மெத்த படித்தவர்.. மேலான பதவிகளை அலங்கரித்தவர்.. ஸ்டாலின் மலைபோல நம்பும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
சென்னை: தமிழக நிதியமைச்சராக பதவியேற்றுள்ள பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீதுதான் அனைவரது கவனமும் குவிந்துள்ளது. இக்கட்டான இந்த நிதிச் சூழலில், அவர் தமிழக நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ளது மட்டும் இதற்கு காரணம் கிடையாது.. அவரது நிதி சார்ந்த கல்வியறிவு மற்றும், அந்த துறை சார்ந்து அவர் பணியாற்றியதும்தான், அவர் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க வைத்துள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டின் கடன் தொகை 5.78 லட்சம் கோடியாக உயர்ந்துள்ள சூழல் ஒரு பக்கம், கொரோனா சூழலால் ஏற்பட்டுள்ள தொழில் முடக்கங்கள் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு ஒரு பக்கம், கொரோனா நிவாரணத்திற்காக தமிழக அரசு வழங்க வேண்டிய நிவாரணங்களுக்கு தேவைப்படும் செலவீனங்கள் இன்னொரு பக்கம் என பல சவால்கள் பழனிவேல் தியாகராஜனுக்கு எதிரே உள்ளன.
தமிழக முதல்வரின் முதன்மை செயலாளரானார் உதயச்சந்திரன்.. சாலச் சிறந்த தேர்வு!
இத்தனை சவால்களையும் எதிர்கொள்ள தேவையான நிதி சார்ந்த திறமையும், அனுபவமும் கொண்டவர்கள் அவர் என்பதுதான் அனைத்து தரப்பாலும், அவரது நியமனம் சிலாகிக்கப்பட காரணம்.
மெத்த படித்தவர்
பழனிவேல் தியாகராஜன் 1987ல் திருச்சி NIT கல்லூரியில் பிடெக் கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்ற பின், அமெரிக்காவின் பிரபலமான Buffalo பல்கலைக்கழகத்தில் MS மற்றும் Phd பட்டம் பெற்றார். இதன் பின்பே MIT கல்லூரியில் MBA பட்டம் பெற்றார். படிப்பை முடிந்த பழனிவேல் தியாகராஜன் லெமேன் பிரதர்ஸ் நிறுவனத்தில் சுமார் 7 வருடம் பணியார் ஆப்ஷோர் கேட்டல் மார்கெட்ஸ் பிரிவின் தலைவராக இருந்தார், இதன் பின்பு ஸ்டாண்டர்ட் சார்ட்டெட் வங்கியின் நிதியியல் சந்தை பிரிவில் சீனியர் மேலாண் இயக்குநர் உட்பட பல உயர் பதவிகளில் பணியாற்றியவர்.
மூன்று தலைமுறை
வங்கியியல் பணிகளுக்கு முன்பாக, விவசாயம், கன்சல்டிங், உற்பத்தி மற்றும் ஆய்வு ஆகிய துறைகளில் திறம்பட செயல்பட்டவர் பழனிவேல் தியாகராஜன். இதெல்லாம் அவரது கல்வித் தகுதி மற்றும் பணித் தகுதிகள் என்றால், அரசியலிலும் பாரம்பரியம் கொண்டவர்தான், பழனிவேல் தியாகராஜன். இவர் தனது குடும்பத்தின் 3வது தலைமுறை திராவிடவாதியாகும்.
