நெல்லை, ராமநாதபுரம் உட்பட பல பகுதிகளில் அதிகாலை முதல் என்ஐஏ ரெய்டு.. பின்னணி என்ன?
Recommended Video
சென்னை: தீவிரவாத இயக்கங்களுக்கு நிதி திரட்டப்பட்டதா? என்பது தொடர்பாகத்தான் இன்று நெல்லை, ராமநாதபுரம் உட்பட 4 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இலங்கை தேவாலயங்களில் கடந்த ஈஸ்டர் தினத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 250க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் தமிழகம், கேரளா மாநிலங்களை சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து இந்திய தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகளுக்கு காவல்துறையிலிருந்து தகவல் வழங்கப்பட்டது. தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த சிலர் வெளிநாடுகளில் வசித்தபடி, அங்கிருந்து தீவிரவாத இயக்கங்களுக்கு நிதி திரட்டுவது தெரியவந்தது.
14 பேர்
துபாயில் பணி செய்து கொண்டு வாட்ஸ்அப் குழு மூலம் நிதி திரட்டிய 14 பேர் கண்டறியப்பட்டனர். டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்ட, 14 பேரையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். டெல்லியில் கைதான அன்சாருல்லா இயக்கத்திற்கு அவர்களில் சிலர் நிதி திரட்டியதும் கூடுதல் தகவலாக விசாரணையில் தெரியவந்தது.
வீடுகளில் ரெய்டு
இந்த 14 பேரில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த ரபிஅகமது, பைசுல், முன்சகீர், முகைதீன் சாகுல்ஹமீது, வாலி நோக்கம் பாரூக், மதுரை நரிமேடு முகமது ஷேக் மைதீன் ஆகியோரும் அடக்கமாகும். இந்த நிலையில்தான், அவர்கள் வீடுகளிலும் சோதனை நடத்த, என்ஐஏ அதிகாரிகள் முடிவு செய்தனர்.
வழக்குகள்
மதுரை, நெல்லை, ராமநாதபுரம், தேனி ஆகிய அந்தந்த மாவட்ட தலைமையிடம் அனுமதி பெற்றுவிட்டு, இன்று அதிகாலை அதிரடி ரெய்டுகளை ஆரம்பித்துள்ளனர். கைது செய்துள்ளவர்கள் மீது உள்ளூர் காவல் நிலையத்தில் வழக்குகள் ஏதும் உள்ளதா, வேறு எந்த இயக்கத்துடனும் அவர்கள் தொடர்பில் இருக்கிறார்களா? என்பது குறித்தெல்லாம் அதிகாரிகள் விசாரித்தனர்.
செல்போன்கள் ஆய்வு
கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் சோதனை செய்யும்போது அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் செல்போன்களையும் வாங்கி ஆய்வு செய்கிறார்கள் அதிகாரிகள். பணப் பரிமாற்றம், வாட்ஸ்-அப், எஸ்எம்எஸ் உள்ளிட்ட தகவல்களையும் ஆய்வு செய்தனர். வேறு யாருக்கும் இவர்கள் மூளைச் சலவை செய்துள்ளனரா என்பதை அறியவும் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.