அந்த ஒரு டெல்லி போன் கால்... அதிமுக செயற்குழுவில் ஓபிஎஸ் சீறியதன் பரபர பின்னணி!
சென்னை: அதிமுகவின் செயற்குழுவில் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஓபிஎஸ் சீறியது எதனால்? என்பதுதான் அந்த கட்சியில் இப்போது பரபரப்பாக நடக்கும் பட்டிமன்றம்.
அதிமுகவின் செயற்குழுவில் வழக்கம் போல தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டு கூடி கலைவது என்பதாகத்தான் திட்டமிடப்பட்டிருந்ததாம். சில நாட்களுக்கு முன்னர்வரை ஓபிஎஸ் தரப்பும் கூட எந்த பிரச்சனையும் இல்லாமல் செயற்குழுவை முடிக்கலாம் என்ற முடிவில்தான் இருந்ததாம்.
இதனால் செயற்குழு ஏற்பாடுகளை ஈபிஎஸ்- ஓபிஎஸ் இருதரப்பும் இணைந்து மேற்கொண்டது. ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஓபிஎஸ் இன்று செயற்குழுவில் திடீரென சீறிவிட்டார்; அதற்கு ஈபிஎஸ் தரப்பும் பதில் கொடுக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுவிட்டது.
சர்வமும் நான் தான்... ஓ.பி.எஸ்.க்கு உணர்த்திய இ.பி.எஸ்... அதிமுக செயற்குழு சுவாரஸ்யம்..!
ஓபிஎஸ் ஆவேசத்தால் அதிர்வு
இது தொடர்பாக அதிமுக செயற்குழுவில் பங்கேற்ற சில மூத்த தலைவர்களிடம் பேசினோம். அவர்களும், உண்மையில் இதை யாரும் எதிர்பார்க்கவே இல்லை. இப்படி 5 மணிநேரம் இந்த விவாதம் நடக்கும் என்று நாங்கள் நினைத்து கூட பார்க்கவில்லை. அதுவும் அண்ணன் ஓபிஎஸ்-ன் ஆவேசம்தான் வாயடைக்க வைத்தது என்றனர்.
அமைச்சர்கள் பயணம்
அதேநேரத்தில் இன்னொரு தரப்போ, ஓபிஎஸ் அமைதியாகத்தான் போக நினைத்தார். தேவையே இல்லாமல் 2 அமைச்சர்கள் டெல்லிக்கு போய் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்களும் டெல்லியின் மனநிலை வேறாக இருக்கிறதே என அமைச்சர்கள் புரிந்து கொண்டுவிட்டனர். இதைத்தான் ஈபிஎஸ் தரப்புக்கு பாஸ் செய்தனர்.
டெல்லியில் இருந்து வந்த போன்
இன்னொரு பக்கம் டெல்லியில் இருந்து ஈபிஎஸ் தரப்பு பேசியது என்ன? என்பது உள்ளிட்ட அத்தனை விவரங்களையும் போனிலேயே ஓபிஎஸ் தரப்புக்கு விவரிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மேலும் அமைதி காப்பதா? இல்லையா? என நீங்களே முடிவு செய்யுங்க எனவும் அந்த போன் காலில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த தகவல்களால் கொந்தளித்து போனதாம் ஓபிஎஸ் அணி.
வருவது வரட்டும் - குதித்த ஈபிஎஸ் அணி
இதனால்தான் இன்று இரண்டில் ஒரு முடிவு என கோதாவில் குதித்துவிட்டதாம். டெல்லியின் மனநிலையும் சாதகமாக இல்லை; ஓபிஎஸ்-ம் சீறி பார்க்கிறார். நாமும் விட்டு கொடுத்து போனால் நமக்கான பிடி இல்லாமல் போகும் என கருதி ஈபிஎஸ் அணியும் பதிலடி கொடுக்கும் நிலைக்குத்தள்ளப்பட்டது. இதுதான் இன்றைய செயற்குழுவின் காரசார மோதல்களின் பின்னணி என்கின்றனர்.