"அந்த" பேச்சுதான் காரணமா.. தேர்தல் ஆணைய வெப்சைட்டில் பாமக பெயர் மிஸ்ஸிங்.. ஏன்?
ஆளும் கட்சி பாமக மீது கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது
சென்னை: "தேர்தல் ஆணைய வெப்சைட்டில் பாமக பெயர் மிஸ் ஆனது ஏன்.. அன்று அன்புமணி பேசிய பேச்சுக்குதான் இப்படி பழிவாங்கல் நடவடிக்கையா" என்ற ஆதங்க கேள்வியை பாமகவினர் கேட்கின்றனர்.
நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. இந்த முடிவுகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் வெப்சைட் நேரலையாக வெளியிட்டது.
திமுக, அதிமுக, பாஜக, கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் ஏன் தேமுதிக பெயர் கூட இருந்தது. ஆனால் பாமக பெயர் அந்த இணையதளத்தில் இல்லை.. பாமக என்ற கட்சியோ, அக்கட்சி சம்பந்தப்பட்ட சிறு விவரமோ, பெயரோ, தகவலோ எதுவுமே இல்லை என்பது அனைவரையும் அதிர வைத்தது. இதனால் பாமகவுக்கு எத்தனை சீட் என்ற விவரமே தெரியவில்லை.
8-வது இடம்
முதல் இடத்தில் அதிமுக பெயர் இருந்தது.. இதற்கு அடுத்து பெரிய கட்சி என்று திமுக பெயர் இருக்கும் என்று பார்த்தால், அந்த கட்சியின் பெயர் 8-வது இடத்தில் இருந்தது அதைவிட ஷாக்! ஆனால், பாஜக, பகுஜன் சமாஜ், தேமுதிக, இடதுசாரிகள், இந்திய தேசிய காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி என பல பெயர்கள் அடுத்தடுத்து இருந்தன... ஆனால் பாமகவை காணோம்.. அதேபோல, மதிமுக, நாம் தமிழர் கட்சிகளின் பெயர்களும் இல்லை.
கோளாறு?
எதனால் இந்த குழப்பம்? ஒருவேளை தொழில்நுட்ப கோளாறா என்றுகூட யோசிக்கப்பட்டது. எல்லா கட்சிகளிலும் எத்தனை பேர் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றனர் என்ற பட்டியலை வெளியிட்டால் இந்த குழப்பங்களுக்கு விடை கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
பெயர் மிஸ்ஸிங்
ஆனால் பாமக பெயர் ஏன் மிஸ்ஸிங் என்று கடைசி வரை தெளிவு கிடைக்கவே இல்லை.. இந்த சமயத்தில்தான், தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி பாமக என்று டாக்டர் ராமதாஸ் அறிக்கை விட்டிருந்தார். அதே சமயம், அதிமுகவுடன் உள்ளாட்சி தேர்தல் சீட் விவகாரத்திலேயே முரண்பாடு பாமகவுக்கு எழுந்தது.. வாக்கு எண்ணிக்கை 2-ம் தேதி என்றால், டிசம்பர் 31-ம் தேதி நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் இந்த ஆதங்கத்தை அன்புமணி ராமதாஸ் காட்டமாகவே வெளிப்படுத்தினார்.
சீட் தரவில்லை
''நாம், அதிமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால், இன்னைக்கு அதிமுக ஆட்சியே இல்லை. நடந்து முடிந்த இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுகவுக்கு நாம்தான் விட்டுக் கொடுத்தோம். அவர்கள் ஆட்சியை தொடர வேண்டும் என்றதால்தான் பாமக விட்டு தந்தது.. ஆனால் நாங்கள் கேட்டது, கட்சியில் உழைக்கிறவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் பதவி கொடுங்கள் என்று கேட்டோம். ஆனால் ஒரு சீட், அரை சீட், கால் சீட் என்றுதான் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஒதுக்கினார்கள். இனி வரும் காலங்களிலாவது, ஆளும் கட்சியின் தலைமை எங்களது கருத்துகளை ஏற்று, அதைச் சரிசெய்ய வேண்டும்'' என்று ஆவேசம் கலந்த ஆதங்கத்துடன் கூறியிருந்தார்.
அன்புமணி பேச்சு
அன்புமணியின் இந்த பேச்சுதான் அதிமுக தலைமையை கோபப்படுத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.. எம்பி தேர்தலிலும் பாமகவுக்கு மற்ற கூட்டணி கட்சிகளை விட நிறைய தொகுதி தந்தோம்.. அப்போது அவர்கள் தோற்றே போனாலும், வாக்கு தந்தபடி ராஜ்யசபா எம்பி பதவியும் தந்தோம்.. இதுக்கும்மேல என்னதான் செய்யறது.. இப்படியா பேசுவது?" என்று அதிமுக தலைமை நொந்துகொண்டதாகவும், இதன் காரணமாகவே தேர்தல் ஆணையத்துக்கு மறைமுக உத்தரவு போட்டிருக்கலாம் என்றும் சலசலக்கப்படுகிறது.
இதுதான் நிஜம்
ஆனால் உண்மையிலேயே இதற்கு என்ன காரணம் என்பது தெளிவாக தெரியவில்லை.. எது எப்படியோ, அதிமுக, திமுக, பாமக எதுவானாலும் சரி.. மக்களிடம் நல்ல நெருக்கம், செல்வாக்கு, அபிமானத்தை பெற்ற கட்சியின் வளர்ச்சியை யாராலும் எதனாலும் தடுத்துவிட முடியாது என்பதுதான் நிஜம்!