அதே ஆவேசம்.. தர்மயுத்தம் காலத்து தொனி.. "பழைய பன்னீர்செல்வமாக" திரும்பிய ஓபிஎஸ்!
சென்னை: நீண்ட நாட்களுக்கு பிறகு ஓ பன்னீர்செல்வம் மீண்டும் பழைய தர்மயுத்தம் பாணியில்.. அதே தொனியில் பேசியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த போது, உடனடியாக இரவு ஓ பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவை அமைந்தது. ஆனால் முதல்வர் பதவிக்கு சசிகலா விருப்பப்பட்டதால் பன்னீர்செல்வம் தனித்து விடப்பட்டார்.
2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கூட்டப்பட்டு அதில் தங்கள் எம்எல்ஏக்கள் குழு தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அவர் முதலமைச்சராக பதவி ஏற்கும் நிலை உருவானது. பன்னீர்செல்வம் தனது பொறுப்பை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
திமுக அரசின் நடவடிக்கை.. 'அபாயகரமான சூழ்நிலை'அரசியல் ரீதியில் உருவாகும்..ஓ பன்னீர்செல்வம் எச்சரிக்கை
தர்ம யுத்தம்
முதல்வர் பதவிக்கு ராஜினாமா கடிதத்தை கொடுத்த பன்னீர்செல்வம் விரக்தி மனநிலையில் இருந்தார். 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி பின்னிரவு நேரத்தில் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் சமாதி அருகே அமர்ந்து தியானம் செய்தார். ஜெயலலிதாவின் மரணத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கூறி தர்ம யுத்தம் என்ற பெயரில் கட்சிக்குள் கிளர்ச்சி ஏற்படுத்தினார்.
விசாரணை ஆணையம்
அந்த காலகட்டங்களில் சசிகலாவுக்கு எதிராக கடுமையாக பேட்டிகளை அளித்து வந்தார் பன்னீர்செல்வம். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பன்னீர்செல்வம் கூறியதால் தான் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியது. அப்பல்லோ மருத்துவமனை இந்த விசாரணை ஆணையத்தில் மருத்துவ வல்லுனர்கள் இடம் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உச்ச நீதிமன்றம் வரைச்சென்று உள்ளதால் விசாரணை ஆணையத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
சசிகலாவை கட்சியில் சேர்க்க ஆதரவு
இதனிடையே எடப்பாடி பழனிசாமி அணியோடு நட்புறவை ஏற்படுத்திக் கொண்ட பிறகு துணை முதல்வர் பதவியை பெற்று ஆட்சிக்குள் அங்கம் வகித்தார் ஒ. பன்னீர்செல்வம். அதே நேரம் சமீபகாலமாக சசிகலா பற்றி எந்த ஒரு எதிர்மறை கருத்துக்களையும் அவர் கூறவில்லை. சட்டசபை தேர்தலுக்கு முன்பாக கூட ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இதே நிலை அதிமுகவில் தொடர சசிகலாவுக்கு சம்மதம் என்றால் அவரை கட்சியில் சேர்ப்பது பற்றி பரிசீலிக்கலாம் என்று கூட தெரிவித்தார். மார்ச் மாதம்தான் இந்த கருத்தை ஓபிஎஸ் கூறினார்.
தேர்தலுக்கு முன்பாக ஓபிஎஸ் நிலைப்பாடு
ஒருபக்கம் எடப்பாடி பழனிசாமி கடந்த பல வருடங்களாகவே.. சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லி வரும் நிலையில் தேர்தலுக்கு முன்பு சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக பன்னீர்செல்வம் ஆதரவு கருத்துக்களை தெரிவிக்க தொடங்கியிருந்தார். மேலும் தற்போது அதிமுக எதிர்க்கட்சியாக உள்ளது. புதிதாக அமைந்த திமுக அரசு முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் பற்றி நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொள்வது நல்லது என்ற மனநிலையில் பன்னீர்செல்வம் இருப்பதாக கூறப்பட்டது.
பழைய பன்னீர்செல்வம்
இரு தினங்களுக்கு முன்பாக டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகிய இருவரையும் சந்தித்து விட்டு தமிழகம் திரும்பிய ஓ பன்னீர்செல்வம், சட்டென தனது நிலைப்பாட்டை மாற்றிவிட்டார். ஆம்.. நேற்று ஓ.பன்னீர் செல்வம் "பழைய பன்னீர்செல்வம்" போல பேசியுள்ளார் . தர்ம யுத்தகாலத்தில் எப்படி அவரது குரலில் சசிகலாவுக்கு எதிரான தொனி இருந்ததோ, எப்படி ஒரு உத்வேகம் இருந்ததோ அது நேற்றைய பேட்டியில் எதிரொலித்தது.
சரமாரி பேட்டி
அதிமுகவில் இருப்பவர்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்.. சசிகலா ஒருபோதும் இந்த கட்சியை கைப்பற்ற முடியாது.. ஒரு குடும்பம் அதிமுக கட்சியை கைப்பற்ற முடியாது என்றெல்லாம் சரமாரியாக பேட்டியளித்தார் பன்னீர்செல்வம். ஓ.பன்னீர்செல்வம் மீது சுமத்தப்படும் மற்றொரு குற்றச்சாட்டு, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு அவர் இதுவரை ஆஜராகவில்லை என்பது. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கேட்டவரே இதுவரை அந்த விசாரணை ஆணையத்தில் ஆஜராகவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக குற்றம்சாட்டி வந்தார்.
Recommended Video
ஆறுமுகசாமி ஆணையம்
இந்த நிலையில்தான் நேற்று பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில் அந்த விஷயத்தையும் பேசியிருக்கிறார் . ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், நான் ஆஜராக முடியாமல் போனதற்கு எனது சொந்த பணிகள் தான் காரணம். இதனால் இரண்டு முறை ஆஜராகவில்லை. மீண்டும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தனது விசாரணையை தொடங்கும்போது அதில் முதல் ஆளாக நான்தான் சென்று ஆஜராவேன் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.
முதல் ஆளாக சாட்சி
சசிகலா மீது குற்றம் சாட்டி தான் விசாரணை ஆணையத்தை அமைக்க கோரினார் பன்னீர்செல்வம். இப்போது அந்த விசாரணை ஆணையத்தின் நான் முதல் ஆளாக சென்று சாட்சி அளிக்க உள்ளேன் என்று கூறியிருப்பது சசிகலாவுக்கு நேரடியாக ஓபிஎஸ் விடுத்த சவாலாக பார்க்கப்படுகிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இதுவரையில் சற்று அமைதியாக இருந்த பன்னீர்செல்வம் திடீரென சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாடு இருப்பதற்கு காரண. சசிகலாவை சேர்க்கக் கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருப்பதுதான் என்று கூறப்படுகிறது. மேலும் டெல்லியில் இருந்து கிடைத்துள்ள சில சமிக்ஞைகளும் அதையே எதிரொலிப்பதால் சசிகலாவை கட்சியில் சேர்க்கும் கோரிக்கையில் எந்த பலனும் இல்லை.. இப்படி கோரிக்கை விடுத்தால் அது கட்சியைத்தான் பலவீனப்படுத்தும், எனவே இந்த கோரிக்கைகளை முற்றாக புறக்கணித்து விட்டு, சசிகலாவுக்கு நேர் எதிர் நிலைப்பாட்டை எடுத்து கொள்ளலாம் என்று பன்னீர்செல்வம் முடிவுக்கு வந்துவிட்டார் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் இதில் அவர் உறுதியாக இருப்பாரா என்பதை எதிர்காலம்தான் சொல்ல வேண்டும்.