தாத்தா நீதிக் கட்சி நிறுவனர்
பழனிவேல் தியாகராஜன் தந்தை, பி. டி. ஆர். பழனிவேல்ராஜன். நீதிக்கட்சியின் நிறுவனரான பி.டி.ராஜன் மகன்தான் பழனிவேல் ராஜன். அந்த ஈர்ப்பு காரணமாக பழனிவேல் ராஜனும் அரசியலில் ஈடுபடத் துவங்கினார். பல கூட்டுறவுச் சங்கங்களுக்குத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். 1967 ஆம் ஆண்டில் தேனி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1972 முதல் 1976 வரை தமிழ்நாடு கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தின் தலைவராக பதவி வகித்தார். 1974ல் லண்டன் மாநகரில் நடந்த 24 ஆவது காமன்வெல்த் மாநாட்டில் கலந்துக்கொண்டார். 1984ல், தமிழக சட்டசபை மேலவைக்கு பட்டதாரிகள் தொகுதியில் போட்டியிட்டு மேலவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
தந்தை சபாநாயகர்
1996ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றினார். 2001 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதன்பிறகு 2006 இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். 1996-2001ம் ஆண்டுவரை தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியை அலங்கரித்தவர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன். இவர் சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்து விட்டால் பாரபட்சம் இல்லாமல் நடந்து கொள்வார். எதிர்க்கட்சி ஆளுங்கட்சி உறுப்பினர் என்ற பாகுபாடு இவரிடம் கிடையாது. யாராக இருந்தாலும் சட்டசபை விதிகளின்படி அவையை வழி நடத்துவார்.
அழைத்த ஸ்டாலின்
இந்த நிலையில்தான், 2006ம் ஆண்டு பிடிஆர் பழனிவேல் ராஜன் மறைந்தார். மதுரையில் செல்வாக்கு கொண்ட இவரின் இழப்பை ஈடு செய்ய அவரது மகனான, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சேவை திமுகவுக்கு தேவைப்பட்டது. ஆசியன் பசிபிக் வங்கியின் உயர் அதிகாரியாக மாதத்துக்கு லட்சக்கணக்கில் சம்பாதித்து வந்தவர் பழனிவேல் தியாகராஜன். ஆனால் ஸ்டாலின் அழைத்ததால் அரசியலுக்கு வந்தார். 2016ம் ஆண்டு, திமுக சார்பில் முதல் முறையாக சட்டசபை தேர்தலில் களம் கண்டார். மதுரை மத்தியத் தொகுதியில் வெற்றிபெற்று எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட கையோடு, தி.மு.கவின் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். சட்டசபையின் பொது கணக்குகள் கமிட்டி உறுப்பினர், காமன்வெல்த் பார்லிமென்ட்ரி அமைப்பு தமிழக பிரிவின் செயல் கமிட்டி உறுப்பினராகவும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பணியாற்றினார்.
திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு
2017 ஜூன் மாதம் திமுகவில் அப்போதுதான் புதிதாக அமைக்கப்பட்ட ஐடி பிரிவின் செயலாளராக நியமிக்கப்பட்டார். கட்சியின் தொழில்நுட்ப வலைத் தளங்களை உருவாக்குவதையும், மாநிலம் முழுவதும் 1,50,000 க்கும் மேற்பட்ட அலுவலக பொறுப்பாளர்களை பணியில் நியமனம் செய்தும் அசத்தினார், பழனிவேல் தியாகராஜன். திமுகவின் செய்தித் தொடர்பாளர் பதவியில் நியமிக்கப்பட்ட அவர் பொருளாதாரம், பட்ஜெட் மற்றும் மாநில / மத்திய நிதி மற்றும் கொள்கை விஷயங்களை அதிகம் பேசியுள்ளார். சட்டசபையில் இவர் பட்ஜெட் தொடர்பாக உரையாற்றியது பலரது கவனத்தை ஈர்த்தது. அதிகாரிகள் கவனமாக குறிப்பெடுத்தனர். ஆளும் கட்சியை புள்ளி விவரங்களை முன்வைத்து கேள்விகளை கேட்டு துளைத்தெடுத்தார்.
பொருளாதார மீட்சி
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் உலகளாவிய வாழ்க்கை அனுபவம் மற்றும் அனுபவம் காரணமாக உலகெங்கிலும் உள்ள கலாச்சாரங்களின் பன்முகத்தன்மையையும் நிதிச் சூழலையும் அறிந்தவர். இதுவரை அவர் சுமார் 60 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இப்படியான 3 தலைமுறை அரசியல் அனுபவம், நிதி அனுபவம் கொண்ட பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழக பொருளாதாரத்தை மீட்டெடுப்பார் என்ற நம்பிக்கையில் ஒட்டுமொத்த தமிழகமும் உள்ளது.