கந்த சஷ்டி இழிவுக்கு கண்டனம்...அந்த இரண்டையும் ரஜினி மறந்தது ஏன்?
சென்னை: கந்த சஷ்டியை அவமதித்த கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலுக்கு நேற்று முன்தினம் நடிகர் ரஜினிகாந்த் கடுமையான கண்டனம் தெரிவித்து இருந்தார். ''எம்மதமும் சம்மதம், கந்தனுக்கு அரோகரா'' என்று தனது பதிவை முடித்து இருந்தார். ஆனால், இதை ஒட்டி தமிழகத்தில் நடந்த எந்த சம்பவங்களுக்கும் இதுவரை ரஜினிகாந்த் கண்டனம் தெரிவிக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கந்த சஷ்டி கவசத்துக்கு கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் விளக்கம் அளிக்கிறோம் என்ற பெயரில் ஆபாசமாக விவரித்து இருந்தனர். இழிவுபடுத்தி இருந்தனர். இதற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, தமிழக பாஜக தலைவர் எல். முருகன் ஆர்ப்பாட்டம் நடத்தினார். யூ டியூப் சேனலைச் சேர்ந்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அரசியலுக்கு விடை சொல்லும் முடிவுக்கு வந்து விட்டாரா ரஜினிகாந்த்.. நடப்பது என்ன?
ஆர்எஸ்எஸ் பின்னணி
இதையடுத்து கைது நடவடிக்கை அரங்கேறின. கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் நிர்வாகி செந்தில்வாசன் கைது செய்யப்பட்டார். இவரைத் தொடர்ந்து கந்த சஷ்டி கவசத்தை விமர்சித்து இருந்த சுரேந்திரன் கைது செய்யப்பட்டார். இவர்கள் திமுகவின் அழுத்தத்தின் பின்னணியில் இந்த வீடியோவை வெளியிட்டனர் என்று இந்து அமைப்புக்கள், பாஜக குற்றம்சாட்டின. ஆனால், இதற்கு பின்னணியில் ஆர்எஸ்எஸ் இருக்கிறது என்று திராவிடக் கட்சிகள் குற்றம்சாட்டின.
மதத்தை முன் வைத்து அரசியல்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கவிருப்பதால், அரசியல் நடவடிக்கைகளும் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில்தான், கடவுளை மையப்படுத்தி அரசியலை கையில் எடுத்துள்ளனர். தமிழகத்தில் காலம் காலமாக அரசியலில் ஆன்மீகமும் கலந்துதான் இருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால், அதே தமிழகத்தில்தான் இதுவரை மதத்தை முன் வைத்து அரசியல் செய்பவர்களுக்கு பெரிய அளவில் வாக்குகள் கிடைத்தது இல்லை.
ஆன்மீக அரசியல் என்றால் என்ன?
ஆனால், தற்போது ஆன்மீக அரசியலை எடுத்துக் கொண்டு அரசியலுக்கு வருவேன் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். அவர் கூறிய ஆன்மீக அரசியலுக்கான இலக்கணத்தை, விளக்கத்தை, கொள்கையை இதுவரை வெளியிடவில்லை.
தாமதம் ஏன்?
கறுப்பர் கூட்டம் வீடியோ வெளியானவுடனே ரஜினிகாந்த் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. ஒரு வாரம் கடந்து தாமதமாக கண்டித்துள்ளார். அதுவும் குறிப்பாக தமிழ் மக்கள் மனதை புண்படுத்தி என்று பயன்படுத்தியுள்ளார். இந்துக்கள் என்ற வார்த்தையை கவனமாக எடுத்துக் கொள்ளவில்லை. எல்லா மதமும் சம்மதம் என்று குறிப்பிட்டு, கந்தனுக்கு அரோகரா என்று முடித்துள்ளார்.
Recommended Video
ஏன் அதற்கு கண்டனம் இல்லை
நபிகள் நாயகம் பற்றி கார்ட்டூன் வெளியிடுவோம் என முகநூலில் பதிவு செய்திருந்த ஓவியர் வர்மா மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்து இருந்தனர். எம்மதமும் சம்மதம் என்று கூறும் ரஜினிகான்த் ஏன் இதற்கு எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. எம்மதமும் சம்மதம் என்று கூறும் ரஜினிகாந்த் இதற்கும் கண்டனம் தெரிவித்து இருக்க வேண்டும். இதற்கும் இணைத்தே அவரது கண்டனத்தில் பதிவு செய்து இருக்க வேண்டும். ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஈரோட்டில் அவமதிப்பு
இதையடுத்து, கோயம்புத்தூரில் இருக்கும் சுந்தராபுரத்தில் பெரியார் சிலை மீது காவிச் சாயம் பூசப்பட்டது. அதற்கும் ஏன் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து ஈரோட்டில் பெரியார் சிலைக்கு காவித்துண்டு போர்த்துவதற்கு சென்ற இந்து முன்னணியைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்து இருந்தனர். இதையும் ரஜினிகாந்த் கண்டித்து இருக்கலாம். அதையும் செய்யவில்லை.
