நீ வரலாம் வா.. நீ வரலாம் வா. அட யாராவது வாங்களேன்பா.. ப்ளீஸ்பா.. அடடே இப்படியாகி போச்சே!
கூட்டணி குழப்பத்தில் மோடியின் பாஜக அரசு சிக்கி தவித்து வருகிறது.
Recommended Video
சென்னை: "நீ வரலாம் வா.. நீ வரலாம் வா... " என கூவி கூவி அழைக்கும் நிலைமைக்கா ஒரு தேசிய கட்சியின் நிலைமை ஆக வேண்டும்.
டிஜிட்டல் இந்தியா, கிளீன் இந்தியா, அச்சே தீன் என்ற கலர் கலர் வார்த்தைகளை கூறி 4 வருடங்களுக்கு முன்பு பிரதமராக பொறுப்பேற்றார் மோடி.
அன்றைக்கு ஒவ்வொரு மாநிலத்தின் சிறிய சிறிய கட்சிகளும்கூட ஓடிப்போய் தங்கள் ஆதரவை தெரிவித்துவிட்டு வந்தார்கள். நம்ம ஊரிலிருந்துகூட விஜயகாந்த், ராமதாஸ், பாரிவேந்தர் போன்றோர் சென்று மோடியை ஆரத்தழுவி கட்டிப்பிடித்து ஆதரவை தந்தார்கள்.
ரஜினி, கமல்
ஆனால் இப்போது இவரை யாருமே கண்டுகொள்ளாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இதையடுத்தே பாஜக கதவுகள் திறந்து இருக்கின்றன, பழைய நண்பர்களை இணைத்து கொள்ள தயார் என்று கூறுகிறார் பிரதமர் மோடி. ரஜினி, கமல் வந்தால்கூட சேர்த்துகொள்வோம் என்கிறார்.
இதுதான் அழகா?
ஆளும் மத்திய அரசின் உச்ச பொறுப்பில் இருப்பவரின் பேச்சு கடைசியில் இப்படியா இருக்க வேண்டும்? தேடி வந்து கூட்டணி வைக்க வேண்டும் என்ற நிலை இருந்தால்தானே அந்த கட்சிக்கு மதிப்பும், மரியாதையும். ஆனால் இதுவரை யாருமே வந்து கூட்டணி பற்றி பேசாமல் இருப்பது தேசிய அளவிலான பாஜகவுக்கு அழகா?
விஜயகாந்த்
ரஜினி, கமலை சேர்த்து கொள்வது தவறு என்று சொல்லவில்லை, ஆனால் நடிகர்கள்கூட தேடி வந்துகூட்டணி பற்றி பேச முடியாத அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது என்பதுதான் புரிகிறது. இருப்பினும் இதையும் குறை கூற முடியாது. காரணம், விஜயகாந்த்துடன் கூட்டணி சேர்ந்த கட்சிதான் பாஜக.
நல்ல முத்து
அதுவும் இல்லாமல் போன தேர்தலில் எப்படி சும்மா கிடந்த வாஜ்பாயை கொண்டு வந்து மக்கள் முன் நிறுத்தி ஓட்டு கேட்ட பாணிதான் இப்பவும் ஆரம்பித்துள்ளது. "தவறான கட்சியில் சரியான நபர்" என்ற பெயரை வாஜ்பாய் பெற்றது அவரது நல்ல குணத்துக்காக. அடிப்படை இயல்புக்காக. ஆனால் அதனைகூட அரசியல் லாபத்துக்காக பயன்படுத்துவது பாஜகவுக்கு கை வந்த கலை.
வாஜ்பாய் முகம்
ஓட்டு வாங்கும்போது மட்டும் வாஜ்பாய் போன்ற நல்ல மனிதர்களின் முகத்தை காட்டி அதற்கு பின்னால் பாஜகவின் கோர முகம் ஒளிந்து கிடப்பது வழக்கமாகி விட்டது. இப்போது வாஜ்பாய் மறைந்து விட்டதால், வரும் தேர்தலில் அவரது படத்தைக் காட்டி அனுதாபம் தேட முயற்சிக்கலாம் பாஜக. மோடியின் முகத்தைக் காட்டுவதை விட வாஜ்பாய் முகத்தைக் காட்டினால் ஏதாவது கொஞ்சம் கிடைக்கும் நிலைதான் தற்போது உள்ளது.
ஏன் ஒதுக்கப்படுகிறோம்?
யார் வேண்டுமானாலும் கூட்டணிக்கு வரலாம் என்பதும், ரஜினி, கமல்கூட எங்களிடம் இணையலாம் என்பதும், தமிழகத்தில் பழைய நண்பர்களுடன் கூட்டணி என்று நூல் விட்டு கொண்டிருப்பதும் ஒரு நாட்டின் பிரதமருக்கோ, ஆளும் மத்திய அரசுக்கோ, தேசிய அளவிலான ஒரு கட்சிக்கோ அழகல்ல என்பதையும் கொஞ்சம் கொஞ்சமாக தனித்து விடப்பட்டு வருகிறோம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.. ஆனால் அதை விட முக்கியம்.. ஏன் இப்படி ஒதுக்கப்படுகிறோம் என்பதை புரிந்து கொண்டு அதை சரி செய்ய முன்வருவதுதான் கட்சியின் எதிர்காலத்திற்கு ரொம்ப முக்கியம்.