தமிழக பாஜக தலைவராகப் போவது ஜிகே வாசனா? ஏர்போர்ட்டில் மோடி வெளிப்படுத்தியது சிக்னலா?
Recommended Video
சென்னை: சீனா அதிபர் ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்த சென்னை வருகை தந்த பிரதமர் மோடி தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனிடம் நெருக்கமாக பேசிக் கொண்டிருந்தது பல்வேறு அரசியல் கேள்விகளை எழுப்பியிருக்கிறது. தமிழக பாஜகவில் வாசனை இணைத்து அவரை தலைவராக்கும் முயற்சிகளின் அடுத்த கட்டமாகத்தான் மோடி சிக்னல் காட்டினாரா என விவாதிக்கப்பட்டு வருகிறது.
காங்கிரஸில் இருந்த போது ராகுல் காந்தியுடன் முறைத்துக் கொண்டு தமிழ் மாநில காங்கிரஸுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார் ஜிகே வாசன். ஆனால் கட்சி என்னவோ போனியாகவில்லை.
இதனால் திரும்பவும் காங்கிரஸ் ஜோதியில் கலந்துவிட பகீரத முயற்சிகளை எடுத்துப் பார்த்தால் வாசன். மாஜி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை முன்வைத்தும் கூட முட்டி மோதிப் பார்த்தார். ஆனால் நடக்கவில்லை. ராகுல் இம்மியும் அசைந்து கொடுக்கவில்லை.
காங்கிரஸ் முட்டுக்கட்டை
இதனால் ரொம்பவே வெறுத்துப் போனார் வாசன். ஒரு கட்டத்தில் திமுகவுடன் கூட்டணி அமைக்கவும் முயற்சித்தார். அதற்கும் காங்கிரஸ் முட்டுக் கட்டை போட்டது. இதனால் அதிமுக-பாஜக அணிதான் எதிர்காலாம் என்பதை புரிந்து கொண்டார் வாசன்.
தமிழக பாஜகவில் ஐக்கியம்?
அதேநேரத்தில் தமிழக பாஜகவில் வாசன் இணைய வேண்டும் என அழுத்தம் கொடுத்தது டெல்லி மேலிடம் வாசனுக்கும் பாஜகவுக்கும் மிகவும் நெருக்கமான தொழிலதிபர் மூலமாக பல முறை டெல்லி மேலிடம் முயற்சித்து பார்த்தது.
நடத்தப்படும் பேச்சுவார்த்தை
ஆனால் எதற்கும் பிடி கொடுக்காமலேயே காலம் கடத்தி வந்தார் வாசன். ஒருகட்டத்தில் பேச்சுவார்த்தைகளை பாஜக மேலிடம் நடத்துவோம் என களமிறங்கிவிட்டது. இதனால் தமிழக பாஜகவுக்கு வாசன் தலைவராகக் கூடும் எனவும் கூறப்பட்டு வந்தது.
மோட்டியின் நெருக்கமான பேச்சு
இந்த யூகங்களை உறுதியாக்கும் வகையில் ஜிகே வாசனிடம் சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடி மிகவும் நெருக்கமாக பேசிக் கொண்டிருந்தார். டெல்லிக்கு வந்து தம்மை கட்டாயம் சந்திக்க வேண்டும்; காத்திருப்பேன் எனவும் கூறினார்.
அரசியல் விவாதம்
இது அதிமுக, பாஜக பிரமுகர்களுக்கு கொஞ்சம் எதிர்பாராத ஒன்றாகத்தான் இருந்ததாம். பெரிய செல்வாக்கு இல்லாத வாசனுக்கு மோடி கொடுத்திருக்கும் இந்த முக்கியத்தும் வாசனை பாஜக வளைத்துவிட்டதை வெளிப்படுத்துகிற சிக்னலா? என அரசியல் வட்டாரங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.