கதை கந்தல்.. நொறுக்கிய ஓபிஎஸ்.. “5 பாயிண்ட்”.. அவசர மீட்டிங், அதிரடி முடிவுக்கு பின்னணி இதுதானாம்!
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு களமிறங்கும் சூழலில், தேர்தலில் தனது தரப்பு நின்றால் வாக்கு ரீதியாக பெரிய சறுக்கல் ஏற்படும் என்று தெரிந்தும் போட்டியாக ஓபிஎஸ் களமிறங்க முடிவெடுத்திருப்பதற்குப் பின்னணியில் 5 காரணங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
ஏற்கனவே ஈபிஎஸ் அணி ரெடியாகி வரும் சூழலில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடுவோம் என்று ஓபிஎஸ் அறிவித்துள்ளதன் மூலம் தேர்தல் களத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பல வகைகளில் நெருக்கடி கொடுத்திருக்கிறார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. எனது இளைய மகனுக்கு வாய்ப்பு கேட்டுள்ளேன்.. ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி!
ஈரோடு இடைத்தேர்தல்
திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் கடந்த முறை தமாகா போட்டியிட்ட நிலையில், இந்த முறை அதிமுக போட்டியிட விட்டுக்கொடுத்துள்ளது. இதனால் காங்கிரஸ் - அதிமுக இடையே நேரடி போட்டி உருவாகியுள்ளது. அதிமுகவில் தனி அணியாக செயல்படும் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
போட்டி உறுதி
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிடுகிறோம். இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த எங்களுக்கே முழு உரிமை உள்ளது. இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டால் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவோம். இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் தேசிய கட்சி என்பதன் அடிப்படையில் நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு அவர்களை ஆதரிப்போம். இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கு காரணமாக இருக்கமாட்டேன் என்று அறிவித்தார்.
களம் அமைத்துத்தந்த ஈரோடு
ஓபிஎஸ் எத்தனை சட்டப் போராட்டங்களை நீதிமன்றங்களில் நடத்தினாலும், அதிமுக மோதல் விவகாரத்தைப் பொறுத்தவரை தேர்தல் ஆணையமே தீர்வைத் தரும் இடமாக இருக்கிறது. ஒரு தேர்தல் வந்தால் தான் கட்சி யாரிடம் இருக்கிறது என்று தெரியவரும் அதற்கு 2024 தேர்தல் வரை காத்திருக்க வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறிவந்தனர். ஆனால், எதிர்பாராத வகையில் ஒரு தொகுதி காலியாகி, அதிமுக பிரச்சனைக்கு இப்போதே களம் அமைத்துத் தந்துள்ளது ஈரோடு கிழக்கு தொகுதி.
அவசர அவசரமாக
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தமாகாவிடம் பேசி வாசனின் சம்மதத்தை பெற்றுள்ள எடப்பாடி அணி, அதிமுக களம் இறங்க தயாராகி வருகிறது. அதே நேரம் இடைத்தேர்தலில் தாங்களும் களமிறங்கப் போவதாக ஓபிஎஸ் அணி அறிவித்துள்ளது. இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை வரும் 23ஆம் தேதி கூட்டவிருக்கும் ஓபிஎஸ், இன்று அவசர அவசரமாக, தாங்கள் போட்டியிடுவோம் என அறிவித்தது ஏன் என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.
காரணம் 1
இந்த இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவது தொடர்பாக ஈபிஎஸ் தரப்பு கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் பேசி வருகிறது. அந்தவகையில் இன்று மாலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரை ஈபிஎஸ் அணியினர் சந்தித்து பேச உள்ளனர். ஈபிஎஸ் சென்று சந்தித்து அதற்கு பாஜக ஆதரவு தெரிவித்து விட்டால், தனது எதிர்காலம் அதோ கதி ஆகும் என்பதால் தான் நேற்று இரவே பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து ஆலோசனை நடத்தி இன்று காலையிலேயே விரைவாக தங்கள் தரப்பு போட்டியிடுவதாகவும், கூட்டணி கட்சி தலைவர்களை சந்திப்பேன் என்றும் ஓபிஎஸ் அறிவித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
காரணம் 2
அதிமுக வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் ஒவ்வொரு அரசியல் நகர்வுக்கும் எதிர்வினை ஆற்ற வேண்டிய கட்டாயம் ஓபிஎஸ்ஸுக்கு இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் ஈபிஎஸ் தரப்பு போட்டியிட்டு தாங்கள் போட்டியிடவில்லை என்றால், அதுவே தனக்கு பலவீனமாக அமைந்துவிடும் என்று உணர்ந்திருக்கிறார் ஓபிஎஸ். அதன் காரணமாகவே தேர்தலில் களமிறங்க நாங்கள் தயங்கமாட்டோம் எனக் காட்டும் வகையில் இன்று அறிவித்திருக்கிறார் என்கிறார்கள்.
காரணம் 3
எடப்பாடி பழனிசாமி அணியினர் ஏற்கனவே தமாகா தலைவர் ஜிகே வாசனுடன் பேசி தங்களுக்கு ஆதரவைப் பெற்ற நிலையில், மற்ற கூட்டணி கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைக்குச் செல்வார்கள். அப்படிச் சென்றால், ஈபிஎஸ் அணிதான் உண்மையான அதிமுக என்ற தோற்றம் உருவாகும். அது தனக்கு சிக்கல் என்பதால், எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், ஓபிஎஸ் தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
காரணம் 4
இந்த இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் கோருவார்கள். தான் கட்சிக்கு உரிமை கோரி வரும் நிலையில், அதிமுக சார்பில் ஈபிஎஸ் மட்டும் இறங்கினால் அவருக்கே இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் கொடுத்தாலும் கொடுத்துவிடும். எனவே இந்த இடைத்தேர்தலில் தனது தரப்பும் போட்டியிடும்போதுதான் தேர்தல் ஆணையத்திடம் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க உரிமைகோர முடியும், எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் தடுக்க முடியும் என்ற யோசனை காரணமாகவே ஓபிஎஸ் இந்த முடிவை எட்டியிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
காரணம் 5
இடைத்தேர்தலில் நின்றாலும் வாக்கு ரீதியாக தனக்கு சறுக்கல் தான் என்று தெரிந்தும் ஓபிஎஸ் துணிவோடு இறங்கி இருப்பதோடு, அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்கான ஏ ஃபார்ம், பி ஃபார்மில் தாம் கையெழுத்துப்போடத் தயார் என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இதன் மூலம், தனது ஒற்றுமை முயற்சியையும் அவர் கைவிடவில்லை. அதோடு, பாஜக விரும்பினால், தான் விலகவும் தயார் என்று அறிவித்து, பாஜகவுக்கும் இணக்கமாகச் செயல்பட்டுள்ளார். இதன் மூலம், பாஜகவின் தயவையும் தன் பக்கம் நிலைநிறுத்தப் பார்த்துள்ளார் என்கிறாகள் அரசியல் பார்வையாளர்கள்.
முழு வேகம்
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டி என்கிற முடிவை வேறு வழியில்லாமலேயே ஓபிஎஸ் எடுத்திருந்தாலும், அறிவிப்போடு நின்றுவிடாமல் அடுத்த சில மணி நேரங்களிலேயே கூட்டணி கட்சி தலைவர்களான தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரை தானே நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி சுறுசுறுப்பு காட்டி வருகிறார் ஓபிஎஸ். இதன் மூலம், தானும் களத்தில் இருப்பதை எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமல்லாது கூட்டணி கட்சிகளுக்கும் தெரியப்படுத்தி வருகிறார் என்கிறார்கள்.