3 நாட்களில் 20 இடங்களில் குண்டு வீச்சு- ஒருவர் கூட தே.பா.வில் கைது இல்லையே ஏன்? எச்.ராஜா கேள்வி
சென்னை: தமிழகத்தில் 3 நாட்களில் 20 இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டும் ஒருவர் கூட தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லையே ஏன்? என்று மூத்த பாஜக தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்புகளின் நிர்வாகிகள் வீடுகள், நிறுவனங்களை குறிவைத்து பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. இச்சம்பவங்களைக் கண்டித்து கோவையில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.
பெட்ரோல் குண்டு வீச்சு.. இன்று மாலைக்குள் அனைவரும் கைது - திருமாவளவனிடம் டிஜிபி உறுதி
அண்ணாமலை கடிதம்
மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி இருந்தார். அதில் தமிழகத்தில் நடந்த பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்களைப் பட்டியலிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி இருந்தார்.
டிஜிபி சைலேந்திர பாபு
இந்நிலையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இதுவரை 250 சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 100 நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய சில உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களது இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என டிஜிபி சைலேந்திரபாபு கூறியிருந்தார்.
தே.பா. சட்டம் பாயும்
அத்துடன் கோவை மாநகரில் ஆர்.ஏ.எப் இரண்டு பிரிவுகள், மாநில கமாண்டோ படை இரண்டு பிரிவுகள், சிறப்பு அதிரடிப்படை இரண்டு பிரிவுகள் என கூடுதலாக 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குநர் தாமரைக்கண்ணன் அங்கு முகாமிட்டுள்ளார். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது எனவும் எச்சரித்திருந்தார் டிஜிபி சைலேந்திரபாபு.
எச்.ராஜா கேள்வி
டிஜிபி சைலேந்திரபாபுவின் இந்த அறிக்கையை சுட்டிக்காட்டி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, வெற்றுப் பேச்சுககளால் பயன் கிடையாது. 3 நாட்களில் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்தும் ஒருவர் கூட தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப் படாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.