ரொம்ப நேரமா ஒரே இடத்தில் நிற்குதே நிவர் புயல்.. திசைமாறுமா, வலுவிழக்குமா? பாலச்சந்திரன் பளிச் பதில்
சென்னை: நிவர் புயல் இன்று காலை முதல் மதியம் வரை ஒரே இடத்தில் நிலை கொண்டு இருக்கிறது. இவ்வாறு இருப்பதால் புயல் வலுவிழக்குமா, புயல் திசை மாறுமா என்பது போன்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்தன. இதற்கு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பதிலளித்துள்ளார்.
இன்று நண்பகல் செய்தியாளர்களை சந்தித்தார், பாலச்சந்திரன். அப்போது அவர் கூறியதை பாருங்கள்:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், புதுச்சேரிக்கு, கிழக்கு, தென்கிழக்கில், 410 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 450 கிலோ மீட்டர் தொலைவிலும், நிவர் புயல் நிலை கொண்டுள்ளது.
ஆடாமல் அசையாமல்.. 3 மணி நேரமாக அங்கேயே நிற்கும் நிவர் புயல்.. வச்சு செய்யுமோ!
தீவிர புயலாக மாறும்
தற்போது அதன் நகரும் வேகம் குறைந்து உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இது தீவிர புயலாக வலுப்பெறும். காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே நாளை மாலை கரையைக் கடக்க கூடும். இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் கடலோரப் பகுதிகளில்பெரும்பாலான பகுதிகளிலும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய கூடும்.
120 கி.மீ வேகம்
நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை முற்பகல் முதல் இரவு வரை 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
புயலின் வேக மாறுபாடு
இன்று காலைதான் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. நேற்று காலை, அது 25 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டு இருந்தது. அதன் பிறகு காலை 11:30 மணிக்கு, 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்தது. நேற்று மாலைக்கு பிறகு, 4 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து தற்போது நிலையாக நிற்கிறது.
வேகம் மாறுவதற்கு காரணம் என்ன?
இப்போது இலங்கை நிலப் பிராந்தியத்துடன் புயல் தொடர்பில் உள்ளது. புயல் நிலையை மாற்றும் போது நகரும் வேகம் குறையும். வேறு நிலப்பகுதியுடன் தொடர்பு கொள்ளும்போது புயல் நகரும் வேகம், ஏற்ற இறக்கத்தோடு காணப்படும். நிவர் புயல் தீவிர புயலாக மாறக் கூடிய சூழ்நிலை இருக்கிறது. அது தீவிர புயலாக மாறிய பிறகு அதன் வேகம் அதிகரிக்கும். சற்று நேரம் நிலையாக நின்று, வலுப்பெற்ற பிறகு அது நகர்ந்து வரும்.
Recommended Video
புயல் திசை மாறாது
புயல் நிலையாக இருப்பதற்கும், நகரும் வேகத்திற்கும், புயல் திசைமாற்றத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. புயலின் இயல்பில் வேண்டுமானால் மாற்றம் வரும். அதாவது வலுப்பெறும் அல்லது வலுவிழக்கும். ஆனால் புயலின் திசையை, அது நகரும் வேகம் தீர்மானிப்பது கிடையாது. எந்த புயலும் ஒரே சீரான வேகத்தில், ஒரே கிலோ மீட்டர் வேகத்தில் நகராது. சுற்றுப்புறச் சூழ்நிலை உள்ளிட்டவை அடிப்படையில்தான் புயல் நகரும் வேகம் இருக்கும். புதுச்சேரி தான் முக்கியமான புயல் தாக்க கூடிய பகுதியாக இருக்கிறது. சென்னையை பொறுத்த அளவில் காற்றின் தாக்கம் இருக்கக்கூடும். அதிகபட்சம் 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். இவ்வாறு வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.