பப்ஜி மதனை விட மோசமான ரவுடி பேபி சூர்யா, திருச்சி சாதனா கைது செய்யவில்லை ஏன்?.. குவியும் புகார்கள்
சென்னை: யூடியூப்களில் பப்ஜி மதனை விட நிறைய ஆண்களும் பெண்களும் ஆபாசமாக பேசியும் ஆபாச உடை அணிந்தும் வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். அவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு புகார்கள் குவிகின்றன.
Recommended Video
யூடியூப்களில் லைவ்களிலும் வீடியோக்களிலும் பெண்கள், ஆண்கள் ஆபாசமாக பேசி வருவதாகவும் ஆபாச உடையணிந்து கொண்டு டான்ஸ் ஆடுவதாகவும் புகார்கள் எழுந்தன. சிலரிடம் சைபர் கிரைம் போலீஸார் விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் செயலாளரும் ஒருங்கிணைந்த மகளிர் கூட்டமைப்பு தலைவியுமான புனிதவள்ளி கூறுகையில், யூடியூப் சேனல் வழியாக பலரும் தங்களுக்கு விருப்பப்பட்டதை வீடியோவாக்கி பதிவேற்றம் செய்து வருகிறார்கள்.
அநாகரீகம்
அதே நேரம் ஆபாசமாகவும் அநாகரீகமாகவும் பேசி நடிக்கும் பலரும் அதை வீடியோவாக்கி யூடியூப் சேனலில் வெளியிட்டு வருகிறார்கள். குறிப்பாக ரவுடி பேபி சூர்யா, திருச்சி சாதனா, திருச்சி இலக்கியா, ஜிபி முத்து உள்ளிட்டோர் பதிவிடும் வீடியோக்கள் மிகவும் மோசமாக உள்ளன.
கொரோனா காலகட்டம்
தற்போது கொரோனா காலகட்டம், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் ஆன்லைன் வாயிலாக படித்து வருகிறார்கள். அதற்காக இணைய வசதியுடன் கூடிய மொபைல் போன் பயன்படுத்துகிறார்கள். அத்துடன் யூடியூப் சேனல்களையும் பார்க்கிறார்கள்.
எதிர்கால சமூகம் கெட்டுவிடும்
அவற்றை பார்க்கும் எதிர்கால சமூகம் கெட்டு குட்டிச்சுவர் ஆகிவிடும். எனவே ஆபாச பேச்சு வீடியோக்களை, யூடியூப் சேனலில் இருந்து எடுக்க வேண்டும். இனி அவர்கள் பதிவிட முடியாதபடி செய்ய வேண்டும். கூடவே இப்படி மோசமாக வீடியோ வெளியிடுபவர்கள் மீது போலீஸ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை
இந்த பிரச்சினை குறித்த புகாரை டிஜிபி அலுவலகத்தில் கொடுத்தோம். உடனடி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதுவரை நடவடிக்கையே எடுக்கவில்லை. எனவே போராட்டம் நடத்துவது குறித்து யோசித்து வருகிறோம் என அவர் தெரிவித்தார். ஆபாசம் குறித்து இவர்களிடம் கேட்டால், ஆபாசமாக இருந்தால் எங்கள் சேனலை ஏன் பார்க்கிறீர்கள்? என கேள்வி எழுப்புகிறார்கள்.