ராகுல்ஜி.. தமிழர்களின் பிரச்சினைகளை கேட்க வந்தேனு சொன்னீங்க.. எழுவர் விடுதலையும் எங்கள் பிரச்சினையே!
சென்னை: தமிழர்களின் கலாச்சாரம், பாரம்பரியம், மொழி, நெசவுத் தொழில் இப்படி எல்லாவற்றையும் பற்றி பேசிய ராகுல் காந்தி எழுவர் விடுதலை குறித்து எதையும் பேசவில்லை, செய்தியாளர் கேள்வியையும் புறக்கணித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த நேரத்தில் அரசியல்வாதிகள் குட்டிக் கரணம் அடிக்கவும் தயங்க மாட்டார்கள். இந்த நேரத்தில் அவர்கள் செல்லாத இண்டு இடுக்கு தெருக்கள் இருக்காது.
அந்த வகையில் தமிழகத்தில் ராகுல்காந்தி கடந்த 3 தினங்களாக கொங்கு மண்டலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது மோடி அரசு மீது கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.
மதிப்பு
மேலும் தமிழ் மொழிக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை மோடி அரசு கொடுக்கவில்லை என்றார். நான் தமிழன் இல்லாவிட்டாலும் தமிழ் உணர்வு என்னிடம் இருக்கிறது. அதை மதிக்கிறேன். தமிழர்களின் கலாச்சாரம், மொழி, பண்பாடு ஆகியவற்றை மதிக்கிறேன் என்றார்.
மக்கள்
தமிழகத்தில் உள்ள ஆட்சியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களை கட்டுப்படுத்தலாம் என நினைக்கிறார்கள். தமிழக அரசை கட்டுப்படுத்துவன் மூலம் தமிழர்களை கட்டுப்படுத்தலாம் என நினைப்பது நடக்காது. தமிழக மக்களுடன் எனக்கு இருப்பது அரசியல் உறவு அல்ல. குடும்ப உறவு. அவர்களுடைய பிரச்சினைகளை கேட்க வந்துள்ளேன் என்றார்.
அரவக்குறிச்சி
இந்த நிலையில் நேற்றைய தினம் அரவக்குறிச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஒரு செய்தியாளர் பால்கோட் தாக்குதல் குறித்து செய்தியாளருக்கு தெரிந்தது எப்படி என்பது குறித்து கேள்வி எழுப்பினார். அது குறித்து விளக்கமாக பதில் அளித்தார் ராகுல்.
பதில்
இதையடுத்து அதே செய்தியாளர் பேரறிவாளன் உள்பட எழுவர் விடுதலை குறித்து ஆளுநரே முடிவெடுக்கலாம் என மத்திய அரசு கூறியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது ராகுல் நீங்கள் ஏற்கெனவே கேட்ட கேள்விக்கு பதில் அளித்துவிட்டேன். மற்றவர்கள் கேள்வி கேட்க விடுங்கள் என கூறி அந்த கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்த்துவிட்டார்.
வருத்தம்
தமிழ் கலாச்சாரம், மொழி ஆகியவற்றை குறித்து பேசிய ராகுல் தமிழர்கள் மிகவும் எதிர்பார்த்து வரும் எழுவர் விடுதலை குறித்து பேசாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எழுவர் விடுதலையில் அரசியல் இருக்கிறது என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ் அங்கம் வகிக்கும் திமுகவும் எழுவர் விடுதலையை கோரி வருகிறது. இந்த நிலையில் ராகுல் அந்த கேள்விக்கான பதிலை அளிக்காதது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.