இன்னும் ஓயாத பஞ்சாயத்து.. பிடிஆருக்கு எதிராக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை
சென்னை: ஜிஎஸ்டி கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஏன் பங்கேற்கவில்லை என கேள்வி எழுப்பி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் லக்னோவில் 45ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அண்மையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நிதியமைச்சர்கள் நேரடியாக சென்று கலந்து கொண்டனர்.
ஆனால் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கவில்லை. கடைசி நேரத்தில் தெரிவிக்கப்பட்டதால் பங்கேற்க இயலவில்லை என செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அரசு நடத்தும் சமுதாய வளைகாப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியுள்ளதை குறிப்பிட்டு பிடிஆர் பேசினார்.
'பெட்ரோல் டீசல் ஜிஎஸ்டி வரம்பில் போவதில் பிரச்சினை இல்லை.. ஆனால்.. ' பிடிஆர் போட்ட ஒரே கண்டிஷன்
கெட்டுப்போன மூளை
இந்நிலையில் மச்சினிச்சி வளைகாப்புக்கு போக வேண்டும் என்பதால் பிடிஆர் பங்கேற்கவில்லை என்பதுபோல் திரித்து சமூக ஊடகங்களில் சிலர் பரப்பி விட்டனர். அத்துடன் இதை வைத்து மீம்ஸ்களும் வேகமாக பரவின. இதை பாஜகவினர் வெளியிட்டு உண்மையா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், இந்த பொய்யான செய்தியை மறுத்ததுடன், பொய் சொல்வதற்கு கூட ஒரு குறைந்தபட்ச அறிவு வேண்டும் என்றும் மாட்டு மூத்திரம் குடித்தே மூளை கெட்டுப் போனவர்கள் என்றும் கடுமையாக விமர்சித்தார்.
ஏமாற்றம் அளிக்கிறது
இதனிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் லக்னோவில் நடந்த 45ஆவது ஜிஎஸ்டி கூட்டத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்காதது தமிழக மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் செய்தி என்று குறிப்பிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் அனுப்பி உள்ளார்.
இது குறித்து அண்ணாமலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: "கடந்த 17ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் லக்னோவில் நடைபெற்ற 45ஆவது ஜி.எஸ்.டி. கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பேசப்பட வேண்டிய ஏராளமான பிரச்சினைகள் இருந்தும், தமிழக அரசின் சார்பில் நிதி அமைச்சர், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பங்கு பெறவில்லை என்பது தமிழக மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் செய்தி.
என்ன கூறியுள்ளார்
வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி இருப்பதால் தான் செல்லவில்லை என்று கூறுபவரா, நம் தமிழ்நாட்டு நிதி அமைச்சர். இதில் இருந்து தங்கள் அரசு எதற்கு முக்கியத்துவம் தருகிறது என்று தெளிவாகிறது. பெட்ரோலிய பொருட்களில் உள்ள பல கட்ட வரிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே வரியாக சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) பட்டியலில் இணைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவராக தாங்கள் உரத்த குரலில் பேசியது மக்களால் வரவேற்கப்பட்டது.
இக்கடிதம் ஏன்
ஆனால் ஆட்சியில் வந்து அமர்ந்த பின்னர் தங்கள் நிலைப்பாடு தலைகீழாக மாறக்காரணம் சொல்ல வேண்டிய தாங்களும், தங்கள் நிதி அமைச்சரும் பாராமுகமாக நடப்பது மக்களை வஞ்சிக்கும் செயல் என்பதை தங்களுக்கு அறிவுறுத்தவே தமிழக மக்கள் சார்பாக இக்கடிதம்.
அண்ணாமலை கடிதம்
ஒரு தவறை சுட்டிக்காட்ட வேண்டிய கடமையின் காரணமாக, ஒரு எதிர்க்கட்சியின் கடமையாக கருதி, இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன், கெடுப்பா ரிலானுங் கெடும் என்ற குறள் வழியில் தமிழக மக்கள் நலம் காக்க இக்கடிதம் எழுதியுள்ளேன்" இவ்வாறு அந்த கடிதத்தில் அண்ணாமலை கூறியுள்ளார்.