எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகனும்.. ஈபிஎஸ்-க்கு ஓபிஎஸ் கொடுத்த அவகாசம்தான் நாளை பிரஸ் மீட் மிரட்டலாம்!
சென்னை: அதிமுகவில் தனக்கு என்ன எதிர்காலம் என்பதை தெரிந்துகொள்ளும் வகையில் முதல்வர் வேட்பாளர் போன்ற கலாட்டாக்களை தொடங்கியிருக்கும் துணை முதல்வர் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பை மிரட்டும் வகையில்தான் நாளை செய்தியாளர்களை சந்திப்பேன் என அறிவித்திருக்கிறாராம்.
அதிமுகவில் தமக்கும் ஒரு காலத்தில் அணி, ஆதரவாளர்கள் இருந்தது என்பது ஓபிஎஸ்ஸைப் பொறுத்தவரையில் பழங்கதையாகிவிட்டது. அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியும் இல்லை, முதல்வர் வேட்பாளரும் இல்லை என்பதால் விழிபிதுங்கிப் போனார் ஓபிஎஸ்.
அந்த நாள் ஞாபகம்... ஓபிஎஸ் நள்ளிரவில் ஜெ. சமாதியில் நடத்தி தோற்றுப்போன தர்மயுத்தம் 1.0- ப்ளாஷ்பேக்
வழிகாட்டும் குழு
பொதுச்செயலாளர், முதல்வர் வேட்பாளர் இந்த இரண்டில் ஒன்று கிடைக்க வேண்டும் என்பதற்காக வழிகாட்டும் குழுவை அமைக்க வலியுறுத்திப் பார்த்தார் ஓபிஎஸ். ஆனால் எதுவாக இருந்தாலும் பொதுக்குழு முடிவெடுக்க வேண்டும் என்பதில் திட்டவட்டமாக இருந்து வருகிறது ஈபிஎஸ் தரப்பு.
உதார் மிரட்டல்கள்
எப்படி சவுண்டு கொடுத்து பார்த்தாலும் ஈபிஎஸ் ஆதரவு நிலையை அசைக்க முடியாத கோபத்தில்தான் அடுத்தடுத்து மூவ்களை முயற்சித்து பார்க்கிறாராம் ஓபிஎஸ். இதன் ஒரு அம்சமாகத்தான் பதவியை ராஜினாமா செய்வார் என கிளப்பிவிடப்பட்ட ஒரு தகவலுமாம். இந்த சாமியாட்டங்களுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு மசியவில்லை.
பிரஸ் மீட் அறிவிப்பு
இதனால் உள்ளதும் போய்விடுமோ என்கிற அச்சத்தில் தேசியக் கொடியுடனான காரில் பறந்து போய் அரசு நிகழ்வுகளில் கலந்து கொண்டுவிட்டார் ஓபிஎஸ். இருந்தாலும் முடிந்தவரை முட்டி மோதுவது என்பதற்காகவே நாளை செய்தியாளர்களை சந்திக்கப் போகிறேன்.. அனேகமாக தர்மயுத்த 2.0ஆக இருக்கலாம் என்கிற ரேஞ்சில் மிரட்டல் விடுத்து கொண்டிருக்கிறாராம் ஓபிஎஸ்.
கண்டுகொள்ளாத ஈபிஎஸ் அணி
அதாவது அக்டோபர் 7-ந் தேதியன்று பொதுவெளியில் முதல்வர் வேட்பாளர் என அறிவிப்பதற்கு முன்னதாக தமக்கு உறுதியான முடிவுகளை உடனே தெரிவிக்க வேண்டும் என்று ஈபிஎஸ் அணியை மிரட்டுவதற்குதான் இந்த பிரஸ் மீட் மிரட்டல் என்கின்றன அதிமுக வட்டாரங்கள். ஆனாலும் போங்க.. காத்துவரட்டும் என்கிற போக்கில் ஈபிஎஸ் அணி தன்னுடைய வேலைகளை கச்சிதமாக பார்த்து கொண்டிருக்கிறதாம்.