எம்ஜிஆரின் ஆன்மீக அரசியல்
அப்படி என்றால் இவர் எடுக்கும் ஆன்மீக அரசியல் என்ன. எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் திராவிடக் கட்சிக்குள் இருந்தாலும், திராவிடக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு ஆன்மீகத்திலும் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் இதை வெளிப்படையாகவே செய்தனர். எம்ஜிஆர் தாய் மூகாம்பிகை கோயிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டு இருந்தார். திருப்பதி கோயிலுக்கு சென்றுள்ளார். ஜெயலலிதாவும் என்றும் தனது ஆன்மீகத்திற்கு இடையே திராவிடக் கொள்கைகளை விட்டுக் கொடுத்தது இல்லை.
தனது பிரச்சாரத்தில் எப்போதும் கடவுள் மறுப்புக் கொள்கை குறித்து இருவருமே பேசியது இல்லை, தூண்டியதும் இல்லை. தாய் மூகாம்பிகையை தனது தாயாக பார்க்கிறேன் என்று எம்ஜிஆர் கூறியுள்ளார். அவரை பின்பற்றி வந்த ஜெயலலிதாவும் எம்மதமும் சம்மதம் என்றுதான் அரசியலை எடுத்து சென்றார்.
கோயில்களுக்கு குடமுழுக்கு
இந்த வழியில்தான் கருணாநிதியும் கட்சியை நடத்தினார். கோயில் கொடியவர்களின் கூடாரமாக இருந்து விடக் கூடாது என்பதை வலியுறுத்தினார். ஆனால், அதற்காக தமழிகத்தில் இருக்கும் கோயில்களுக்கு குடமுழுக்கு செய்வதில் இருந்து எதையும் அவர் தடுத்து நிறுத்தவில்லை.
ஆனால், ரஜினிகாந்த் எடுத்திருக்கும் அரசியல் வெறும் ஆன்மீக அரசியல் மட்டும்தானா. பகுத்தறிவுக்கு அங்கு இடம் இருக்கிறதா என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.
மூடநம்பிக்கை எதிர்ப்பு
பெரியார் பகுத்தறிவு சிந்தனையாளர். அவர் கடவுள் மறுப்பை மட்டும் முன் வைக்கவில்லை. சமூக நீதி, ஜாதிய எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, பகுத்தறிவு, பெண்கள் முன்னேற்றம், கல்வி ஆகியவற்றையும் முன் வைத்தார். அவரை தமிழகம் எப்போதும் ஒரே பார்வையில், கடவுள் எதிர்ப்பாளராக பார்க்க வேண்டும் என்ற மாயையை உருவாக்கி விட்டனர்.
ரஜினிக்கு பின்னணியில் யார்?
தமிழகத்தில் மட்டுமில்லை நாட்டில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களுக்கு ரஜினிகாந்த் தாமதமாகத்தான் பிரதிபலித்துள்ளார். அது தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவமாக இருக்கட்டும், டெல்லியில் நடந்த வன்முறையாக இருக்கட்டும், சாத்தான்குளம் சம்பவமாக இருக்கட்டும்...இவை அனைத்துக்கும் தாமதமாகவே பிரதிபலித்தார்.
புலித்தோல் ரஜினி வேண்டாம்
தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது. நல்ல தலைவர் இல்லை என்று கூறும் ரஜினிகாந்த், சமய, சந்தர்ப்ப அரசியலை தமிழகத்தில் நடத்த முடியுமா என்பதை யோசிக்க வேண்டும். மக்களின் ஒவ்வொரு பிரச்சனைகளையும் கையில் எடுக்கும் தலைவன் தான் சிறந்த தலைவனாக இருக்க முடியும்.
ஒருசாராருக்கு மட்டும் பேசினால், அது மக்கள் மனதில் எடுபடுமா? தெளிவு இல்லாத பேச்சு சிறந்த தலைவனாக அடையாளப்படுத்தாது. தெளிவான முடிவு எடுக்க முடியாமல் தற்போது தடுமாறி வரும் ரஜினியால் எப்படி அரசியலில் தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும். அரசியல் என்றாலே எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். யாரோ ஒருவரின் உந்துதலில் அரசியல் செய்ய முடியாது. அனைத்தையும் சகிக்கும் மனப்பான்மை, எதிர்கொள்ளும் திறன் வேண்டும், தனித்துவ ஆளுமை, இவையெல்லாம் ரஜினிகாந்திடம் இருக்கிறதா என்பதற்கு அவரே பதில் சொல்லட்டும். புலி தோல் போர்த்திய ரஜினிகாந்த் எங்களுக்கு வேண்டாம், ''உண்மையான ரஜினிகாந்த்'', ''கலப்படம் இல்லாத ரஜினிகாந்த்'' மட்டும்தான் எங்களுக்கு வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.
ரஜினி இதை ஏன் கேட்கவில்லை
மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழகத்தில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. ஆனால், இதை ரஜினிகாந்த் மறந்துவிட்டார். ஏன் குரல் கொடுக்கவில்லை.