கோவை செல்வராஜ் விலகல் ஏன்? ஓபிஎஸ் அல்லது எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்காதது ஏன்?
சென்னை: ஓபிஎஸ் அணியில் பக்கபலமாக இருந்த கோவை செல்வராஜ் திடீரென அரசியலிலிருந்தே விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்த காரணத்தையும் அவர் தரப்பு கூறியுள்ளது.
அதிமுகவில் ஓபிஎஸ் எடப்பாடி பழனிசாமி பிரச்சினை பூதாகரமாக வெடித்து இருவரும் தற்போது தனித்தனியே தான்நான் அதிமுகவின் தலைமை என்பதை போல் செயல்பட்டு வருகிறார்கள். இதில் எடப்பாடி பழனிசாமி மூத்த மாஜி அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், பொதுக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் ஆதரவு இருக்கிறது.
ஆனால் ஓபிஎஸ்ஸுக்கு அந்த ஆதரவு அலை என்பது குறைவாகவே இருக்கிறது. அதே வேளை டெல்லி தலைமையின் ஆதரவு ஓபிஎஸ்ஸுக்குத்தான் என்பது நாம் பல்வேறு தருணங்களில் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் அதிமுகவில் ஓபிஎஸ்ஸுடன் பக்கபலமாக இருப்போர் என பார்த்தால் வைத்திலிங்கம், புகழேந்தி, மருது அழகுராஜ், கோவை செல்வராஜ், குன்னம் ராமசந்திரன், வெல்லமண்டி நடராஜன், மைத்ரேயன் என விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே இருந்தனர்.
அரசியலில் இருந்தே விலகல! ’திராவிட’ பாரம்பரியத்தை விட மாட்டேன்! கோவை செல்வராஜ் அதிரடி! அந்த கட்சியா?
அரசியல் இருந்து விலகல்
இந்த நிலையில் நேற்றைய தினம் அரசியலில் இருந்தே விலகுவதாக கோவை செல்வராஜ் அறிவித்துள்ளார். இது ஓபிஎஸ் அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்பட்டு வந்தது. அதிமுக கடந்த ஜூன் மாதம் முதல் இரு அணிகளாக பிளவுப்பட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி குறித்து நிறைய விமர்சனங்களை கோவை செல்வராஜ் முன் வைத்திருந்தார்.
கடும் வார்த்தை
கோவை செல்வராஜ்- ஜெயக்குமார் இருவரும் கடுமையான வார்த்தைகளால் மோதிக் கொண்டனர். இப்படிப்பட்ட சூழலில் எடப்பாடி அணிக்கும் போகாமல் அரசியில் இருந்தே விலகுவதாக அறிவித்துள்ளது ஏன் என்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி அணியிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கு எல்லாம் புதிய பதவியை ஓபிஎஸ் கொடுத்து வருகிறார்.
கோவை செல்வராஜ் விலகல்
நேற்றைய தினம் கோவை செல்வராஜ் விலகுவதாக அறிவித்தவுடன் அவரது கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பும் பறிக்கப்பட்டது. இதுகுறித்து கோவை செல்வராஜ் தரப்பில் கூறியிருப்பதாவது : எடப்பாடி பழனிசாமியும் ஓபிஎஸ்ஸும் தங்கள் சுயநலத்திற்காக சண்டை போட்டு வருகிறார்கள். அதிமுக என்ற பெயரில் சுயநலத்துக்காகச் செயல்படுவோர் மத்தியில் இருக்க விரும்பவி்லை என்பதால் கட்சியிலிருந்து விலகுவதாக கோவை செல்வராஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 6 இல் என்ன நடக்கும்
அதிமுக பொதுக் குழு வழக்கு வரும் டிசம்பர் 6ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதன் பிறகு அதிமுகவில் நிறைய மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் கோவை செல்வராஜ் விலகல் ஓபிஎஸ் அணிக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது. இதற்கு முன்பு நமது அம்மா நாளிதழின் ஆசிரியராக இருந்த மருது அழகுராஜ், அரசியல் இருந்தே விலகுகிறேன் என அறிவித்திருந்தார்.
தீவிர ஆதரவாளர்
இவர் ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் இவரது அறிவிப்பு நடந்த சில நாட்களில் ஓபிஎஸ் அவரை நேரில் பார்த்து சமாதானப்படுத்தி அவரை மீண்டும் தங்கள் அணியில் இணையவைத்துவிட்டார். அது போல் கோவை செல்வராஜையும் போய் ஓபிஎஸ்ஸோ அல்லது அவருடன் உள்ள வைத்திலிங்கம் உள்ளிட்டோரோ நேரில் போய் சந்தித்து அவரை சமாதானப்படுத்துவார்களா என்ற எதிர்பார்ப்பு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தீர்ப்பு எப்படி வரும்?
கோவை செல்வராஜ் தரப்பிலிருந்து சுயநலம் என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஓபிஎஸ் தரப்பு அவரை போய் சந்திப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. டிசம்பர் 6 ஆம் தேதி அன்று இன்னும் என்னென்ன மாற்றங்கள் அதிமுகவில் நிகழுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்னும் சிலர் தீர்ப்புக்காக காத்திருப்பதாகவும் தீர்ப்பு எப்படி வருகிறது என்பதை பொறுத்து நிறைய அதிரடி மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.