கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தாதது ஏன்?... கனிமொழி எம்.பி கேள்வி
சென்னை: திமுக கொண்டு வந்த திட்டம் என்பதால் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை அதிமுக செயல்படுத்தவில்லை என்று கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: பொள்ளாச்சி போன்ற சம்பவமாக இருந்தாலும் தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
பெண்கள் பாதுகாக்க கூடிய எந்தவொரு செயல்பாட்டையும் அரசு செய்யவில்லை. மத்திய, மாநில அரசுகள் திணிக்க வேண்டும் என்று நினைக்க கூடிய விசயங்களை தான் திணிக்கிறார்கள், தவிர மக்களை பாதுகாக்கவும் பெண்களை பாதுகாக்கவும் எந்தவித அக்கறையும் இல்லாத சூழ்நிலை உள்ளது.
தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண அரசு சிந்திக்கவே இல்லை. எல்லா தரப்பு மக்களையும் பாதிக்க கூடிய வகையில் தண்ணீர் பிரச்சனை உள்ளது. தண்ணீர் தொட்டிக்கு முன் எத்தனை குடங்கள் வைக்க முடியும் என்ற கணக்கே இல்லை.
தண்ணீருக்காக மக்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆற்றில் ஊற்று எடுத்து மக்கள் மணிக்கணக்கில் காத்து இருந்து தண்ணீர் எடுக்கின்றனர். இதுபோன்ற சூழலில் மக்கள் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
திமுக ஆட்சியில் சென்னை மக்களுக்காக கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை கருணாநிதி கொண்டு வந்தார்.
ஆனால், இந்த அரசு, திமுக கொண்டு வந்த திட்டம் என்பதால் அதை செயல்படுத்தாமல் பராமரிக்காமல் விட்டதாலும் நீர்நிலைகள் சரியாக தூர் வாராமல் விட்டதால் தண்ணீர் பிரச்சனை அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஆனால் நிரந்தர தீர்வு காண எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் கூறினார்.
முன்னதாக, தண்ணீர் பிரச்சினையை போக்க அரசு எந்தவித முன் எச்சரிக்கை நடவடிக்கையையும் எடுக்கவில்லை. திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை நிறைவேற்றினாலே போதும், தண்ணீர் பிரச்சனை வந்து இருக்காது.
அதிமுகவை என்றுமே திராவிட இயக்கமாக ஏற்றுக்கொண்டதில்லை என கூறிய கனிமொழி, திராவிட இயக்க கருத்துக்களில் நம்பிக்கை இல்லாமல் அதிமுகவினர் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
இதனால், அதிமுகவை திராவிட இயக்கம் என எவருமே ஏற்றுக் கொண்டதில்லை, எனவும் கனிமொழி கூறினார்.