பிடிப்பட்ட 2000 நோட்டு கட்டுகள்.. சேகர் ரெட்டி மீது போடப்பட்ட 3 வழக்குகளும் ரத்து.. பின்னணி இதுதான்!
சென்னை: தொழிலதிபர் சேகர் ரெட்டி மீது தற்போதைய வழக்குடன் சேர்த்து இதுவரை தொடரப்பட்ட 3 வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டுள்ளது. ஆதாரம் இல்லை என முடித்து வைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியிடம் புதிதாக அச்சடிக்கப்பட்டு அனுப்பபட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்கள் குறித்த பதிவு அப்போது இல்லை. இதனால் தான் சேகர் ரெட்டி மீதான வழக்கில் சிபிஐயால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடியவில்லையாம். இதனால் வழக்குகள் கைவிடப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டு நவம்பர மாதம் பிரதமர் மோடி 500, 1000 நோட்டுகள் எல்லாம் செல்லாது என்று ஒரே இரவில் அறிவித்தார். அதற்கு பதில் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. 500 ரூபாய் நோட்டுகள் கொஞ்சம் தாமதமாகவே அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி ஆம் ஆண்டு, சட்ட விரோதமாக ரூ.34 கோடிக்கு புதிய ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றியதாக சேகர் ரெட்டி உள்ளிட்டோரை சிபிஐ அதிரடியாக கைது செய்தது. இதில் ரூ.24 கோடி வரை புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுக்களைப் பதுக்கி வைத்ததற்காக சேகர் ரெட்டி உள்ளிட்டோர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.
பழைய ரூபாய் நோட்டுக்கள் மாற்றிய விவகாரம்... ஆதாரங்கள் இல்லாததால் சேகர் ரெட்டி விடுவிப்பு!!
3 வழக்குகள் பாய்ந்தது
இதையடுத்து, அவரது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.8 கோடி வரை கைப்பற்றப்பட்ட போது 2-ஆவது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவரது சென்னை அலுவலகத்தில் நடத்திய சோதனையில் சிக்கிய ரூ.2.50 கோடி மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்ததற்காக, சேகர் ரெட்டி உள்ளிட்டோர் மீது 3-ஆவது வழக்கும் போடப்ப்டடது.
அதிகாரிகளுக்கு தொடர்பு
இதேபோல் சேகர் ரெட்டியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக தமிழக அரசின் அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகன ராவுக்குச் சொந்தமான இடங்களிலும், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடந்தது. இந்த விவகாரத்தில் தமிழக அரசின் முக்கிய அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக அப்போது புகார் எழுந்தது. இதுதொடர்பாக சேகர் ரெட்டி மற்றும் அவரின் கூட்டாளிகளிடம் சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வந்தது.
குற்றப்பத்திரிக்கை தாக்கல் இல்லை
இந்நிலையில் பிரதமர் மோடி 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த பின்னர் அடுத்த இரண்டு நாள்களில் நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கியிலிருந்து புதிய 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன. அந்தநேரத்தில் வங்கிகளுக்கு அனுப்பப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்கள் குறித்த பதிவு எதுவும் ரிசர்வ் வங்கியிடம் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் அதுபோன்ற வழிகாட்டுதல்கள் எதுவும் தொடக்கத்தில் அளிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், சேகர் ரெட்டிக்கு சொந்தமான இடங்களில் கைப்பற்றப்பட்ட புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எந்த வங்கிகளில் மாற்றப்பட்டது என்பது தொடர்பான விசாரணையில் சி.பி.ஐ-க்குப் பின்னடைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வழக்கில் 90 நாள்களுக்குள் சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியவில்லை. இதையடுத்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
வழக்கை ரத்து செய்ய கோரிக்கை
இதனிடையே தங்கள் மீது தொடர்ச்சியாகப் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த 3 வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி சேகர் ரெட்டி, மற்றும் ஆடிட்டர் பிரேம்குமார், ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அவர்கள் தங்கள் மனுவில் ஒரே குற்றத்துக்காக பல வழக்குகளைப் பதிவு செய்யக்கூடாது என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் எங்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட புதிய ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் அனைத்தும் மணல் குவாரி தொழில் மூலமாக வந்தவை. இதை சிபிஐ கருத்தில் கொள்ளாமல் வழக்குப் பதிவு செய்திருக்கிறது. எனவே, தங்களுக்கு எதிரான எஃப்ஐஆர்-களை ரத்து செய்ய வேண்டும், என அந்த மனுவில் கூறியிருந்தனர்.
உயர்நீதிமன்றம் உத்தரவு
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் சேகர் ரெட்டி மீது பதிவு செய்யப்பட்ட முதல் வழக்குப் பதிவை தவிர்த்து மற்ற 2 வழக்குப் பதிவுகளை ரத்து செய்தது. சேகர் ரெட்டி தவிர மற்ற 4 பேர் மீதான வழக்குப் பதிவையும் ரத்து செய்ய உயர்நீதிமன்றம் அப்போது ஆணையிட்டது. இதற்கிடையே தொழிலதிபர் சேகர் ரெட்டி உள்ளிட்ட 5 பேர் மீது பழைய ரூபாய் நோட்டுகளை அதிகாரிகளின் உதவியுடன் மாற்றியதாகக ஒரே ஒரு வழக்கு மட்டுமே நிலுவையில் இருந்து வந்தது.
ஆதாரம் இல்லை
இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கை முடித்துக்கொள்வதாக சிபிஐ கோரிக்கை வைத்தது. இதை ஏற்று சேகர் ரெட்டி உள்ளிட்டோர் மீதான வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை 870 ஆவணங்கள்,. 170 சாட்சிகள் சமர்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவர்கள் நாட்டிற்கு குற்றம் செய்தார்கள் என்பதை நீருபணம் செய்ய போதிய ஆதாரங்கள் இல்லை. எனவே சிபிஐ வழக்கை முடித்து வைக்க கோரியது. இதை ஏற்று சென்னை 11வத சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஜவஹர் வழக்கை முடித்து வைத்தார். இதன் மூலம் சேகர் ரெட்டி மீது போடப்பட்ட 3 வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டுள்ளன.