5 லட்சம் வரை பயிற்சி கட்டணம்.. நீட் தேர்வை ஏன் மத்திய அரசு திரும்பப்பெறக் கூடாது.. ஹைகோர்ட் கேள்வி
Recommended Video
சென்னை: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் திரும்ப பெற்று வரும் மத்திய அரசு நீட் தேர்வை ஏன் திரும்ப பெறவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது..
நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக மருத்துவ மாணவர்களின் கைரேகை பதிவுகளை சிபிசிஐடியிடம் வழங்க நீதிபதி கிருபாகரன் அமர்வு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
ஆள்பற்றாகுறையில் பொதுப்பணித்துறை... புதிய ஏ.இ.க்களை நியமிக்க அரசு பரிசீலனை
நீட் பயிற்சி மையம்
அப்போது, நீட் பயிற்சி மையங்கள் குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்தது. அதில், அரசு மருத்துவ கல்லூரியில் இந்தாண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள 3081 மாணவர்களில் 48 பேர் மட்டும் நீட் பயிற்சி மையத்தில் பயிலாதவர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல, நீட் பயிற்சி மையங்கள் 2 முதல் 5 லட்சம் வரை கட்டணம் வசூலிப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது..
5 லட்சம் கட்டணம்
இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், தனியார் நீட் பயிற்சி மையங்கள் 5 லட்சம் வரை கட்டணம் வசூலித்தால் ஏழை மாணவர்களால் எவ்வாறு நீட் பயிற்சி பெற முடியும் என கேள்வி எழுப்பினர்.
ஏழை மாணவர்கள்
மேலும், ஏழை மாணவர்களுக்காக மருத்துவ கல்லூரிகளின் கதவுகள் திறக்கப்படுவதில்லை என்று வேதனை தெரிவித்த நீதிபதிகள் மருத்துவ படிப்பு அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் சமமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்..
நீதிபதிகள் சாடல்
பல லட்சம் ரூபாய் கொடுத்து மருத்துவ படிப்பு சேரும் முறையை மாற்ற நீட் தேர்வு கொண்டு வந்ததாக மத்திய அரசு கூறும் நிலையில், நீட் தேர்வு பயிற்சிக்காக அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக நீதிபதிகள் சாடினர்.
57 ஆயிரம் ரூபாய் தான்
மேலும், 24 மணி நேரமும் பணியில் இருக்கும் அரசு மருத்துவர்களுக்கு 57 ஆயிரம் ரூபாய் தான் ஊதியம் வழங்குவதாகவும் இது அரசு பள்ளி ஆசிரியர்களை விட மிக குறைவானது என தெரிவித்த நீதிபதிகள் புனிதமான பணியை செய்து வரும் மருத்துவர்களுக்கு தமிழக அரசு அநீதி இழைத்துவிட்டதாகவும் தெரவித்தனர்..
நீட் தேர்வு
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் திரும்ப பெற்று வரும் மத்திய அரசு நீட் தேர்வை ஏன் திரும்ப பெறவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்..
சிபிஐக்கு உத்த்ரவு
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகம் மாணவர்களின் கைரேகைகள் இன்று சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.. இதனையடுத்து, தேசிய தேர்வு முகமை வழங்கிய கைரேகைகளை சிபிசிஐடி காவல்துறையினர் தங்களிடம் உள்ள கைரேகைகளுடன் ஒப்பிட்டு அறிக்கை தாக்கல் செய்ய எத்தனை நாட்கள் ஆகும் என்றும் நீட் ஆள் மாறாட்டம் குறித்து ஏதேனும் புகார் பெறப்பட்டுள்ளதா என சிபிஐ பதிலளிக்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நவம்பர் 7-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்..