணி கட்சிகளை கண்டுகொள்ளாமல் இருந்த பாஜக இப்போது இறங்கி வரத் தொடங்கி இருப்பது 5 மாநில தேர்தலில் தோல்வியும், லோக்சபா தொடர்பான கருத்து கணிப்புகளும்தான் என்கின்றனர், அரசியல் பார்வையாளர்கள்.